சனி, 2 நவம்பர், 2013

தமிழக அரசே... தோழர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்.





இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அதனைத் தடுத்திட இந்திய அரசு முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் கோரிக்கை வைத்தும் இந்திய அரசு செவி சாய்க்காமல் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோல வெளியுறவு அமைச்சர் வாயிலாக அந்நிகழ்விலே கலந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டி தமிழக மக்களின் பொறுமையின் ஆழத்தைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். 

மத்திய அரசைக் கண்டிக்க வன்முறையைக் கையிலெடுப்பதை எந்நிலையிலும் ஆதரிப்பதற்கில்லை.

இவ்வாறான பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தி.வி.க. தோழர்கள் ஈடுபட்டிருப்பார்களேயானால் அவர்கள் செய்யும் செயலின் தீவிரம் என்ன? அதன் பின் விளைவுகள் என்ன என்பதை அறிந்தே செய்திருப்பார்கள். இது போன்ற செயல்களைச் செய்து சிறை செல்வதை தியாகம் என நினைத்திருப்பார்களேயானால் அவர்களின் தியாகத்தை மதித்து அவர்களைச் சிறையிலடைத்து அவர்களின் தியாகத்தை அரசு முழுமையடையச் செய்வதே சரியாகும். ஆகவே திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தான் செய்திருப்பார்களேயானால் அவர்கள் கைது செய்யப்படுவதிலோ வழக்கைச் சந்திக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்கப் போவதில்லை. 

ஏற்கனவே ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு இந்திய அரசும் காங்கிரசு, கருணாநிதி தி.மு.க. கூட்டணியின் துரோகத்தைக் கண்டித்தும், ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்புச் செய்த காரணத்தால் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 18 தமிழர்கள் வன்முறையில் ஈடுபடாமல் உச்சபட்ச தியாகமான தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் அதன் பயனாக இந்திய அரசும், ஊடகங்களும், துரோகக் கும்பலும் திருந்திவிடாதா என்ற ஏக்கத்துடனே இறந்து போயினர். அவர்கள் தியாகங்களும் வீணாகப் போயின.

மேலும் மேலும் துரோகங்களைப் பரிசளிக்கும் இந்திய அரசையும் அதன் தமிழகக் கூட்டாளிகளையும் கண்டித்தோ அவர்களின் கேளாக் காதுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டோ இனியும் எவரும் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயல்வது ஒருவகை முட்டாள்தனமென்றால், வன்முறைச் செயல்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முயல்வது வேறுவகை முட்டாள்தனம்.

மத்திய அரசு அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் தி.வி.க. தோழர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களைக் கைது செய்திருப்பது அடாத செயல்.

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மிகவும் கண்ணியமானவர், அதிர்ந்து பேசக்கூடத் தெரியாதவர். மிகவும் ஆத்திரமூட்டும் விவாதக் களங்களேயானாலும் ஆத்திரப்படாமல் அறிவுப்பூர்வமாக தன் கருத்துக்களைப் பாங்குடனே எடுத்து வைக்கிற பக்குவப்பட்டவர்.

ஒருவேளை தொண்டர்கள் செய்த(?) சில செயல்களுக்காக தலைவர் கைது செய்யப்படுவதுதான் சரியென்றால்

பல்லாயிரம் கோடி ரூ. 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

தா.கிருட்டிணன் கொலை வழக்கிலே கருணாநிதியோ, மு.க.ஸ்டாலினோ கைது செய்யப்பட்டார்களா? 

கிரானைட் கொள்ளை வழக்கிலே கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிலே ஜெயலலிதா ஏன் கைது செய்யப்படவில்லை?

தமிழீழத்திலே ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்விலே தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் பொய் வழக்கில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

தமிழக அரசு இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடாமல் தோழர் கொளத்தூர் மணி அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக