சனி, 21 டிசம்பர், 2013

தமிழகத்திற்கெதிராகத் தொடரும் காங்கிரசின் துரோகம்: கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளுக்குத் தடை.

கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார்.
தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்?
கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்?
தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக்கை பார்த்ததால் நடந்த இத்துரோகத்திற்கு அவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
மறுமலர்ச்சி தி.மு.க. கஸ்தூரி ரங்கன் குழு ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. பரிந்துரைகள் வெளியானதும் வரவேற்றது. பரிந்துரைகளை நிறவேற்றக் கோரி கம்பத்தில் மக்களைத் திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அவை அனைத்தையும் பாழாக்கி கேரள சதிக்கு உடந்தையாகி மத்திய காங்கிரசு அரசு தமிழகத்திற்குத் துரோகத்தைப் பரிசாக வழங்கியுள்ளது.
வைகோ வெல்வதும் டெல்லி செல்வதும் மிக மிக அவசியம் என்பதை உணர்த்தும் நிகழ்வு இது.

தொடர்புடைய சுட்டிகள்:




சனி, 14 டிசம்பர், 2013

விறுவிறுப்பு கட்டுக்கதையும் - காங்கிரஸ், கருணாநிதி சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியமும்.

நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்னையில் ”ஈழத்தமிழர்கள் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு” என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினார்.

ஒட்டுமொத்தத் தமிழகமும் அசந்து போய் அடேங்கப்பா... என்று மூக்கில் விரலை வைக்குமளவுக்கு இலங்கையில் இராசபக்சே அரசு இனப்படுகொலை செய்தது, போர்க்குற்றம் செய்தது, மனித உரிமைகளை மீறியது, மனித குலத்திற்கெதிரான தீங்குகளைச் செய்தது என்றெல்லாம் புகார் வாசித்தார். குதிரை ஓடிவிட்டபிறகு லாயத்தை எதற்கப்பா மூடுகிறான் இந்தக் கோமாளி என்கிற அளவிலேதான் தமிழக மக்களாலும் உலகத் தமிழர்களாலும் பார்க்கப்பட்டது.

இந்திய அரசின் நிலைப்பாட்டை டெல்லியிலே பத்திரிக்கையாளர்களை அழைத்துத் தெரிவிக்காமல் சென்னையிலே ஒரு நட்சத்திர விடுதியிலே மூடிய அரங்கில் ஒரு சில தமிழகச் செய்தியாளர்களை மட்டும் அழைத்து இந்திய அரசின் நிலைப்பாடு என்று ஒரு பித்தலாட்ட அறிவிப்பை வெளியிட்டார் சிதம்பரம். 

தமிழக ஊடகங்கள் மட்டுமே அவர்களது இலக்கு. தி இந்து போன்ற தமிழக ஊடகங்களே கூட சிதம்பரம் பேசிய பேச்சைச் சுத்திகரிப்பு செய்து அதிலே இருந்த இனப்படுகொலை என்கிற சொற்களையெல்லாம் நீக்கிவிட்டு உப்புசப்பில்லாமல் வெளியிட்டு காங்கிரசையும், ப.சிதம்பரத்தையும் விட நாங்கள் இராசபக்சேவுக்கு விசுவாசமானவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டார்கள். வேறு மாநில ஊடகங்களோ, வட இந்திய ஊடகங்களோ இச்செய்தியை வெளியிட்டு இந்திய அளவில் விவாதங்களைக் கிளப்பிவிடாத அளவிற்கு மிகக் கவனமாக ஒழுங்கு செய்தார்கள்.

இது ஒருபுறமிருக்க அதே கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் அல்லக்கை மயிலாடுதுறை கே.எஸ்.அழகிரி வைகோ மற்றும் பழ.நெடுமாறன் குறித்து பல்வேறு அவதூறான செய்திகளைப் பேசினார். அதாவது வைகோ-வும், நெடுமாறனும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குத் தவறான நம்பிக்கையூட்டி அதன் மூலம் ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தடுக்கத் தவறினர் என்பது அவரது குற்றச்சாட்டின் சாரம்.

ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலையை வைகோ-வும், பழ.நெடுமாறனும் தடுக்க இயலவில்லை என்பது புதிய செய்தியா? அவர்கள் கைமீறித்தானே அவ்வளவும் நடந்தது. அவர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்தத்தமிழினமும் இலங்கையிலே நடைபெற்ற போர் நிறுத்தப்படவேண்டும் தமிழ் மக்கள் காக்கப்படவேண்டும் என்றுதானே முட்டிமோதி முயன்றது பிறகு அது முடியாமல் போனது. கருணாநிதி தி.மு.க., சோனியா காங்கிரஸ், இராசபக்சே கும்பல்,போரைத் நிறுத்த முயற்சித்த தமிழர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து அப்படியொரு இனப்படுகொலையை நடத்தி முடித்தது.

ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முயன்றவன் முடியாமல் தோற்றதாலே குற்றவாளி.. ஆனால் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்றவன் நிரபராதியா? எந்த ஊரிலே இப்படியொரு நியாயத்தை மேடை போட்டுப் பேச இயலும். ஆம்... அறம் வளர்த்த, நீதி வளர்த்த தமிழகத்தில் மட்டுமே முடியும்.

அப்படியான அழகிரியின் பேச்சை சிறுபிள்ளைகள் கூட நம்பாத காரணத்தால் அது ஒட்டு மொத்தமாக தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ்காரன்  போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டதாகவும் பிரபாகரன் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் ஒரு புனை சுருட்டை அவிழ்த்து விட்டால் எவனாவது நம்புவானா? போரை நடத்தியதே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதானே?

போரை நிறுத்துவதற்காக சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அந்த நிபந்தனைகளை (வைகோ, நெடுமாறன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்) பிரபாகரன் ஏற்கவில்லை என்றதால் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றோம் என்று ஒரு மத்திய அமைச்சர் வெளிப்படையாகப் பேசியதிலிருந்தே இவர்கள்தான் போரை நடத்தினார்கள் என்பதும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் புலனாகிவிட்டதே..

”காங்கிரசிலே மத்திய அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரமே கட்சியை விட்டும் பதவியை விட்டும் விலகிவிடு இல்லையேல் உன்னைக் கொன்று விடுவோம்” என்று ஒருவன் கூறுவதும், பிறகு பதவி விலக மறுத்ததால் அதே ஒருவன் ப.சிதம்பரத்தைக் கொன்று விட்டானென்றால் அது குற்றமில்லையா?

அவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு நான் விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாததால் கொன்றேன் என்று தனது செயலை நியாயப் படுத்துவானென்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

புலிகள் அமைப்பு உருவானதே தமிழீழ விடுதலை கோரித்தான். அந்தக் கோரிக்கையிலே என்ன தவறு. அந்தக் கோரிக்கையைக் கைவிடு இல்லையென்றால் புலிகள் அமைப்பையும் ஒட்டு மொத்தத் தமிழர்களையும் கொன்று குவிப்பேன் என்றெல்லாம் சொல்லி ஒரு இன அழிப்பை காங்கிரசும், இராசபக்சேவும் கூட்டணி சேர்ந்து நடத்தியதும் அதற்கு கருணாநிதி திமுகவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் துணை போனதற்கும் இந்தக் கருத்தரங்கில் பேசியவையே சாட்சிகளாகும்.

வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக 2010ம் ஆண்டிலேதான் சர்வதேச குற்றவிசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. அதன் விசாரணை முடிவில் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் காதர் முல்லா 12-12-2013 அன்றுதான் தூக்கிலிடப்பட்டார். தூக்குத்தண்டனையையோ, மரண தண்டனையையோ ஆதரிக்காத போதும் போர்க்குற்றங்களுக்குத் தண்டனை உறுதி என்கிற செய்தியை மட்டும் அந்நிகழ்விலேயிருந்து எடுத்துக் கொண்டு நம்பிக்கையைப் பெறுவோம்.

ஆகவே காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இலங்கை இனப்படுகொலையில் தொடர்புடைய ப.சிதம்பரம், கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் அனைவரும் விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப் படுவது உறுதி.

ப.சிதம்பரத்தின் புரட்டரங்கம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர் முகம். 





விறுவிறுப்பு என்னும் இணையதளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கப்பட்டு ரிஷி என்கிற தனிமனிதரால் நடத்தப்பட்டுவரும் இணையதளம் ஆகும். அதற்கென்று தனியாக செய்தி ஆதாரங்களோ, எக்ஸ்குளூசிவான செய்தி மூலங்களோ கிடையாது. உலகமெங்குமிருந்து செய்தியோடைகளில் கிடைக்கும் செய்திகளுக்கு வார்த்தை ஜோடனை செய்து வெளியிட்டு வரும் ஊடகம் ஆகும். தமிழகச் செய்திகளைப் பொருத்தவரை தட்ஸ்தமிழ்தான் இந்த விறுவிறுப்பு தளத்திற்கு முக்கிய செய்தி மூலமாகும்.

ப.சிதம்பரம் நடத்திய புரட்டு அரங்கம் பற்றிய செய்திகள் தமிழக ஊடகங்களில் வெளியானதும் அந்த மொட்டைச் செய்திக்கு கை,கால், கண், காது மூக்கு என்று அங்கங்கள் வைத்து சோர்ஸ், சோர்ஸ் என்று சில நபர்களின் பெயரையும் பிறவற்றை பூடகமாகவும் வைத்து வழக்கம்போல ஒரு கற்பனைக் கதையை சுவராசியமாக அனைவரும் இரசிக்கும் வண்ணம் வெளியிட்டது விறுவிறுப்பு தளம். 

தமிழக மக்களுக்கு எப்போதுமே இருக்கும் இலங்கைப் பிரச்சினை தொடர்பான செய்திகளில் காட்டும் ஆர்வத்தை வைத்தே கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் தளம் இப்படியொரு வாய்ப்பைத் தவறவிடுமா?

அவர்களுக்கு இருக்கும் சோர்ஸ்கள் முழுமையும் இராசபக்சேவிடம் இடம் மாறிய குமரன் பத்மனாபன், கருணா மற்றும் ஜெயராஜ் போன்ற இலங்கை உளவுத்துறையைச் சேர்ந்த சில தமிழர்கள் மட்டுமே. புலிகள் தரப்பிலோ தமிழகத்திலோ அவர்களுக்கு சோர்ஸ் எதுவும் கிடையாது.

விறுவிறுப்பு தளத்திடம் செய்திக்கான சோர்ஸ் இருந்திருக்குமானால் இது போன்ற செய்திகள் முதலில் விறுவிறுப்பு தளத்திலே வெளியாகியிருக்கவேண்டும் பிறகு அதனை மேற்கோள் காட்டி கே.எஸ்.அழகிரி பேசியிருக்க வேண்டும். பிறகு அதனை ஆமோதித்து ப.சிதம்பரம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்பரசண்டிகள் கோட்டைவிட்டுவிட்டார்கள். :-)

வழக்கம்போல செய்தியோடையில் கிடைத்த தகவல்களுக்கு ஜோடனை செய்து விறுவிறுப்பு ஒரு கட்டுக் கதையை வெளியிட அதிலுள்ள உள்பொருள் என்ன? இல் பொருள் என்ன? என்பது பற்றி எதுவும் ஆராயாமல் என்னவோ அக்கட்டுரை வைகோ-வுக்கும் பழ. நெடுமாறனுக்கும் எதிராக இருப்பதாகக் கருதிக் கொண்டு பரபரவென்று அதைப் பகிர்ந்து வருகிறார்கள் கருணாநிதி தி.மு.கவினர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி இரசிகர்கள். 

ஆனால் அந்தக் கட்டுரை முழுவதுமே சொந்தச் செலவில் சூனியம். எப்படி?

1. விடுதலைப் புலிகளை அவர்களது அடிப்படை உரிமைக் கோரிக்கையைக் கைவிடுமாறு இந்திய அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோர் மிரட்டல் விடுத்து ”பிளாக் மெயில் செய்தது உண்மையென்றாகிறது.

2. அவ்வாறான ஒரு மிரட்டல்/ “ப்ளாக் மெயிலுக்கு” விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒத்துக் கொள்ள, அடிபணிய மறுத்ததால் இராசபக்சேவுடன் சேர்ந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இந்திய காங்கிரஸ் அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி திமுக ஆகியோர் துணையுடன் இனப்படுகொலை செய்து முடித்ததும் உண்மையென்றாகிறது.

3. தமிழீழக் கோரிக்கை நியாயமானது என்று இலங்கையில்  இப்போதுள்ள நிலைமையும் கூட நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டிவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல வைகோ, பழ நெடுமாறன் ஆகியோரும் தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு என்று நம்பியதோடு எந்த நிலையிலும் அதனை விட்டுத் தரத் தயாராக இருந்தது இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. வைகோ-வும் நெடுமாறனும் இன்றும் சொல்லிவரும் அதே கொள்கையைத்தான் அன்றும் சொல்லியிருக்கின்றனர். அதிலென்ன தவறு? கொள்கையைச் சொன்னால் கொன்று விடுவேன் எனச் சொல்லி மிரட்டியதும் மிரட்டலுக்கு அடிபணியாததால் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததும்தானே தவறு? 

4. இறுதிவரை வைகோ-வும் பழ.நெடுமாறன் அவர்களும்தான் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆதரவு தருபவர்களாகவும் இருந்தனர் என்பதும் புதிதாய் முளைத்த காளான்கள் அண்ணன் சொன்னார், அண்ணன் சொன்னார் என்று சொல்வதெல்லாம் புருடா என்பதும் புலனாகிறது.

5. ப.சிதம்பரம், கருணாநிதி, கனிமொழி ஆகியோர் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவற்றிற்குத் துணைபோனவர்கள் என்பதும் உறுதியாகிறது. பின்னாளில் போர்க்குற்ற விசாரணை நடைபெறும்போது இவர்கள் பேசியதெல்லாம் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்பது உறுதி.

வியாழன், 12 டிசம்பர், 2013

இ.பி.கோ. 377 ஓரினச்சேர்க்கைக்கு மட்டுமா தடை விதித்தது? மனித உரிமைகளுக்கல்லவா விடை கொடுத்தது!

நேற்று 11-12-13 அன்று இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆம். இந்தத் தீர்ப்பு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிந்து வைக்கப்படும்.

படம் உதவி:  Manjul Toons

இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல என்பது பல்வேறு தருணங்களில் மெய்ப்பிக்கப்பட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை அதே உண்மையை நம் கண் முன்னே கெக்கலி கொட்டிக் காண்பிக்கப் பட்ட நாள்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள். இனிமேலும் இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்று யாரேனும் சொல்ல முடியுமா?

பிரச்சினை இதுதான். இந்திய உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது.

எந்த அடிப்படையில்?

1. எயிட்ஸ் பரவும் வாய்ப்பு.

ஆண் - பெண் விபச்சார உடலுறவால் 4.94% 
ஆண் - ஆண் உடலுறவால் 7.23%
ஊசி மருந்து பயன்படுத்துபவர்களிடையே 10.30%
என அவர்களது தீர்ப்பிலே ஒரு புள்ளிவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிபரங்கள் சரியாக இருந்தால் கூட அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் உள்ளடிக் கருத்துடையது. 

ஆண் பெண் உடலுறவில் விபச்சாரத்தின் மூலமாக மட்டுமே அதாவது ஒரு ஆண் பல பெண்களுடனோ அல்லது ஒரு பெண் பல ஆண்களுடனோ உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அதுவும் “பாதுகாப்பற்ற” உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே எயிட்ஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் எயிட்ஸ் வருவதற்கோ, பரவுவதற்கோ வாய்ப்பில்லை.

ஆண் - ஆண் உறவும் அத்தகையதே என்பதை எளிதாக மறந்து விட்டு ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்-ஆண் உறவிலும் எயிட்ஸ் பரவும் என்பதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்ன? ஆண்-ஆண் உறவிலும் ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவில் எயிட்ஸ் பரவ வாய்ப்பில்லை. ஒரு ஆண் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும்கூட பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுமாயின் அங்கே எயிட்ஸ் என்கிறபேச்சுக்கே இடமில்லை. ஆண்-ஆண் உறவு என்பதே விபச்சாரம் என்பது போலச் சித்தரிப்பது முட்டாள்த்தனமானது. ஆண்-ஆண் உறவிலும் பெருமளவு ஒருவனுக்கு ஒருவன் என்பதும் ஆண்-பெண் உறவை விட அதிக அளவு “பொசசிவ்” ஆன உறவுகள் என்பதும்தான் உண்மை. ஆண் ஆண் உறவில் துரோகமிழைக்கப்படுமாயின் கொலை வரை நீண்ட சம்பவங்கள் பலவற்றை நாம் கேட்டிருக்கிறோம். ஆக எயிட்ஸ் என்கிற வாதம் எளிதில் அடிபட்டுப் போய்விடுகிறது.

ஆண் -பெண் ஒருவருக்கொருவர் சம்மதத்தோடு உறவு கொள்வதில் தவறில்லை. உறவின்போது பாதுகாப்பைக் கடைப்பிடியுங்கள் உறையைப் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துவது போலவே ஆண் -ஆண் நண்பர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும்.

2. இயற்கைக்கு மாறான உடலுறவு

ஆண்-ஆண் உறவு இயற்கைக்கு மாறானதுதான். அதே நேரத்தில் இயற்கைக்கு மாறான எதை மனிதன் செய்யவில்லை அதில் எதை இந்தியச் சட்டம் அனுமதிக்கவில்லை என்கிற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்.

அடிப்படையில் உடையணிவதே இயற்கைக்கு மாறானதுதான். அம்மணமாகத் திரிவதுதான் இயற்கை.

பிற விடயங்களை விட்டுவிடுவோம் பாலுறவு குறித்த வகைகளிலேயே ஆண், பெண் சுய இன்பம் மற்றும் பெண்-பெண் உறவு போன்றவைகூட இயற்கைக்கு மாறானவை தானே? சுய இன்பத்தையோ, பெண்-பெண் கூடுவதையோ தடை செய்யவோ ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கவோ நீதி மன்றங்கள் முன்வருமா? :-) 

பெண்-பெண் கூடுவதிலோ, சுய இன்பத்திலோ உறுப்புகளுக்கிடையே “பெனிட்ரேசன்” இல்லை எயிட்ஸ் வர அல்லது பரவ வாய்ப்பில்லை எனக் கருதுவோர் மீண்டும் மேலே உள்ள பத்தியைப் படிக்கவும். பாதுகாப்பான உறவிலோ, ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவிலோ எயிட்ஸ் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

ஒரு ஆணுக்கு ஆணோ.. பெண்ணோ.. யார் நண்பராக இருப்பதென்பதையும் அவர்களுக்கிடையேயான நட்பு எந்த அளவுக்கு இருக்கவேண்டுமென்பதிலோ நீதிமன்றம் எவ்வாறு தலையிடமுடியும்?

ஆக.. எந்த முகாந்திரமுமில்லாமல் ஏன் இந்தத் தீர்ப்பு? இங்கேதான் மத அடிப்படைவாதிகள் வருகிறார்கள். வழக்கமாக நீதிமன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் எல்லா மதவாதிகளும் இவ்விடயத்தில் ஒன்றாகக் கைகோர்த்துள்ளனர். எல்லா மதப் புத்தகங்களிலும் ஆண்-ஆண் உறவு தவறானது என அறிவிக்கப்படுள்ளதாம். மனித உரிமைகளைவிட மத உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடு எவ்வாறு மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியும்.

நீதி மன்றங்களிலே வாதிகள் இருவர் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பின் அரசு வாக்குகளைக் குறிவைத்து மதச்சார்பற்ற நிலை எடுத்து நூறாண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கும் அரசும், நீதிமன்றமும் மதவாதிகள் ஒன்று சேர்ந்து வரவும் மனித உரிமைகளின் மென்னியை முறிக்கிற வேலையில் இறங்கிவிடுகின்றன. இனி எவராவது இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொல்ல இயலுமா? மத அடிப்படைவாதிகளை மகிழ்விக்க உச்சநீதிமன்றம் இப்படியொரு பிற்போக்கான தீர்ப்பை வழங்கியதன் உலக அரங்கிலே மிகப்பெரும் தலைகுனிவைச் சந்தித்துள்ளது இந்தியா.

எத்தனையோ மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகள் மூலையில் கிடக்க இனி பாராளுமன்றத்திலே அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே மனித உரிமை காக்கப்படும் துர்பாக்கிய நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது இந்திய உச்சநீதி மன்றம்.

இந்திய சமூகத்தில் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதென்பதே இன்னும் ஏட்டளவிலேதான் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலே காதலென்றாலே குடும்ப கவுரவம், சாதி, மதம் லொட்டு லொசுக்கு எனச் சொல்லி கிட்டத்தட்ட அத்தனை காதலும் நசுக்கப்படுகிறன. அனைத்துக் காதலும் கள்ளத்தனமாகச் செய்ய வேண்டிய இழிவான நிலையிலேதான் வைத்திருக்கிறது இந்திய சமூகம். இதிலே நீதி மன்றங்கள் வந்து பாலியல் வறட்சியில் தவிக்கும் ஆணுக்கு வேற்று பாலின இணையை அதாவது பெண்களைப் பிடித்துத்தரும் வேலையைச் செய்து தருமா? மூன்றாம் பாலின நண்பர்கள் இருவரோ அல்லது வேறு ஆணுடனோ சேர்ந்து வாழ்வது குற்றம் என்று சொல்ல முடியுமா?

அப்படியென்றால் நீங்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறீர்களா என்று என்னைக் கேட்டீர்களானால் எனது பதில்... அதிலே ஆதரிக்கவோ.. எதிர்க்கவோ ஒன்றுமில்லை என்பதுதான்.

திங்கள், 9 டிசம்பர், 2013

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் - ஒரே தொகுதியில் போட்டியிடத் திராணியிருக்கிறதா?



ஜெயலலிதா ஆட்சியமைத்தால் கருணாநிதியும் கருணாநிதி ஆட்சியமைத்தால் ஜெயலலிதாவும் சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. இதற்கிடையில் திடீர் உப்புமா, திடீர் நூடுல்ஸ் போல திடீரென்று எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தும் அது என்னவோ சட்டப்பேரவைக்குச் செல்லாமல் இருப்பது ஒரு பெருமை எனக் கருதிக் கொண்டு சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. 

துளியும் வெட்கமோ, கூச்சமோ இன்றி மாதாமாதம் கையெழுத்திட்டு சம்பளம் வாங்கத் தயங்குவதேயில்லை இந்த வெற்று உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்ற தொகுதி என்கிற வகையில் ஆளுங்கட்சியால் எவ்வித நலத் திட்டங்களுமின்றி புறக்கணிக்கப் பட்டு இவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் எவ்விதப் பயனுமின்றிப் போகிறது. 

கடந்த காலங்களிலெல்லாம் கட்சி தோற்றாலும் வென்றாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும். தலைவர் என்கிற முறையில் ஜனநாயகக் கடமையாற்றுகிற வாய்ப்பைத் தருகிற அரசியல் நாகரீகம் வேண்டும் என்கிற வகையில் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுகிறவர்கள் எதிரும் புதிருமாக ஒரே தொகுதியில் போட்டியிடுவது தவிர்க்கப்பட்டு வந்தது.

இப்போது நாகரீகமாவது புடலங்காயாவது. ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதுமில்லை. சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி அவைக்கு வருவதில்லை.

பிறகென்ன ”டேசு”க்கு இவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவி?

கட்சி தேர்தலில் தோற்குமானால் தலைவரும் தோற்று வீட்டிலே இருக்கவேண்டியதுதானே.. தலைவர்கள் என்கிற பெயரில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் செல்லாமல், ஒரு உறுப்பினர் பதவியையும் வீணாக்கி, மாதாமாதம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தைத் தண்டச் சம்பளமாக ஏன் வாங்க வேண்டும்.

இதுதான் நிலைமை என்றால் வரும் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற அனைவரும் தங்கள் திராணியை நிரூபிக்க வேண்டும்.

டெல்லியிலே தமிழகத்தைப் போல சட்டப்பேரவைக்கே வராமல் தண்டச் சம்பளம் வாங்குவார்களா என்பது தெரியாது, இருந்தபோதும் அதுபோல ஒரு முயற்சி நடந்துள்ளது பாராட்டுகள். பா.ஜ.க முதல்வர் வேட்பாளரும் சீலா தீட்சித், மற்றும் கேசரிவாலுடன் மோதியிருக்கலாம். 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காமன்வெல்த்: தி.மு.க.-காங். நாடகம். ”அரங்கேற்ற வேளை” இப்போது.. ”அறுவடை நாள்” எப்போது?

பொதுநலவாய மாநாடு இனப்படுகொலை நாடான இலங்கையில் நடத்தப்படக் கூடாது, பொதுநலவாய அமைப்பிலிருந்து (தற்காலிகமாகவாவது) இலங்கை நீக்கப்படவேண்டும், அப்படியே அம்மாநாடு இலங்கையிலே நடைபெற்றாலும் கூட இந்திய அரசு அம்மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து இந்திய அரசு எப்போதும் மனித நேயத்தின் பக்கமே நிற்கும் என்று உலகிற்கு உரத்த குரலில் உரைக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கையாக இருந்தது.

இனப்படுகொலையில் இலங்கைக்கு துணைபோன கூட்டுக் குற்றவாளியான இந்தியா எப்படி மேற்கண்ட கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் என்பது அனைவரின் ஐயமும் அச்சமுமாக இருந்ததும் உண்மைதான்.

இலங்கை அரசின் மீது இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என எந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபையிலோ, உலக நாடுகள் மத்தியிலோ  பேச்சு எழுந்தால் கூட துடித்துப்போய் களமிறங்கி இலங்கையைக் காப்பாற்ற அத்த்னை முயற்சிகளையுமெடுத்து வருவது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை ஆணையத்திலே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால், தீர்மானம் வருவதைத் தடுக்க முனைவதும் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் மேற்குலக நாடுகளின் நெருக்கடியால் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால் அத்தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்து இலங்கையைக் காப்பாற்றியதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகக் கண்டோம்.

இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் காரணமாகக் காட்டி ஐரோப்பிய நாடுகளிலே இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகள், கடன் அல்லது உதவித் தொகைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படுமேயானால் இலங்கை அதிபர் இராசபக்சே மற்றும் அவரது பரிவாரங்களை இந்தியா வரவழைத்து விருந்து உபச்சாரங்கள் நடத்தி நாங்கள் இலங்கையின் பின்னே இருக்கிறோம் என அந்த நாடுகளைக் கேலி செய்ததும் நடந்தது. இந்தியாவிலிருந்து தமிழகத் துரோகக் கும்பலைச் சேர்ந்த தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் குழுவினை அனுப்பி அங்கே அனைத்தும் சிறப்பாக உள்ளது என இலங்கை அரசுக்குச் சான்றிதழ்கள் வழங்கி அந்தச் சான்றிதழ்களை இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுத்த நாடுகளின் முகத்திலே இலங்கை அரசை வீசச் செய்து அந்நாடுகளை அசிங்கப் படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

வேறு எவ்வகையில் இலங்கை அரசைக் காப்பாற்றுவது எனத் திட்டமிட்டு இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 54 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பிலே இராசபக்சேவை அமரவைத்துவிட்டால் எதிர்காலங்களில் எந்த உலகநாடுகளின் அமைப்புகளிலும் இலங்கை அரசை, இராசபக்சேவைத் தண்டிக்க முடியாது எனகிற நோக்கத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு துவங்கியதன் விளைவுதான் இந்த காமன்வெல்த் அரசுகளின் தலைவர்களுக்கான மாநாடு.

தமிழகத்தின் மாணவர் எழுச்சி மற்றும் மக்கள் போராட்டங்களின் விளைவாக காங்கிரசுடன் சேர்ந்து துரோகங்கள் பல புரிந்த தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக ஒரு அப்பட்டமான நாடகத்தை நிறைவேற்றி அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரசைக் காப்பாற்றுகிற வேலையிலே ஈடுபட்டு வந்ததையும், வரப்போகின்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதையும் நாம் பார்க்கிறோம்

இப்பொது காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடத்தப்படக்கூடாது, அப்படி நடந்தாலும் இந்திய அரசு கல்ந்துகொள்ளக்கூடாது என்ற ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனிமைப் பட்டுப் போவதைத் தவிர்க்க தாங்களும் இதே கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும், இந்திய அரசுக்கு நெருக்கடி தருவதாகவும் “உள்ளே வெளியே” நாடகமாடி வந்தன.

அந்த நாடகம் இப்போது முழுமையாக நிறைவேறப் போவதாகத் தெரிகிறது. அதாவது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லையாம்.. ஆனால் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட படை பரிவாரங்களனைத்தும் கலந்து கொள்ளப்போகிறார்களாம். துரோகிகள் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என எதிர்பார்க்கப் பட்டதுதான். 

பிரதமர் கலந்து கொள்வதா வேண்டாமா என்பதை அறிவிக்க கடைசி நிமிடம் வரை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியப் பிரதமர் ஏன் கலந்து கொள்ளவில்லை என உலக நாடுகள் கேள்விகள் எழுப்பும். அதற்கான காரணங்களை அலசும். ஏற்கனவே கனடா கலந்து கொள்ளாது என அறிவித்தபோது இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்படுத்திய விவாதங்கள் போன்று நடைபெற்றுவிடக் கூடாது என்கிற நயவஞ்சக நோக்கமின்றி வேறென்ன?

இந்திய அரசின் இத்தகைய செயல்பாடு ஒரு மன நோயாளி செய்வது போலல்லவா இருக்கிறது. தமிழக மக்களின் போராட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் கலந்து கொள்வது தவிர்க்கப் பட்டிருந்தாலும் அதற்கான பலன்கள் தமிழர்களைச் சென்றடையக்கூடாது என்கிற கொடிய நோக்கத்துடனல்லவா செயல்படுகின்றன. தமிழர்களுக்கு அவ்வாறு சிறு பலன்களும் கிடைப்பதைத் தடுக்கிற நோக்கிலேதான் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நாடகமாடி வருகின்றன.

இந்திய அரசு பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை? இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையா? இலங்கையிலே நடைபெற்ற போர்க்குற்றங்களா? இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களா?

இவையெதுவுமில்லையென்றால் As I am suffering from fever, i am unable to attend போலவா என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். 

கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் என்ன ______க்காகச் செல்கிறார். ஏற்கனவே தமிழக காங்கிரசு அமைச்சர்களால் வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது போல இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கெதிராக இலங்கை அரசு மற்றும் இராசபக்சே மீது அனைத்துலக நாடுகளால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப் படவேண்டுமென பேசப்போகிறாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

தி.மு.க., வி.சி.க., காங்கிரசுக் கூட்டணியின் நாடகங்களில் புதிய அத்தியாயமான காமன்வெல்த் அத்தியாயம்  அரங்கேறும் வேளை வந்திருக்கிறது. ”அரங்கேற்ற வேளை” ஒருநாள் வந்தால் ”அறுவடை நாளும்” வந்துதானே தீரும்.

துரோகத்தைப் பரிசளித்தவர்களுக்கு திருப்பிச் செலுத்துகிற வாய்ப்பு 2014 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கருணாநிதி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அதை நியாயப் படுத்த என்ன காரணம் சொல்வார்?




OPTIONS:

A) பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியல்ல. தி.மு.க. தீண்டாமைக்கு எதிரான இயக்கம்.


B) பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோமே தவிர நாங்கள் மோடியை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெற்றுச் செல்லும் கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மோடியை ஆதரித்து வாக்களித்தாலும் விவாதங்களில் ஆதரிக்க மாட்டார்கள்.

C) கடந்த பத்தாண்டுகளாக எவ்வாறு முந்திக்கொண்டு காங்கிரசோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க போன்ற பிற கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடுத்தோமோ அதே வகையில் இப்போதும் பிற கட்சிகள் பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதைத் தடுக்கவே தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் இவ்வாறு பா,ஜ,கவோடு கூட்டணி வைக்கவில்லையெனில் வேறு கட்சிகள் கூட்டணி வைத்து அதனால் ஜனநாயகத்திற்குப் பெரும் தீங்கு விளைந்திருக்கும் என்பதை நாடறியும். ஏடறியும்.

D) குஜராத்திலே மதக்கலவரங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மோடியோ குஜராத்திலே முதல்வராக இருக்கிறார். நாம் குஜராத் சட்டசபையிலே சென்று அவரைக் கேள்விகேட்க நமக்கு அங்கே உறுப்பினர்கள் இல்லை. ஆகவே, மோடியைப் பிரதமரானால் அதன்மூலம் அவர் நாடாளுமன்றத்தில் அமருகிற நிலை உருவாகும். நாடாளுமன்றத்திலே இருக்கும் நம் கழக உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக குஜராத் மதக்கலவரங்கள் குறித்து கேள்வி கேட்கிற வாய்ப்பு ஏற்படும் என்கிற உன்னத நோக்கத்தினாலேதான் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துள்ளோம்.

E) டெசோ அமைப்பிலே காங்கிரஸ் பங்குபெறாததைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து வெளியேற முடிவெடுத்தோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் டெசோ அமைப்பிலே அவர்கள் சேர வாய்ப்பிருக்கிறது என்கிற உறுதிமொழியை அவர்கள் எதிர்காலத்திலே வழங்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நமக்கு இல்லாமலில்லை. அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்தக் கூட்டணி அமையவிருக்கிறது.

F) காங்கிரஸ் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அந்தந்த ஊழல்கள் தொடர்பாக ஆங்காங்கே விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருவதாக கழக உடன்பிறப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படிப்பட்ட தகவல்கள் நம் பொதுச்செயலாளர் மற்றும் நம் பொருளாளர் அவர்கள் கவனத்திற்கும் எடுத்துவரப்பட்டு அதே தகவல்கள் நம் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் விவாதிக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டு இருக்கிற சூழலிலே நாம் இன்னமும் காங்கிரஸ் கூட்டணியிலே தொடர வேண்டுமா? என்கிற கேள்விகள் எழாமலிருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் அதனைப் புறந்தள்ளிவிடவும் வழியின்றி ஒரு முடிவெடுத்திட வேண்டிய காலகட்டத்தில் நம் கழக கண்மணிகளாம் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பொய்யான குற்றசசாட்டுகளின் அடிப்படையிலே சிறையிலே அடைக்கப்பட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலைகளையும் கருத்திலே கொண்டு காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் அதற்கு மாற்று என்கிற வகையிலே வேறு எந்தத் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கமுடியும் என்கிற பல்வேறு விவாதங்கள் நடைபெற்று அதிலே என்னென்ன முடிவுகளெடுக்கப்பட்டன என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதென எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்வதே கழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதெனக் கருதி பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

G) மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும்.

சனி, 2 நவம்பர், 2013

தமிழக அரசே... தோழர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்.





இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அதனைத் தடுத்திட இந்திய அரசு முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் கோரிக்கை வைத்தும் இந்திய அரசு செவி சாய்க்காமல் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோல வெளியுறவு அமைச்சர் வாயிலாக அந்நிகழ்விலே கலந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டி தமிழக மக்களின் பொறுமையின் ஆழத்தைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். 

மத்திய அரசைக் கண்டிக்க வன்முறையைக் கையிலெடுப்பதை எந்நிலையிலும் ஆதரிப்பதற்கில்லை.

இவ்வாறான பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தி.வி.க. தோழர்கள் ஈடுபட்டிருப்பார்களேயானால் அவர்கள் செய்யும் செயலின் தீவிரம் என்ன? அதன் பின் விளைவுகள் என்ன என்பதை அறிந்தே செய்திருப்பார்கள். இது போன்ற செயல்களைச் செய்து சிறை செல்வதை தியாகம் என நினைத்திருப்பார்களேயானால் அவர்களின் தியாகத்தை மதித்து அவர்களைச் சிறையிலடைத்து அவர்களின் தியாகத்தை அரசு முழுமையடையச் செய்வதே சரியாகும். ஆகவே திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தான் செய்திருப்பார்களேயானால் அவர்கள் கைது செய்யப்படுவதிலோ வழக்கைச் சந்திக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்கப் போவதில்லை. 

ஏற்கனவே ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு இந்திய அரசும் காங்கிரசு, கருணாநிதி தி.மு.க. கூட்டணியின் துரோகத்தைக் கண்டித்தும், ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்புச் செய்த காரணத்தால் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 18 தமிழர்கள் வன்முறையில் ஈடுபடாமல் உச்சபட்ச தியாகமான தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் அதன் பயனாக இந்திய அரசும், ஊடகங்களும், துரோகக் கும்பலும் திருந்திவிடாதா என்ற ஏக்கத்துடனே இறந்து போயினர். அவர்கள் தியாகங்களும் வீணாகப் போயின.

மேலும் மேலும் துரோகங்களைப் பரிசளிக்கும் இந்திய அரசையும் அதன் தமிழகக் கூட்டாளிகளையும் கண்டித்தோ அவர்களின் கேளாக் காதுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டோ இனியும் எவரும் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயல்வது ஒருவகை முட்டாள்தனமென்றால், வன்முறைச் செயல்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முயல்வது வேறுவகை முட்டாள்தனம்.

மத்திய அரசு அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் தி.வி.க. தோழர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களைக் கைது செய்திருப்பது அடாத செயல்.

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மிகவும் கண்ணியமானவர், அதிர்ந்து பேசக்கூடத் தெரியாதவர். மிகவும் ஆத்திரமூட்டும் விவாதக் களங்களேயானாலும் ஆத்திரப்படாமல் அறிவுப்பூர்வமாக தன் கருத்துக்களைப் பாங்குடனே எடுத்து வைக்கிற பக்குவப்பட்டவர்.

ஒருவேளை தொண்டர்கள் செய்த(?) சில செயல்களுக்காக தலைவர் கைது செய்யப்படுவதுதான் சரியென்றால்

பல்லாயிரம் கோடி ரூ. 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

தா.கிருட்டிணன் கொலை வழக்கிலே கருணாநிதியோ, மு.க.ஸ்டாலினோ கைது செய்யப்பட்டார்களா? 

கிரானைட் கொள்ளை வழக்கிலே கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிலே ஜெயலலிதா ஏன் கைது செய்யப்படவில்லை?

தமிழீழத்திலே ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்விலே தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் பொய் வழக்கில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

தமிழக அரசு இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடாமல் தோழர் கொளத்தூர் மணி அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

தலைவா திரைப்படம் : உன் குத்தமா? என் குத்தமா? யாரை நானும் குத்தஞ்சொல்ல?

விஜய் நடித்து கடந்த வெள்ளியன்று வெளிவரவேண்டிய தலைவா திரைப்படம் வெளியாவது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர் தரப்போ, இயக்குனர் விஜய், நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவோ, திரைப்படத்தை வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள் தரப்போ அல்லது தமிழக அரசின் தரப்பிலோ வெளிப்படையாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக இன்னதென்று இல்லாமல் அனைத்து விவகாரங்களிலும் உள்நுழைந்து உண்மைகளை அவரவர் பாணியிலே வெளிக்கொணரும் புலனாய்வு இதழ்களும் இவ்விவகாரத்தில் மிகவும் அடக்கி வாசிக்கின்றன.


ஆனால் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்தும் சமூக வலைத்தளங்களில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களை வைத்தும் நாம் சிலவற்றை அனுமானிக்க முடிகிறது.

தலைவா திரைப்படம் படம் வெளியிடப்படாமல் நிற்பது குறித்து வெளியான வெடிகுண்டு மிரட்டலில் சிறிதும் உணமையிருப்பதாகக் கருதவில்லை. திரைப்படத்திற்கு எப்படியும் வரிவிலக்கு பெற்றுவிடுவோம் என்று வாக்குறுதி தந்து தயாரிப்பாளர் பெருந்தொகையை திரையரங்க உரிமையாளர்களின் லாபக்கணக்கில் காட்டி கூடுதல் விலைக்கு விற்றுவிட்டார். தமிழக தணிக்கைக்குழு படத்திற்கு ”யு” சான்றிதழ் வழங்கவில்லை.”யு” சான்றிதழ் பெறாத படங்கள் வரிவிலக்குக்கு பரிசீலிக்கப்படுவதில்லை. படக்குழு வேறு மாநிலத்தில் சென்று ”யு” சான்றிதழ் “வாங்கி” வந்து விட்டது. அதன்பின்னரும் தமிழக அரசின் வரிவிலக்குப் பரிசீலனை செய்யும் குழுவில் அனைவரும் இப்படம் வரிவிலக்கிற்கு ஏற்றதல்ல எனப்பரிந்துரை செய்த ஆவணங்களை தமிழக அரசே வெளியிட்டிருந்தது. இப்போது திரையரங்கங்கள் வரி செலுத்தினால் அவர்களுக்கு நட்டம் (அ) இலாபத்தில் குறைவு. அவர்கள் வரி செலுத்தி படத்தை வெளியிடத்தயாராக இல்லை. தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டால் அவருக்கு இழப்பு. தயாரிப்பாளர் படத்தை விற்றுப் பணத்தைக் கல்லாவில் போட்டுவிட்டார். மார்வாடிகளின் கல்லாவில் சென்றபணம் திரும்புமா? இதிலேதான் படம் இடையில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழக அரசு சலுகை செய்து வரிவிலக்கு அளித்துவிட்டால் தயாரிப்பாளர் தரப்புக்கும் இழப்பில்லை. திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பில்லை. வரி விலக்கு சலுகையளித்தால் யாருக்கு இழப்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தமிழக அரசுக்குத்தான். 

ஆக, தலைவா திரைப்படம் வெளியாகாமல் சிக்கி நிற்பது தமிழக அரசின் வரிச்சலுகையை எதிர்பார்த்துதான். சலுகையை எதிர்பாக்கும் இவர்கள் எப்படி அரசை முறைத்துக்கொள்ள முடியும். அரசைக் கண்டித்தோ எதிர்த்தோ போராட்டம் நடத்த முடியும்? ஒருவேளை அப்படிப் போராட்டம் நடத்தினால் அரசு சலுகை வழங்கி விடுமா?

சரி நடிகர் விஜய் தரப்பில் என்ன தவறு நிகழ்ந்தது? ஒருவேளை அவரும் தயாரிப்பில் தலையிட்டு வரிவிலக்கு உத்தரவாதமளித்து திரையரங்க உரிமையாளர்கள் தலையில் கட்டியிருப்பாரேயானால் அவருக்கும் படம் வெளிவருவதில் ஏற்பட்ட சிக்கலில் பங்கு உண்டு. ஆனால் விஜய் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை. நடித்துக் கொடுத்ததுடன் கடமை முடிந்ததுபோலத்தான் செயல்படுகிறார். வெளியீட்டு நாளன்று ரசிகர்மன்ற காட்சிகள், பதாகைகள் என்பன போன்ற செயல்பாடுகள் வழக்கமானதுதான்.  பிறகு வெளியிடப்பட்ட வீடியோ அறிக்கை கூட ஏதோ நிர்ப்பந்தத்தால் பேசியதுபோலத்தான் தோன்றியது. உண்மையிலேயே விஜய் தரப்பிற்கு ஏதேனும் நெருக்கடியிருக்குமெனில் நிச்சயம் ரசிகர்களைத் திரட்டி போராடக்கூடிய அளவிற்கு அமைப்பு பலம் அவர்களிடமிருக்கிறது. அவர் அதில் முனைப்பு காட்டாததிலிருந்து விஜய் தரப்பில் எதுவும் பிழையிருக்க வாய்ப்பில்லை எனப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் வருகிற இழப்பை அடுத்த படத்தில் சரிக்கட்ட விநியோகஸ்தர்கள்/ திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தக்கூடும். அதுவொன்றும் அவருக்குப் பெரிய விசயமில்லை. துப்பாக்கி திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அடுத்த படத்தில் விஜய் முஸ்லிமாக நடிப்பார் என்கிற அற்புதமான டீலிங்கைப் போட்டு படத்தை வெளியிட்டவர்தானே? இதெல்லாம் அவருக்குத் தூசு.

தயாரிப்பாளர் செய்தியாளர் சந்திப்பிலும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. தமிழக அரசு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசியதும் அரசிடமிருந்து சலுகை எதிர்பார்ப்பதுபோலத்தான் இருந்தது.

படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்திருப்பதாகவும் தெரியவில்லை. அப்படித் தடை விதிக்கப்பட்டிருக்குமேயானால் ஏன் தடை? எதற்காகத் தடை? என்பதையெல்லாம் அரசே வெளியிட்டிருக்கும். அப்படியே காரணம் சொல்லவில்லையென்றால் தயாரிப்பாளர் தரப்போ, படக்குழுவோ, வெளியாட்களில் ஒருவரோ கூட காரணத்தை  வெளியிட நிர்ப்பந்திக்கலாம். அதையும் மீறினால் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அரசை நிர்பந்தம் செய்ய வழியிருக்கிறது.

வெடிகுண்டு புரளியெல்லாம் உண்மையாக இருந்தால் கூட வைத்து பத்து நாட்களாக ஏசி திரையரங்குகளிலும், பெய்த மழை காரணமாகவும் வெடிகுண்டெல்லாம் நமத்துப் போயிருக்கும். மிரட்டல் விடுத்தவனே படத்தைப் போட்டுத் தொலைங்கடா என்று வெறுத்துப்போயிருப்பான்.  இப்போதும் வெடிகுண்டு மிரட்டலுக்காக என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்லுமேயானால் நம் ஒவ்வொருவர் காதிலும் ஒன்றரை முழம் பூவைச் சுத்துகிறார்கள் என்று பொருள்.

திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும், தமிழக மக்களும் கட்டுகின்ற வரியை அரசுக்குச் செலுத்தாமல்  ஒரு சில மனிதர்கள் மிகுதியாகச் சம்பாதிக்கும் பொருட்டு கல்லாக்கட்ட அனுமதிக்க வேண்டுமா என்கிற சிந்தனையோடு...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சேது சமுத்திரத் திட்டத்தில் கருணாநிதியின் அந்தர் பல்டிகள்




சேது சமுத்திர நாயகன் வைகோ அவர்களால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கபட்டு மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் வந்தபோதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த திட்டம் சேது சமுத்திரத் திட்டம். 

அத்திட்டத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் இடற்பாடுகளை நீக்கி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்றப்படவேண்டுமென்பதே ஆரம்பத்திலிருந்தே மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் வைகோ அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துத் துறையைக் கையில் வைத்திருந்த தி.மு.க. அத்திட்டத்தை மக்கள் நலத்திட்டமாகக் கருதாமல் பணம் கொழிக்கிற, பொன்முட்டையிடுகிற வாத்தாகக் கருதி திட்டத்தைக் குறித்த காலத்தில் முறையான வழிகளில் மீனவர்களுக்கு இடையூறின்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பின்றி நிறைவேற்றிட முன்வரவில்லை. இழுத்துக் கடத்தியதோடு மட்டுமல்லாமல் சரியான திட்டமிடலுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கிற செயலிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தராமலும் அத்திட்டத்தின் ஒப்பந்தங்களில் ஊழல் செய்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தது.

இத்திட்டத்தில் கருணாநிதி கும்பல் செய்த கையாடல் ஒருபுறமிருக்க அவ்ர்களின் வாயாடல் இத்திட்டத்திற்கு பெரும் பின்னடவைத் தந்தது. ஆம் வரம்புமீறிப் பேசி எந்த இந்துத்துவ பாரதீய ஜனதாக்கட்சியைச் சார்ந்த பிரதமரான வாஜ்பாயைச் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வைகோ அறிவிக்கச் செய்தாரோ அதே இந்துத்துவ சக்திகளனைத்தையும் சேதுத் திட்டத்திற்கு எதிராகத் திருப்பினார் கருணாநிதி.

இராமர் பாலம் என்கிற காரணத்தைக் காட்டி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்தை முடக்கிப்போடுவதில் மும்மரமாக நின்றவர் கருணாநிதியின் மதவெறுப்புக் கருத்துக்களால் தூண்டிவிடப்பட்ட சுப்பிரமணியசாமி. 

இதே சுப்பிரமணிய சாமியிடம் 2ஜி அலைவரிசை ஊழல் வழக்கில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட கருணாநிதி கும்பல் இதுவரை வழக்குத் தொடர்ந்து சேதுத் திட்டத்தை முடக்கிப்போட்ட சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருப்பார்களா? தி.மு.க. என்கிற கட்சி எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற அளவுக்கு சுப்பிரமணியசாமி என்ன பெரிய ஆளா எனக் கேட்கலாம். சரி கருணாநிதிக்கு சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிடக்கூட துணிச்சலில்லாமல் போனது ஏன்? அறிக்கை வெளியிட துணிச்சலில்லையா? பரவாயில்லை எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போட்டு வைத்துள்ளார்களோ அதே நீதிமன்றத்தில் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நாங்கள் எனவே எங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி சுப்பிரமணியசாமியின் வாதங்களைத் தவிடுபொடியாக்கி வழக்கை வென்றிருக்க வேண்டாமா? 

கருணாநிதி என்கிற மோசடிப் பேர்வழி தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்று சொன்னால் நீதிமன்றம் சிரியாய்ச் சிரிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். தி.மு.க. என்கிற கட்சியின் சார்பிலே மனுச்செய்திருக்கலாமே? செய்யவில்லை. வழக்குத் தொடரப்பட்டபோதும் நீதிமன்றம் தடையாணை வழங்கியபோதும் கருணாநிதிதான் முதல்வராக இருந்தார். தமிழக அரசின் சார்பிலே ஒரு மனுதாரராகச் சேர்ந்து வாதிட்டிருக்கலாமே? செய்தாரா என்று கேட்டால் இல்லை.

கருணாநிதியின் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதிகாட்டாமல் ஆய்வுசெய்ய நீதிபதி பச்சோரி தலைமையில் ஆய்வுக் கமிட்டி ஒன்றை அமைத்து அந்த ஆய்வுக் கமிட்டியும் திட்டத்திற்கு எதிரான ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வைத்தது.

இப்போது கூடங்குளத்திற்கு எதிராக மத்திய அரசு ஒரு கமிட்டியமைத்து திட்டத்திற்கெதிராக அறிக்கை சமர்ப்பிக்க அனுமதித்திருக்குமா? மத்திய அரசு நினைப்பதை காகிதத்தில் அச்சடித்து வழங்குவதுதானே கமிட்டிகளின் வேலை. ஆக தான் அங்கம்வகித்த காங்கிரஸ் அரசு திட்டத்தில் குளறுபடி  செய்ததைக் கூட்டணியிலே இருந்தபோதும் தடுக்கத் தவறியவர்தான் இந்தக் கருணாநிதி.

இதிலே மிகவும் வேதனைக்குரிய விடயமென்னவென்றால் மக்கள் நலத்திட்டமென்ற போர்வையில் கொள்ளையடிப்பதில் காங்கிரசும், தி.மு.க.வும் குடுமிபிடிச்சண்டை போட்டுக்கொண்டதுதான். தி.மு.க. தன்கையில் வளம் கொழிக்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து இயன்ற மட்டும் கொள்ளையடித்ததை வேடிக்கை பார்த்து அல்லது பங்குபோட்டுக்கொண்ட காங்கிரஸ் சேதுத் திட்டத்தைக் குறிவைத்து கப்பல் போக்குவரத்துத் துறையை தி.மு.க.விடமிருந்து பறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வாசனிடம் ஒப்படைத்தது. தி.மு.க.வும் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக கமுக்கமாக இருந்து கொண்டது. ஒரு புரட்சியில்லை. போராட்டமில்லை. நல்லவன் யோக்கியனென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? சேதுத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுகிறவகையில் கப்பல் போக்குவரத்துத் துறையை மீண்டும் தரவேண்டுமென்று கேட்டிருக்க வேண்டுமல்லவா? கேட்கவில்லை. கேட்டால் 2ஜி ஊழல் வழக்கில் ஆப்படிப்பான் காங்கிரஸ்காரன். 

இந்நிலையில் நீதிமன்றமே தமிழக அரசிடம் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கவேண்டுமெனக் கேட்டு சம்மனனுப்பியிருக்கிறது. தமிழக அரசும் அத்திட்டத்தின் சாதக பாதகங்களை, மீனவர்களின் பிரச்சினைகளை, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைச் சொல்லி நீதிமன்றத்தில் திட்டத்தைக் கைவிடவேண்டுமென பதில் மனுத்தாக்கல் செய்துவிட்டது. தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்கக் கூடாதென்று கூறியதே நீதி மன்றமோ மத்திய அரசோ கேட்டதா? தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் இயக்கக் கூடாதென்று நீதிமன்றத்திலே முறையிட்டதே.. நீதிமன்றமோ, மத்திய அரசோ செவி மடுத்ததா? வலுக்கட்டாயமாகத் தமிழக மக்கள் தலையில் திணிக்கிறனவே... அப்போதெல்லாம் கருணாநிதி கேளாக்காதினராகவும், கண்ணிருந்தும் குருடராகவும் மூச்சுவிடாமல் கிடந்தாரே கருணாநிதி.

ஈழப்பிரச்சினையைக் கையிலெடுத்தால் பூமராங்காக மாறித் தன்னையே தாக்குகிறது. ஊழல், மணற்கொள்ளை, மின்வெட்டு என எந்தப் பிரச்சினையிலும் தன்னை யோக்கியன் என நிரூபித்துக் கொள்ள வழியின்றி தமிழக அரசியலில் தனிமைப்பட்டுப்போயிருந்த,  அரசியல் செய்ய வழியில்லாமல் கிடந்த நாடாளுமன்றத் தேர்தல் வருவதைக் கணக்கில் கொண்டு கருணாநிதி சேது சமுத்திரத் திட்டத்தைக் கையிலெடுக்கிறார். போராட்டம் அறிவிக்கிறார்.

சரி. நீதான் போக்கத்தவன். பொழப்புக்கெட்டவன். போகிறபோக்கில் வைகோவை ஏன் வம்புக்கிழுக்கிறாய்.

தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப்பிரச்சினையிலும் முன்னணியில் நின்று போராடுபவர் வைகோ. சேது சமுத்திரத்திட்டத்திலும் அவர் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார். மீனவர்கள் மற்றும் சுற்றுச்ச்சுழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்குப் பதில் யார் தருவது? சேது சமுத்திரத்திட்டத்தால் யாருடைய தலைக்குமேலாவது கத்தி தொங்குகிறதா? தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவருக்கு முன்னுரிமை எதற்குத் தரவேண்டுமென்பது தெரியாதா?

சேதுசமுத்திரத்திட்டம் தேவையானதுதான். நிறைவேற்றப்படவேண்டியதுதான். அதற்காகத் தமிழக மீனவர்களின் சோற்றில் மண்ணைப்போட்டுவிட்டல்ல. அவர்களின் வாழ்வுரிமை பாதிக்காத வகையிலேதான் நிறைவேற்றப்படவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும். மீனவர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படாத வகையிலே நிறைவேற்றப்பட அனைவரும் துணைநிற்பார்கள். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகி டெல்லி சென்றால் பித்தலாட்டக்காரன் கருணாநிதியிடம் யாரும் போய் நிற்கப்போவதில்லை. சேது சமுத்திரத் திட்டம் வைகோ முயற்சியால் செவ்வனே நிறைவேற்றப்படும். அதுவரை கருணாநிதி மற்றும் டெசோ கும்பலின் தேர்தல் நாடகப் போராட்டங்களைக் கண்ணுற்று மகிழ்ந்திருங்கள்.

புதன், 31 ஜூலை, 2013

திராவிடம் தேவையா? தமிழ் தேசியத்திற்குத் தாவையா...

அவ்வப்போது தலைகாட்டும் வெற்றுக் கூச்சல்களில் ஒன்றுதான் தலைப்பிலே குறிப்பிட்ட வாசகம்.

தமிழகத்தில் மக்கள் தி.மு.க. அ.தி.மு.க. என்கிற இரண்டு கட்சிகளின் ஆட்சியைப் பல தசாப்தங்களாகப் பார்த்து வெறுப்பின் உச்சகட்டத்தில் இருக்கின்றனர். மக்கள் மனதில் மாற்று அரசியலுக்கான தேடலும் ஏக்கமும் முன்னெப்போதுமில்லாத வகையில்   அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொளுத்தி விடப்பட்ட வெடியின் திரிபோல மறுமுனையிலிருக்கும் மாற்று அரசியல் புரட்சி நோக்கி அது அத்துணை மனங்களையும் ஒன்றுசேர்த்து இழுத்துச் செல்கிறது. அவ்வாறு கொளுத்தி விடப்பட்ட திரிக்கும் மாற்று அரசியல் புரட்சிக்குமான இடைவெளியை அதிகரிப்பதிலும், அதிகரிக்கப்பட்ட அவ்விடைவெளியில் கிடைக்கும் பதவிகளை பங்குபோடுவதிலும் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க. தலைமையும் ஒத்திசைந்து செயல்பட்டு வருகின்றன.

இடையில் புகுந்து அரசியல் இலாபம் தேடும் ஒரு கும்பல் செய்யும் முழக்கம்தான் தலைப்பிலே சொன்னது. அதிலே எந்தளவுக்கு உண்மையுள்ளது? பார்ப்போம்.

ஆப்பிளை ஆப்பிளுடன் ஒப்பிடவேண்டுமென்று சொல்வார்கள். அதுபோல அடிப்படையில் திராவிட கருத்தியலை தமிழ்த்தேசியத்துடன் ஒப்பிடுவதே தவறானது.

திராவிடம் என்பது மொழிசார்ந்தோ நிலம் சார்ந்தோ உருவானதல்ல. திராவிடம் என்பது ஆரிய ஒடுக்குமுறைக்கு எதிரான, சாதி ஒடுக்குமுறை பெண்ணடிமைக்கு எதிரான கருத்தியல் சித்தாந்தம். குறிப்பாக பிறப்பை வைத்து மனிதனை இழிவு படுத்தும் சனாதன பார்ப்பன கொள்கைகளிடமிருந்து மக்களைக் காக்க உருவான கருத்தியல். யாரெல்லாம் பார்ப்பனரில்லையோ, யாரெல்லாம் ஆரியரில்லையோ அவரெல்லாம் திராவிடர். திராவிடம் என்பது பிறப்பினடிப்படையில் அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொதுவானது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவில் பிறப்பினடிப்படையில் ஒடுக்கப்படும் கறுப்பின பழங்குடியினர் கூட திராவிடர்கள்தான். அங்கேயும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கங்கள் வேறுபெயர்களில் இயங்கி வருகின்றன.

திராவிடம் என்கிற கருத்தியலுக்கு சமமான ஒரு கருத்தியலென்றால்  பொதுவுடமைச் சித்தாந்தங்களை வேண்டுமானால் ஒப்பிடலாமே தவிர தமிழ்த் தேசியத்தை ஒப்பிடுவது தவறானது. உள்நோக்கம் கொண்டது. திராவிடக் கருத்தியல்/சித்தாந்தம் தமிழ் தேசியத்திற்கு எதிரானதல்ல. பொதுவுடமைச் சித்தாந்தம் வர்க்க வேறுபாடுகளைக் களையும் பொருட்டு, முதலாளித்துவத்திற்கெதிராகத் துவங்கப்பட்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. பொதுவுடைமைச் சித்தாந்தம் தமிழ்த்தேசியத்திற்கெதிரானதா? அவ்வாறு சொன்னால் அது எந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாகப் படுமோ அதே அளவு பைத்தியக்காரத்தனம்தான் திராவிட கருத்தியல் தமிழ்த்தேசியத்திற்கெதிரானது என்று சொல்வதும். திராவிட இயக்கம் தமிழகத்திற்கு வெளியே இல்லையே தமிழகத்திலே மட்டும்தானே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இயக்கங்கள் தமிழகத்திற்கு வெளியே வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டுதான் வருகிறது. இன்னும் வரவில்லையென்றால் இனிமேல் நிச்சயம் வரும். பெயர் வேறாக இருக்கலாம். மொழி வேறாக இருக்கலாம். பிறப்பினடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களுக்கான விடுதலை இயக்கங்களனைத்துமே திராவிட இயக்கங்கள்தான். ஆகவே திராவிட இயக்கமோ, பொதுவுடமை இயக்கமோ ஒருபோதும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கு எதிரானவையல்ல. 

மாறாக தமிழ்த்தேசியத்திற்கெதிரானது எது என்றால் அது இந்திய தேசியம். தமிழ்த் தேசியத்தை இந்திய தேசியத்துடன்தான் ஒப்பிட வேண்டுமே தவிர திராவிட இயக்கங்களுடன் ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்? 

இத்தகைய ஒரு முட்டாள்த்தனத்தைத்தான் சில நபர்கள் திட்டமிட்டுப் பொய்ப்பரப்புரைகள் மூலமாக பேசியும் எழுதியும் சில இளைஞர்களை தவறாக வழிகாட்டி வருகின்றனர். அவர்களுக்கு தவறான உள்நோக்கமிருக்கிறது.  இந்திய தேசியத்தை எதிர்த்துப் பேசி ஆள்பிடிக்க அவர்களால் முடியாது. தமிழகத்தில் வேர்விட்டு விழுதுகள் விட்டு வளர்ந்திருக்கும் திராவிட இயக்கத்தில் சில கிளைக் கட்சிகளின் மீது (தி.மு.க., அ.தி.மு.க.) அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிப் போய்விட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தகைய கட்சிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை மூலதனமாக வைத்து அரசியல் இலாபமடையும் நோக்கில் ஒட்டுமொத்த திராவிட இயக்கங்களையும் அவதூறு பேசி ஆள்பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்ற கட்சிகளை நேர்மையான முறையில் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தையோ அல்லது பொதுவுடமை இயக்கத்தையோ தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதாகச் சித்தரித்துப் பொய்ப்பரப்புரை செய்வது அரைவேக்காடுகள் செய்யும் வேலை.

தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்ணடிமை, பார்ப்பன சனாதன, மனுதர்ம ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும். திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகிச்சென்ற கட்சிகள் மக்களிடமிருந்தும் விலக்கி வைக்கப்படும். திராவிட இயக்கம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனப் பொய்ப்பரப்புரை செய்யும் கும்பலின் முயற்சிகள் அம்பலப்ப்ட்டுப்போகும். அந்த அரைவேக்காடுகளின் செயல் ஒருபோதும் வெற்றிபெறாது.

சனி, 29 ஜூன், 2013

தி.மு.க.வினர் கிளப்பிவிடும் மோடி பீதி; பகடைக்காய்களாக மாறத்துடிக்கும் இசுலாமியர்;



கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.



பா.ஜ.க.வின் இந்துத்துவக் கொள்கைகளுக்கு மோடி மட்டுமே பொறுப்பானவரல்ல. மோடியில்லாமல் வேறொரு கேடி வந்தாலும் பா.ஜ.க. இந்துத்துவக் கட்சிதான்.

ஆனால் என்னவோ மோடி தேர்தல்பணிக்குழுத் தலைவரான பிறகுதான் பா.ஜ.க. இந்துத்துவக் கொள்கையையே கண்டுபிடித்ததுபோல தி.மு.க.வும் அது சார்ந்த ஊடகங்களும், அந்தக்கட்சியின் சார்பாக இணைய தளங்களில் செயல்பட்டுவரும் சிலரும் புரளி கிளப்பி வருகின்றனர். அதை நம்பும் சில இசுலாமிய நண்பர்களும் பகடைக்காய்களாக மாறி தி.மு.க.விற்காக பரிந்து பேசவும் எழுதவும் துவங்கியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு, காவிரி, ஸ்டெர்லைட், கூடங்குளம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயுத்திட்டம், கிரானைட் கொள்ளை, 2ஜி இமாலய ஊழல், மணற்கொள்ளை, வேலை நியமனத்தில் ஊழல் கொள்ளை எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்திலே ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யத் துணைபோனது என தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் செய்த துரோகத்தால் தனிமைப்பட்டுப் போயிருக்கிறது தி.மு.க. தற்போது நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அடித்த அந்தர்பல்டிகள் மூலம் நாட்டு மக்களிடம் அசிங்கப்பட்டு நிற்கிறது தி.மு.க.

இவ்வாறு அசிங்கப்பட்டு நிற்கிற தி.மு.க.விற்கு முட்டுக்கொடுக்க வாய்ச்சவடாலில் பேர்போன தி.மு.க. உடன்பிறப்புகளே திக்கித்திணறும் போது அவர்களுக்கு கைகொடுப்பது போல வந்ததுதான் மோடி குறித்த அறிவிப்பு. எடுப்பார் கைப்பிள்ளைகளைப் போல மாறிப்போன இசுலாமிய பதிவர்களும், முகநூல் பயனர்களும் மாறிப்போனதுதான் கொடுமை. இன்றைய நிலையில் தி.மு.க. மீது அத்தனை விமர்சனக்கணைகளையும் தாங்கிக் கொண்டு அசிங்கப்படுவது மோடி பீதியைக் காட்டி கருணாநிதி கும்பலால் பகடைக்காயாக்கப் பட்ட ஒரு சில இசுலாமிய நண்பர்கள்தான்.

குஜராத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மதமோதல்களை ஊக்குவித்து பல்லாயி்ரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதும், இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதும் மறுக்க முடியாத உண்மை. இசுலாமியர்கள் ஒருபோதும் மோடியையோ, பா,ஜ,க.வையோ ஆதரிக்கமாட்டார்கள் என்பதோடு மதச்சார்பற்ற இந்தியர்களும், தமிழர்களும் இசுலாமியர்களோடு சேர்ந்து பா.ஜ.க.வைப் புறக்கணிப்பர் என்பதும் உண்மை.

ஆனால் அதற்காக பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரசு, தி.மு.க. கூட்டணியை ஆதரிப்போர் மனசாட்சியற்றவர்கள். காலிஸ்தான் கேட்டுப் போராடிய குழுவைச் சேர்ந்த் ஒரு சீக்கிய இளைஞரால் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து டெல்லியிலும் வட இந்தியாவின் மற்ற பாகங்களிலும் வசித்த ஒவ்வொரு சீக்கியனும் தேடிப் பிடித்து துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டான். குஜராத்தில் நடைபெற்றதை விட பன்மடங்கு வன்முறை சீக்கியர்கள் மீது ஏவிவிடப்பட்டது. காங்கிரசால் திட்டமிடப்பட்ட கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டத்தோடு அவர்களின் உடமைகளனைத்தும் சூறையாடப்பட்டு நிர்க்கதியாக்கப் பட்டனர்.

இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலை குறித்து நம் தமிழ் மக்களுக்கு இங்கே மீண்டும் விவரிக்கப் போவதில்லை. ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்துத் துணை போனது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி.

இவ்வாறான இனப்படுகொலைகளை அரங்கேற்றிய காங்கிரசையா பா.ஜ.க.விற்கு மாற்றாகப் பரிந்துரைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையைச் சொன்னால் வேறு நாட்டுத் தமிழர்கள் இனப்படுகொலையைவிட குஜராத்தி முஸ்லீம்களின் இனப்படுகொலையைக் கவனியுங்கள் எனக் கூறும் கனவான்களே.. சீக்கியர்களின் இனப்படுகொலையென்ன இங்கிலாந்திலா நடந்தது. அந்த இனப்படுகொலைகளை நடத்தியது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தானே..

இந்திய குஜராத்தி முஸ்லிம்களின் உயிர் மட்டுமே உயிர், இந்திய பஞ்சாப் சீக்கியர்களின் உயிர் உயிரல்ல என்கிறீர்களா? தமிழீழத்திலே நம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர் உயிரல்ல என்கிறீர்களா?

சீக்கியர்களை இனப்படுகொலை செய்த காங்கிரசு சீக்கியரான மன்மோகன்சிங்கை பிரதமராக்கிவிட்டதே.. சரியாய்ப்போச்சு என்கிறீர்களா? அதே கணக்குப்போட்டுதான் அப்துல் கலாம் என்கிற இசுலாமியரை குடியரசுத் தலைவராக்கியது பா.ஜ.க. உங்கள் கணக்கு சரியாய்ப் போய்விடவில்லையா?

உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..

எல்லாவற்றிகும் மேலாக தமிழகத்தில் மோடிக்கோ, பா.ஜ.க.வுக்கோ சிறிதும் செல்வாக்கில்லை. இவ்வாறு இல்லாத பேயை தனது அரசியல் இலாபத்திற்காக இசுலாமியர்கள் முன்காட்டி பீதியை ஏற்படுத்திவிட்டு தன் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவிகள் பெற்றுத் தருவதில் மும்மரமாகி விட்டார் கருணாநிதி. பதவி சுகத்திற்காக எந்த சமரசத்திற்கும் ஆயத்தமானவர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த வரலாறு. இப்போது ஒருசில இசுலாமியர்களால் தாங்கிப்பிடிக்கப்படுகிற கருணாநிதி கடந்த காலங்களில் பதவிக்காக பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்காதவரா? தற்போது நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்களேயானால் தன் மகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அவர்கள் காலிலே விழுந்திருக்க மாட்டாரா? வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.கூட்டணியில் சேரமாட்டார் என உத்தரவாதமேதுமுள்ளதா?

தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி என்கிற காரணி இந்துத்துவ சக்திகளுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. ஆனால் சீக்கியர்களையும் ஈழத் தமிழர்களையும் இனப்படுகொலை செய்த காங்கிரசும் அதற்குத் துணைபோன தி.மு.க.வும் இன்னமும் உயிர்ப்போடிருக்கின்றன. இசுலாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும், மனிதநேயர்களும் எதிர்க்க வேண்டியது இல்லாத எதிரியான மோடியல்ல.. நம் கண்முன்னே உலவிவரும் மோடிக்கு சற்றும் சளைக்காத காங்கிரசு, தி.மு.க, என்கிற எதிரிகள்தான்.

மோடி பீதியைக் காட்டி காங்கிரசு, தி.மு.க. என்கிற புதைகுழியில் மீண்டும் தமிழர்களையும் தமிழ் மக்களையும் தள்ளிவிட நடக்கும் முயற்சியை தடுத்துக் கொள்வதும் தமிழர்களின், தமிழகத்தின் நலனைப் பாதுகாத்துக் கொள்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை.

திங்கள், 22 ஏப்ரல், 2013

விஜயகாந்தைச் சந்தித்தார் கருணாநிதி: குற்றம் நடந்தது என்ன? எபிசோடு I

தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிக்கையாளரும், சமூக சேவகருமான டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் உடல் நலக் குறைவால் மறைந்தார். அனைத்துக் கட்சித்தலைவர்களும், பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துகிற சாக்கில் நடந்த அரசியல் கூத்து நடத்திய கருணாநிதி விசயகாந்து வரும் வழியில் காத்திருந்து வணக்கம் செலுத்தி அதனைப் புகைப்படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் “விசயகாந்த் தன்னைச் சந்தித்து நலம் விசாரித்ததாக” செய்தி வெளியிட்டு புளகாங்கிதமடைந்தார்.

சந்திப்பு நடக்கும் முன்னும் பின்னும் நடந்தது என்ன என்பது நமது கற்பனையில்;

காட்சி 1:

இடம்: கருணாநிதி இல்லம். அனைவரையும் சந்திக்கும் கூடம்/வரவேற்பறை.
பங்கேற்பாளர்கள்: கருணாநிதி, துணைவி, உதவியாளர், சில கட்சிப் பிரமுகர்கள், கருணாநிதியை பராமரிப்பவர்.

(சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த செய்தி மாலையில் கருணாநிதிக்குத் தெரிவிக்கப் படுகிறது. அப்படியா எத்தனை மணிக்கு என்ன விபரம் எனக் கேட்டவரிடம், இன்று மாலையில் மருத்துவமனையில் மறைந்ததாகவும் மறுநாள் நண்பகலுக்கு மேல் பெசண்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.  சரியெனக் கேட்டுக்கொண்ட கருணாநிதி சில கணக்குகள் போட்டுக்கொண்ட பிறகு நடந்த உரையாடல் பின்வருமாறு)



கருணாநிதி (உதவியாளரிடம்): என்னய்யா.. அவரும் இழவு வீட்டுக்கு வருவாரில்ல.. ஏற்கனவே ஒருமுறை அவர் திருச்சிக்கு வரும்போது சுத்திலும் அணையகட்டி பார்த்து வணக்கம் வச்சுரலாம்னு முயற்சி பண்ணப்போ எப்படியோ மீடியாவுக்கு விசயம் கசிஞ்சு அவர் உசாராகி பார்க்க முடியாம போயிடுச்சு. இந்த முறை  அவர் வரதுக்கு முன்னாடி போயி அங்கே நிக்கணும்யா.. இதைவிட்டா பார்க்கிறதுக்கு கோயம்பேடு போகணும்யா..அங்கே போயி காத்துக்கிடந்து பார்க்கமுடியலைனா எதிர்க்கட்சிக்காரன் பூராம் கழுவி ஊத்துவான்.. இங்க ஒருவேளை பார்க்கமுடியலைனா கூட அசிங்கப்பட்டது யாருக்கும் தெரியாது.. கமுக்கமா இருந்துக்கலாம்..எப்ப வர்றாருனு கேட்டுச் சொல்லுயா...
உதவியாளர்(கருணாநிதியிடம்):கேட்டுட்டேன் தலைவரே.. அவரு காலைலதான் வர்றாராம்.

கருணாநிதி(உதவியாளரிடம்): காலைலயா? அதுவரை யாருமே போகலைனா தப்பாயிடுமேய்யா..தம்பி ஸ்டாலினை நைட்ல போயி அட்டெனன்ஸ் போடச் சொல்லு..... காலைல அவர் வர்ற நேரமா பார்த்து தற்செயலா வந்த மாதிரி வாசல்ல நின்னுக்கிறேன்.. எப்படியும் ஒரு வணக்கம் கூடவா வைக்காம போயிடுவாரு... எப்படியாவது கூட்டணில இழுத்து போட்டுறனும்யா... தமிழ்நாட்டுலயே நம்ம கூட்டணி வைக்காத ஒரே கட்சி தே.மு.தி.க. மட்டும்தான்.. பழைய ஆளுங்க எல்லாருக்கும் நம்ம வண்டவாளம் தெரிஞ்சு போச்சு.. அவர விட்டா நமக்கு வேற வழியே இல்லே.. யாரும் இல்லைனா கால்ல கூட விழுந்திறலாம்.. இந்த மீடியாக்காரப் பசங்க போட்டோ புடிச்சுப் போட்டு அசிங்கப் படுத்திடுவானுங்களேனு பார்க்கிறேன்.

(மறுநாள் காலை:எழவு வீட்டில் விசயகாந்தைத் தற்செயலாகச் சந்தித்தார் கருணாநிதி. வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டனர்)





(கருணாநிதி அந்தப்படத்தைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விசயகாந்த் சந்த்தித்து நலம் விசாரித்ததாக நிலைத்தகவல் வெளியிட்டதோடு அனைத்து ஊடகங்களுக்கும் அந்தப் படத்தைத் தனக்குத் தானே என்கிற முறையில் வெளியிட்டு மகிழ்கிறார்)

காட்சி 2:

இடம்: விசயகாந்த் இல்லம்.
பங்கேற்பாளர்கள்: விசயகாந்து, சுதீஷ், பிரேமலதா..

விசயகாந்து: மாப்ழ சுதீழு... எங்க போனாலும் இந்தாளு வந்து நின்னு வனக்கம் வைக்குறானே. இப்படிதான் திருச்சிக்கு நம்ம போறதை தெரிஞ்சுகிட்டு அங்கே வந்து சுத்தி வளைக்கப் பாத்தானுங்க. இவனுங்க கிட்டேருருந்து எஸ்கேப்பாவுறதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு... நம்ம போற இடத்தையெல்லாம் எவனோ அந்தாளுக்குப் போட்டுக்குடுத்துர்றாய்ங்க மாப்ழ.. நம்ம கூட்டத்துலயே எதோ ஒரு கருப்பாடு இருக்கு.. சீக்கிரம் கண்டுபிடிக்கணும் இல்லேனா.. சிக்கலாயிப் போவும்டியேய்.

சுதீஷ்: மாமா.. நாந்தான் மாமா சொன்னேன். கட்சித் தலைவர்கள் எல்லாரும் ஒரு இடத்துக்கு போறப்போ முட்டி மோதிக்காம இருக்க வெவ்வேற நேரம் ஃபிக்ஸ் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் இடைஞ்சலில்லாம போயிட்டு வந்துடுவாங்கனு பன்ரொட்டியார் சொன்னாரு.. நானும் சரி அதுக்குதான் கருணாநிதியோட ஆளுங்க யதார்த்தமா கேக்குறாய்ங்க போலனு பதார்த்தமா நீங்க வர்ற நேரத்தை சொல்லிட்டேன். என்னைப்போயி கருப்பாடு.. சிவப்பாடுனு சொல்லிட்டீங்களே மாமா... :’( அக்கா மாமாவைப்பாரு என்னைத் திட்டுறாரு..

பிரேமலதா: ஏங்க என் தம்பியைப்போயி திட்டுறீங்க...

விசயகாந்து:(பிரேமலதாவைப் பார்த்து) மாப்ழதான் சொன்னாருனு தெரிஞ்சா திட்டுவனா பிரேமா.. நான் எவனோ கட்சிக்காரப்பய போட்டுக்குடுக்கிறான்னுல திட்டுனேன் 

(சுதீஷ் பக்கமாகத் திரும்பி) அட.. மக்குப் பய மாப்புழ.. அவய்ங்க அப்டிதான் கூப்பிடுவாய்ங்க.. இப்ப பார்த்தேல்ல.. எழவு வீட்டில குறுக்க வழிய மறிச்சு நிக்குறாரேனு ஒரு வணக்கம் வச்சேன். அதைப் போட்டோ புடிச்சு சின்னப்புள்ளத்தனமா அதென்னது ஃபேசுபுக்கு அதுல போட்டு விசயகாந்து என்னைச் சந்தித்து நலம் விசாரித்தபோதுனு விளம்பரம் பண்ணிட்டுருக்காரு.. அந்தாள இப்பவே கூட்டணிக்குள்ளே விட்டா கூடாரத்துக்குள்ள ஒட்டகம் புகுந்த கதைதான் மாப்புழ.. தமில்நாட்ல நம்மதான் எதிர்க்கட்சி. நம்மகிட்டே 29 எம்மெல்லே இருக்காய்ங்க.. அவய்ங்க 23 தான். நாமதான் பெரிய கச்சி. இப்பவே போயி தலைய குடுத்தா கிட்னிய எடுத்துறுவாய்ங்க மாப்புழ.. இனிமே போண் பண்ணாய்ங்கனா தேர்தல் கிட்டே நெருங்கும்போது வரச்சொல்லு.. அப்பதான் நமக்கு 25 அவிய்ங்களுக்கு 15னு பேச முடியும்.. பேரம்பேசி முடிக்கிறப்போ ஃபிப்டி ஃபிப்டினாவுது முடிக்கலாம். சும்மா சும்மா போற வர்ற வழிலலாம் நின்னுகிட்டு வணக்கம் வைக்குறது.. அதை போட்டோ புடிச்சு ஃபேசுபுக்குலபோடுரதெல்லாம் வேண்டாம்னு ஸ்டிரிகா சொல்லிடு ,மாப்ழ..ஆங்..

தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணிக்காட்சிகள் அரங்கேறும் போது அடுத்தடுத்த காட்சிகளும் அரங்கேறும்.

சனி, 20 ஏப்ரல், 2013

இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்படம். டிவிடி ரிப்.


மூவர் தூக்கினைத் தடுத்து நிறுத்தக்கோரி நெருப்புக்குத் தன்னுயிரை இரையாய்த் தந்து ஈகம் செய்திட்ட தோழர் செங்கொடியின் தியாகத்தை பதிவு செய்த ஆவணப்படம்தான் “இப்படிக்கு தோழர்.செங்கொடி”

இவ்வரலாற்று ஆவணம் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டியது என்கிற நோக்கத்திலேயே இதற்கான ”டொரண்ட்” பதிவிறக்கச் சுட்டியைப் பகிர்ந்து கொள்கிறேன்.


பார்த்துவிட்டு பின்வரும் சந்ததிகளுக்காகப் பாதுகாக்க வேண்டிய இந்த குறுவட்டு சென்னையில் டிஸ்கவரி புத்தகக் கடையில் வெறும் ரூ.100 க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.  வாங்குகிற திறனும், வசதியும் படைத்தவர்கள் தயவுசெய்து வாங்கி நம் சமகால வரலாற்றைப் படமாக்கிய ஆவணப்படக் குழுவினருக்கு உதவ வேண்டுமென வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.


பேராசிரியர் புல்லர் அவர்களின் மரணதண்டனைக்கான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் தூக்குக் கயிறும் இறுகத் துவங்கியுள்ளது.  பஞ்சாப் அரசு பேராசிரியர் புல்லரின் தூக்குத்தண்டனையை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி நமக்கு வழிகாட்டியுள்ளது. தமிழகத்தில் மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி அதன்மூலம் தமிழக அரசுக்கு நிர்ப்பந்த்தத்தினை ஏற்படுத்தி தமிழக அரசு மூவர் தூக்கினை நிறுத்தி வைத்திட அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிடுமானால், அவர்களின் தூக்குக்கயிறினை அறுத்தெறியும் முயற்சியில் மிகவும் உதவியாக இருக்கும்.

பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற முன்னெடுப்புகளைச் செய்துவரும் வேளையில் ஏப்ரல் 30ல் சென்னையில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுள்ளது. அனைவரும் பங்கேற்க வேண்டியது மிக அவசியம்.

மரண தண்டனையை ஒழித்திடுவோம். மனிதநேயம் காத்திடுவோம்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

அமாவாசை கருணாநிதியும் அதற்கடுத்த நாள் ஜெ.வும் - 1

டுவிட்டர் ஒரு நீரோடை போன்றது. அதில் புதுப்புது செய்திகள் நொடிக்கொருதரம் நம் கண்முன்னே மின்மினிப் பூச்சி மாதிரி வந்து ஓடி மறையும். அரட்டையைத் தாண்டி நேரக்கோட்டில் வந்து போகும் மிகச்சுவாராசியமான தகவல்கள்தான் ஐந்தாண்டுகளைத் தாண்டியும் டுவிட்டரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. 140 எழுத்துகள் என்கிற கட்டுப்பாட்டுடன் நம் கருத்துகளை திடமாகவும், தெளிவாகவும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகிறது டுவிட்டர்.

அண்மையில் டுவிட்டர் நண்பர்களுள் ஒருவரான செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுடன் உரையாட நேர்ந்தது. நான் நீண்ட நாட்களாக கருணாநிதிக்கு எதிர் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்து வருவதை கவனித்து வந்திருப்பார் போல. அவர் தீவிர கருணாநிதி ஆதரவாளராக இருப்பினும்  பிற கருணாநிதி ஆதரவாளர்களைப் போலவே வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு அதனை யாரிடமும் காட்டிக்கொள்ளமாட்டார். சமீபத்தில் ”டெசோ” நாடகக் கம்பேனியில் நித்தமொரு நாடகம் என்கிற வகையில் புதிய புதிய காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பழைய சம்பவங்களை, கருணாநிதியின் தமிழினத் துரோகங்களையெல்லாம் மக்கள் மறந்து விட்டிருப்பர் என எண்ணிக்கொண்டு, இப்போது வாயைக் கொடுக்கலாம் என்று என்னிடம் பேச வந்திருப்பார் போலும்.மறதிதானே தமிழக மக்களின் சாபக்கேடும் கருணாநிதி போன்ற நபர்களின் முதலீடும்.

செய்யாறு அருண் பேச வருகையில் தனியாளாக வரப் பயந்தாரோ என்னவோ, கருணாநிதியும் அவர் குடும்பமும் வெளித்தள்ளும் குப்பைகளை வியந்தோதிவரும் @thedonashok என்கிற நபரை கோர்த்து இழுத்து வந்தார். என்ன நோக்கமிருந்ததெனத் தெரியவில்லை.ஒருவேளை என்னோடு விவாதம் செய்து கருணாநிதி கும்பலின் துரோகங்களை நியாயப்படுத்தி புள்ளிவிபரங்களை அள்ளி விடுவார் என கருதியிருக்கக்கூடும். அந்த நபரோ ஆங்காங்கே கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களின் வசனத்தை காப்பியடித்து கருணாநிதிக்கெதிரான தலைவர்கள் மீது கருத்துகள், “கமெண்டு”கள் என்கிற போர்வையில் அவதூறுகளை இணையத்தில் எழுதி கருணாநிதியின் ரசிகர்களுக்கு சிரிப்புக் காட்டி காலத்தை ஓட்டி வருபவர் போல. கருணாநிதியே ஒரு காலி பெருங்காய டப்பா. இதில் இவர் கூட்டி வந்த நபர் ஒரு முனகலைக்கூடச் செய்யாமல் காணாமல் போய் விட்டார்.

விவாதத்தின் மையம் இதுதான்.

அனைவரும் கருணாநிதியை மிக மோசமான அரசியல்வாதி எனக் கருணாநிதியைச் சுட்டுகிறார்களே? திட்டுகிறார்களே? அப்படியென்றால் ஜெயலலிதா என்ன யோக்கியமா? ஜெயலலிதாவை ஏன் திட்டுவதில்லை.

தமிழகத்தின் கீழ்த்தரமான அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா? 

தமிழகத்திற்கு அதிக அளவில் தீங்கிழைத்தவர் கருணாநிதியா? ஜெயலலிதாவா?

அரசியல் நாகரீகம் பேணாத அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா?

இது போன்று கருணாநிதியையும் ஜெ.வையும் ஒப்பிடக்கூடிய வகையிலான கேள்விகள்.

ஒப்பீடு என வந்துவிட்ட பிறகு என்னளவில் மேலே கேட்டது போன்ற கேள்விகளுக்கான பதில் கருணாநிதிக்கு முதலிடமும் ஜெ.வுக்கு இரண்டாமிடமும் வழங்குவதே சரியென்றேன். மேலும் விளக்கங்கள் வேண்டுமெனில் ஒவ்வொரு நிகழ்வாக “கேஸ் பை கேஸ்” எவ்வாறு கருணாநிதி தமிழகத்தில் மிகவும் கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றினார் என்பதை விளக்கவும் ஆயத்தமானேன்.

அவரும் புதிய சட்டசபை, நூலகம், சமச்சீர்கல்வி, தமிழ் புத்தாண்டு என ஜெ.மீது சில குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஜெ.தானே கருணாநிதியைவிட மோசம் எனச் சொன்னார். ஜெ. நல்லவரென்றோ அவரை ஆதரிப்பதோ எனது நோக்கமில்லை. கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ஜெ.எவ்வளவோ மேல்.

2011ல் தமிழினத் துரோகி கருணாநிதியை வீட்டுக்கனுப்பி ஜெ. ஆட்சிக்கு வந்தபிறகு..

”பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கினை நிறுத்தக்கோரும் தீர்மானம்.
முல்லைப்பெரியாறு அணையைக் காக்க நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டம்.
காவிரியில் தமிழக உரிமையைக் காக்க நடத்திய சட்டப்போராட்டம்.
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் தமிழீழம் குறித்து பேசுகிற, போராடுகிற உரிமையை/சுதந்திரத்தை வழங்கியது.”

என்பன போன்ற மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரிய செயல்களைச் செய்தவர். இதற்கெல்லாம் பாராட்டவில்லையெனில் தமிழன் நன்றி மறந்தவன் ஆவான்.



அண்ணா உருவாக்கிய மக்கள் இயக்கமாகிய தி.மு.க.வை கபளீகரம் செய்திட கருணாநிதி செய்த தகிடுதத்தங்களையும், பித்தலாட்டங்களையும், தமிழக அரசியலையும் தமிழ் நாட்டையும் எவ்வாறு பாழ்படுத்தினார் என்பதையும், தன் குடும்ப உறுப்பினர்கள் அப்பாவி மக்கள் உழைத்துச் சேர்த்த சொத்தினை அபகரிக்கவும், அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடவும் திட்டமிட்டு சொந்தக் கட்சிக்காரர்களுக்கு சில எலும்புத்துண்டுகளை போட்டுவிட்டு  குடும்ப உறுப்பினர்களைக் கட்சியிலும் அரசிலும் உயர் பதவிகளில் ஏற்றி வைத்தது குறித்தும் பல்வேறு துறை சார்ந்தோர் பலநூறு பதிவுகளைச் செய்திட்ட பிறகும் எனது மனதில் பட்டவைகளை, எனது பார்வையில் பதிவு செய்திட வேண்டும் அதையும் கருணாநிதி சாகும் முன் எழுதிவிட வேண்டுமென வெகுநாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். செத்தபிறகு கருணாநிதி போன்ற நபர்களுக்கும் ஊர் ஊருக்கு சிலை வைத்து புனிதர் பட்டம் வழங்கி விடுவர் என்பதை கருத்தில் கொண்டே இந்த சாகும்முன் பதிவுத் திட்டம்.



கவிதாயினி தாமரை அவர்கள் ஒரு கூட்டத்தில் ”கருணாநிதி ஒரு அமாவாசை ஜெ. அதற்கடுத்த நாள்” என்று தமிழகத்தையும், தமிழர்கள் வாழ்வையும் இருளில் தள்ளியவர் கருணாநிதி என்கிற பொருள்பட கூறிய சொற்றொடரை இந்த ஒப்பீட்டுப் பதிவுகளுக்கு தலைப்பாக வைப்பது சாலப் பொருந்துமெனக் கருதுகிறேன். தலைப்பு வழங்கிய கவிதாயினி தாமரை அவர்களுக்கு நன்றி.


ஒரு பதிவிற்கு ஒரு நிகழ்வு மட்டும் எடுத்துக்கொண்டு விரிவாக அலசவேண்டும் என எண்ணியிருக்கிறேன்.கருணாநிதி பலநூறு ஆண்டுகாலம் வாழவேண்டும், அவர் வாழும் வரை இந்த பதிவையும் நீண்ட நெடுந்தொடராக எழுத வேண்டுமென்பதே என் அவா. இந்தத் தொடர் பதிவை எழுத ஊக்கமளித்த செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுக்கு நன்றி!!!

தமிழகத்திற்கு புதிய சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டுவதில் கருணாநிதி செய்த கீழ்த்தரமான அரசியலும் அதனை மருத்துவமனையாக மாற்றிய ஜெ.வின் பழிவாங்கலும் அடுத்த பதிவில்...

(தொடரும்..)