ஜெயலலிதா ஆட்சியமைத்தால் கருணாநிதியும் கருணாநிதி ஆட்சியமைத்தால் ஜெயலலிதாவும் சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. இதற்கிடையில் திடீர் உப்புமா, திடீர் நூடுல்ஸ் போல திடீரென்று எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தும் அது என்னவோ சட்டப்பேரவைக்குச் செல்லாமல் இருப்பது ஒரு பெருமை எனக் கருதிக் கொண்டு சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை.
துளியும் வெட்கமோ, கூச்சமோ இன்றி மாதாமாதம் கையெழுத்திட்டு சம்பளம் வாங்கத் தயங்குவதேயில்லை இந்த வெற்று உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்ற தொகுதி என்கிற வகையில் ஆளுங்கட்சியால் எவ்வித நலத் திட்டங்களுமின்றி புறக்கணிக்கப் பட்டு இவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் எவ்விதப் பயனுமின்றிப் போகிறது.
கடந்த காலங்களிலெல்லாம் கட்சி தோற்றாலும் வென்றாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும். தலைவர் என்கிற முறையில் ஜனநாயகக் கடமையாற்றுகிற வாய்ப்பைத் தருகிற அரசியல் நாகரீகம் வேண்டும் என்கிற வகையில் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுகிறவர்கள் எதிரும் புதிருமாக ஒரே தொகுதியில் போட்டியிடுவது தவிர்க்கப்பட்டு வந்தது.
இப்போது நாகரீகமாவது புடலங்காயாவது. ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதுமில்லை. சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி அவைக்கு வருவதில்லை.
பிறகென்ன ”டேசு”க்கு இவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவி?
கட்சி தேர்தலில் தோற்குமானால் தலைவரும் தோற்று வீட்டிலே இருக்கவேண்டியதுதானே.. தலைவர்கள் என்கிற பெயரில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் செல்லாமல், ஒரு உறுப்பினர் பதவியையும் வீணாக்கி, மாதாமாதம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தைத் தண்டச் சம்பளமாக ஏன் வாங்க வேண்டும்.
இதுதான் நிலைமை என்றால் வரும் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற அனைவரும் தங்கள் திராணியை நிரூபிக்க வேண்டும்.
டெல்லியிலே தமிழகத்தைப் போல சட்டப்பேரவைக்கே வராமல் தண்டச் சம்பளம் வாங்குவார்களா என்பது தெரியாது, இருந்தபோதும் அதுபோல ஒரு முயற்சி நடந்துள்ளது பாராட்டுகள். பா.ஜ.க முதல்வர் வேட்பாளரும் சீலா தீட்சித், மற்றும் கேசரிவாலுடன் மோதியிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக