சனி, 21 டிசம்பர், 2013

தமிழகத்திற்கெதிராகத் தொடரும் காங்கிரசின் துரோகம்: கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளுக்குத் தடை.

கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார்.
தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்?
கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்?
தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக்கை பார்த்ததால் நடந்த இத்துரோகத்திற்கு அவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
மறுமலர்ச்சி தி.மு.க. கஸ்தூரி ரங்கன் குழு ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. பரிந்துரைகள் வெளியானதும் வரவேற்றது. பரிந்துரைகளை நிறவேற்றக் கோரி கம்பத்தில் மக்களைத் திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அவை அனைத்தையும் பாழாக்கி கேரள சதிக்கு உடந்தையாகி மத்திய காங்கிரசு அரசு தமிழகத்திற்குத் துரோகத்தைப் பரிசாக வழங்கியுள்ளது.
வைகோ வெல்வதும் டெல்லி செல்வதும் மிக மிக அவசியம் என்பதை உணர்த்தும் நிகழ்வு இது.

தொடர்புடைய சுட்டிகள்:




சனி, 14 டிசம்பர், 2013

விறுவிறுப்பு கட்டுக்கதையும் - காங்கிரஸ், கருணாநிதி சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியமும்.

நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்னையில் ”ஈழத்தமிழர்கள் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு” என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினார்.

ஒட்டுமொத்தத் தமிழகமும் அசந்து போய் அடேங்கப்பா... என்று மூக்கில் விரலை வைக்குமளவுக்கு இலங்கையில் இராசபக்சே அரசு இனப்படுகொலை செய்தது, போர்க்குற்றம் செய்தது, மனித உரிமைகளை மீறியது, மனித குலத்திற்கெதிரான தீங்குகளைச் செய்தது என்றெல்லாம் புகார் வாசித்தார். குதிரை ஓடிவிட்டபிறகு லாயத்தை எதற்கப்பா மூடுகிறான் இந்தக் கோமாளி என்கிற அளவிலேதான் தமிழக மக்களாலும் உலகத் தமிழர்களாலும் பார்க்கப்பட்டது.

இந்திய அரசின் நிலைப்பாட்டை டெல்லியிலே பத்திரிக்கையாளர்களை அழைத்துத் தெரிவிக்காமல் சென்னையிலே ஒரு நட்சத்திர விடுதியிலே மூடிய அரங்கில் ஒரு சில தமிழகச் செய்தியாளர்களை மட்டும் அழைத்து இந்திய அரசின் நிலைப்பாடு என்று ஒரு பித்தலாட்ட அறிவிப்பை வெளியிட்டார் சிதம்பரம். 

தமிழக ஊடகங்கள் மட்டுமே அவர்களது இலக்கு. தி இந்து போன்ற தமிழக ஊடகங்களே கூட சிதம்பரம் பேசிய பேச்சைச் சுத்திகரிப்பு செய்து அதிலே இருந்த இனப்படுகொலை என்கிற சொற்களையெல்லாம் நீக்கிவிட்டு உப்புசப்பில்லாமல் வெளியிட்டு காங்கிரசையும், ப.சிதம்பரத்தையும் விட நாங்கள் இராசபக்சேவுக்கு விசுவாசமானவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டார்கள். வேறு மாநில ஊடகங்களோ, வட இந்திய ஊடகங்களோ இச்செய்தியை வெளியிட்டு இந்திய அளவில் விவாதங்களைக் கிளப்பிவிடாத அளவிற்கு மிகக் கவனமாக ஒழுங்கு செய்தார்கள்.

இது ஒருபுறமிருக்க அதே கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் அல்லக்கை மயிலாடுதுறை கே.எஸ்.அழகிரி வைகோ மற்றும் பழ.நெடுமாறன் குறித்து பல்வேறு அவதூறான செய்திகளைப் பேசினார். அதாவது வைகோ-வும், நெடுமாறனும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குத் தவறான நம்பிக்கையூட்டி அதன் மூலம் ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தடுக்கத் தவறினர் என்பது அவரது குற்றச்சாட்டின் சாரம்.

ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலையை வைகோ-வும், பழ.நெடுமாறனும் தடுக்க இயலவில்லை என்பது புதிய செய்தியா? அவர்கள் கைமீறித்தானே அவ்வளவும் நடந்தது. அவர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்தத்தமிழினமும் இலங்கையிலே நடைபெற்ற போர் நிறுத்தப்படவேண்டும் தமிழ் மக்கள் காக்கப்படவேண்டும் என்றுதானே முட்டிமோதி முயன்றது பிறகு அது முடியாமல் போனது. கருணாநிதி தி.மு.க., சோனியா காங்கிரஸ், இராசபக்சே கும்பல்,போரைத் நிறுத்த முயற்சித்த தமிழர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து அப்படியொரு இனப்படுகொலையை நடத்தி முடித்தது.

ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முயன்றவன் முடியாமல் தோற்றதாலே குற்றவாளி.. ஆனால் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்றவன் நிரபராதியா? எந்த ஊரிலே இப்படியொரு நியாயத்தை மேடை போட்டுப் பேச இயலும். ஆம்... அறம் வளர்த்த, நீதி வளர்த்த தமிழகத்தில் மட்டுமே முடியும்.

அப்படியான அழகிரியின் பேச்சை சிறுபிள்ளைகள் கூட நம்பாத காரணத்தால் அது ஒட்டு மொத்தமாக தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ்காரன்  போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டதாகவும் பிரபாகரன் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் ஒரு புனை சுருட்டை அவிழ்த்து விட்டால் எவனாவது நம்புவானா? போரை நடத்தியதே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதானே?

போரை நிறுத்துவதற்காக சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அந்த நிபந்தனைகளை (வைகோ, நெடுமாறன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்) பிரபாகரன் ஏற்கவில்லை என்றதால் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றோம் என்று ஒரு மத்திய அமைச்சர் வெளிப்படையாகப் பேசியதிலிருந்தே இவர்கள்தான் போரை நடத்தினார்கள் என்பதும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் புலனாகிவிட்டதே..

”காங்கிரசிலே மத்திய அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரமே கட்சியை விட்டும் பதவியை விட்டும் விலகிவிடு இல்லையேல் உன்னைக் கொன்று விடுவோம்” என்று ஒருவன் கூறுவதும், பிறகு பதவி விலக மறுத்ததால் அதே ஒருவன் ப.சிதம்பரத்தைக் கொன்று விட்டானென்றால் அது குற்றமில்லையா?

அவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு நான் விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாததால் கொன்றேன் என்று தனது செயலை நியாயப் படுத்துவானென்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

புலிகள் அமைப்பு உருவானதே தமிழீழ விடுதலை கோரித்தான். அந்தக் கோரிக்கையிலே என்ன தவறு. அந்தக் கோரிக்கையைக் கைவிடு இல்லையென்றால் புலிகள் அமைப்பையும் ஒட்டு மொத்தத் தமிழர்களையும் கொன்று குவிப்பேன் என்றெல்லாம் சொல்லி ஒரு இன அழிப்பை காங்கிரசும், இராசபக்சேவும் கூட்டணி சேர்ந்து நடத்தியதும் அதற்கு கருணாநிதி திமுகவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் துணை போனதற்கும் இந்தக் கருத்தரங்கில் பேசியவையே சாட்சிகளாகும்.

வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக 2010ம் ஆண்டிலேதான் சர்வதேச குற்றவிசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. அதன் விசாரணை முடிவில் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் காதர் முல்லா 12-12-2013 அன்றுதான் தூக்கிலிடப்பட்டார். தூக்குத்தண்டனையையோ, மரண தண்டனையையோ ஆதரிக்காத போதும் போர்க்குற்றங்களுக்குத் தண்டனை உறுதி என்கிற செய்தியை மட்டும் அந்நிகழ்விலேயிருந்து எடுத்துக் கொண்டு நம்பிக்கையைப் பெறுவோம்.

ஆகவே காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இலங்கை இனப்படுகொலையில் தொடர்புடைய ப.சிதம்பரம், கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் அனைவரும் விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப் படுவது உறுதி.

ப.சிதம்பரத்தின் புரட்டரங்கம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர் முகம். 





விறுவிறுப்பு என்னும் இணையதளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கப்பட்டு ரிஷி என்கிற தனிமனிதரால் நடத்தப்பட்டுவரும் இணையதளம் ஆகும். அதற்கென்று தனியாக செய்தி ஆதாரங்களோ, எக்ஸ்குளூசிவான செய்தி மூலங்களோ கிடையாது. உலகமெங்குமிருந்து செய்தியோடைகளில் கிடைக்கும் செய்திகளுக்கு வார்த்தை ஜோடனை செய்து வெளியிட்டு வரும் ஊடகம் ஆகும். தமிழகச் செய்திகளைப் பொருத்தவரை தட்ஸ்தமிழ்தான் இந்த விறுவிறுப்பு தளத்திற்கு முக்கிய செய்தி மூலமாகும்.

ப.சிதம்பரம் நடத்திய புரட்டு அரங்கம் பற்றிய செய்திகள் தமிழக ஊடகங்களில் வெளியானதும் அந்த மொட்டைச் செய்திக்கு கை,கால், கண், காது மூக்கு என்று அங்கங்கள் வைத்து சோர்ஸ், சோர்ஸ் என்று சில நபர்களின் பெயரையும் பிறவற்றை பூடகமாகவும் வைத்து வழக்கம்போல ஒரு கற்பனைக் கதையை சுவராசியமாக அனைவரும் இரசிக்கும் வண்ணம் வெளியிட்டது விறுவிறுப்பு தளம். 

தமிழக மக்களுக்கு எப்போதுமே இருக்கும் இலங்கைப் பிரச்சினை தொடர்பான செய்திகளில் காட்டும் ஆர்வத்தை வைத்தே கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் தளம் இப்படியொரு வாய்ப்பைத் தவறவிடுமா?

அவர்களுக்கு இருக்கும் சோர்ஸ்கள் முழுமையும் இராசபக்சேவிடம் இடம் மாறிய குமரன் பத்மனாபன், கருணா மற்றும் ஜெயராஜ் போன்ற இலங்கை உளவுத்துறையைச் சேர்ந்த சில தமிழர்கள் மட்டுமே. புலிகள் தரப்பிலோ தமிழகத்திலோ அவர்களுக்கு சோர்ஸ் எதுவும் கிடையாது.

விறுவிறுப்பு தளத்திடம் செய்திக்கான சோர்ஸ் இருந்திருக்குமானால் இது போன்ற செய்திகள் முதலில் விறுவிறுப்பு தளத்திலே வெளியாகியிருக்கவேண்டும் பிறகு அதனை மேற்கோள் காட்டி கே.எஸ்.அழகிரி பேசியிருக்க வேண்டும். பிறகு அதனை ஆமோதித்து ப.சிதம்பரம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்பரசண்டிகள் கோட்டைவிட்டுவிட்டார்கள். :-)

வழக்கம்போல செய்தியோடையில் கிடைத்த தகவல்களுக்கு ஜோடனை செய்து விறுவிறுப்பு ஒரு கட்டுக் கதையை வெளியிட அதிலுள்ள உள்பொருள் என்ன? இல் பொருள் என்ன? என்பது பற்றி எதுவும் ஆராயாமல் என்னவோ அக்கட்டுரை வைகோ-வுக்கும் பழ. நெடுமாறனுக்கும் எதிராக இருப்பதாகக் கருதிக் கொண்டு பரபரவென்று அதைப் பகிர்ந்து வருகிறார்கள் கருணாநிதி தி.மு.கவினர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி இரசிகர்கள். 

ஆனால் அந்தக் கட்டுரை முழுவதுமே சொந்தச் செலவில் சூனியம். எப்படி?

1. விடுதலைப் புலிகளை அவர்களது அடிப்படை உரிமைக் கோரிக்கையைக் கைவிடுமாறு இந்திய அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோர் மிரட்டல் விடுத்து ”பிளாக் மெயில் செய்தது உண்மையென்றாகிறது.

2. அவ்வாறான ஒரு மிரட்டல்/ “ப்ளாக் மெயிலுக்கு” விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒத்துக் கொள்ள, அடிபணிய மறுத்ததால் இராசபக்சேவுடன் சேர்ந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இந்திய காங்கிரஸ் அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி திமுக ஆகியோர் துணையுடன் இனப்படுகொலை செய்து முடித்ததும் உண்மையென்றாகிறது.

3. தமிழீழக் கோரிக்கை நியாயமானது என்று இலங்கையில்  இப்போதுள்ள நிலைமையும் கூட நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டிவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல வைகோ, பழ நெடுமாறன் ஆகியோரும் தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு என்று நம்பியதோடு எந்த நிலையிலும் அதனை விட்டுத் தரத் தயாராக இருந்தது இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. வைகோ-வும் நெடுமாறனும் இன்றும் சொல்லிவரும் அதே கொள்கையைத்தான் அன்றும் சொல்லியிருக்கின்றனர். அதிலென்ன தவறு? கொள்கையைச் சொன்னால் கொன்று விடுவேன் எனச் சொல்லி மிரட்டியதும் மிரட்டலுக்கு அடிபணியாததால் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததும்தானே தவறு? 

4. இறுதிவரை வைகோ-வும் பழ.நெடுமாறன் அவர்களும்தான் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆதரவு தருபவர்களாகவும் இருந்தனர் என்பதும் புதிதாய் முளைத்த காளான்கள் அண்ணன் சொன்னார், அண்ணன் சொன்னார் என்று சொல்வதெல்லாம் புருடா என்பதும் புலனாகிறது.

5. ப.சிதம்பரம், கருணாநிதி, கனிமொழி ஆகியோர் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவற்றிற்குத் துணைபோனவர்கள் என்பதும் உறுதியாகிறது. பின்னாளில் போர்க்குற்ற விசாரணை நடைபெறும்போது இவர்கள் பேசியதெல்லாம் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்பது உறுதி.

வியாழன், 12 டிசம்பர், 2013

இ.பி.கோ. 377 ஓரினச்சேர்க்கைக்கு மட்டுமா தடை விதித்தது? மனித உரிமைகளுக்கல்லவா விடை கொடுத்தது!

நேற்று 11-12-13 அன்று இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆம். இந்தத் தீர்ப்பு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிந்து வைக்கப்படும்.

படம் உதவி:  Manjul Toons

இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல என்பது பல்வேறு தருணங்களில் மெய்ப்பிக்கப்பட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை அதே உண்மையை நம் கண் முன்னே கெக்கலி கொட்டிக் காண்பிக்கப் பட்ட நாள்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள். இனிமேலும் இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்று யாரேனும் சொல்ல முடியுமா?

பிரச்சினை இதுதான். இந்திய உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது.

எந்த அடிப்படையில்?

1. எயிட்ஸ் பரவும் வாய்ப்பு.

ஆண் - பெண் விபச்சார உடலுறவால் 4.94% 
ஆண் - ஆண் உடலுறவால் 7.23%
ஊசி மருந்து பயன்படுத்துபவர்களிடையே 10.30%
என அவர்களது தீர்ப்பிலே ஒரு புள்ளிவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிபரங்கள் சரியாக இருந்தால் கூட அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் உள்ளடிக் கருத்துடையது. 

ஆண் பெண் உடலுறவில் விபச்சாரத்தின் மூலமாக மட்டுமே அதாவது ஒரு ஆண் பல பெண்களுடனோ அல்லது ஒரு பெண் பல ஆண்களுடனோ உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அதுவும் “பாதுகாப்பற்ற” உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே எயிட்ஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் எயிட்ஸ் வருவதற்கோ, பரவுவதற்கோ வாய்ப்பில்லை.

ஆண் - ஆண் உறவும் அத்தகையதே என்பதை எளிதாக மறந்து விட்டு ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்-ஆண் உறவிலும் எயிட்ஸ் பரவும் என்பதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்ன? ஆண்-ஆண் உறவிலும் ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவில் எயிட்ஸ் பரவ வாய்ப்பில்லை. ஒரு ஆண் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும்கூட பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுமாயின் அங்கே எயிட்ஸ் என்கிறபேச்சுக்கே இடமில்லை. ஆண்-ஆண் உறவு என்பதே விபச்சாரம் என்பது போலச் சித்தரிப்பது முட்டாள்த்தனமானது. ஆண்-ஆண் உறவிலும் பெருமளவு ஒருவனுக்கு ஒருவன் என்பதும் ஆண்-பெண் உறவை விட அதிக அளவு “பொசசிவ்” ஆன உறவுகள் என்பதும்தான் உண்மை. ஆண் ஆண் உறவில் துரோகமிழைக்கப்படுமாயின் கொலை வரை நீண்ட சம்பவங்கள் பலவற்றை நாம் கேட்டிருக்கிறோம். ஆக எயிட்ஸ் என்கிற வாதம் எளிதில் அடிபட்டுப் போய்விடுகிறது.

ஆண் -பெண் ஒருவருக்கொருவர் சம்மதத்தோடு உறவு கொள்வதில் தவறில்லை. உறவின்போது பாதுகாப்பைக் கடைப்பிடியுங்கள் உறையைப் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துவது போலவே ஆண் -ஆண் நண்பர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும்.

2. இயற்கைக்கு மாறான உடலுறவு

ஆண்-ஆண் உறவு இயற்கைக்கு மாறானதுதான். அதே நேரத்தில் இயற்கைக்கு மாறான எதை மனிதன் செய்யவில்லை அதில் எதை இந்தியச் சட்டம் அனுமதிக்கவில்லை என்கிற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்.

அடிப்படையில் உடையணிவதே இயற்கைக்கு மாறானதுதான். அம்மணமாகத் திரிவதுதான் இயற்கை.

பிற விடயங்களை விட்டுவிடுவோம் பாலுறவு குறித்த வகைகளிலேயே ஆண், பெண் சுய இன்பம் மற்றும் பெண்-பெண் உறவு போன்றவைகூட இயற்கைக்கு மாறானவை தானே? சுய இன்பத்தையோ, பெண்-பெண் கூடுவதையோ தடை செய்யவோ ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கவோ நீதி மன்றங்கள் முன்வருமா? :-) 

பெண்-பெண் கூடுவதிலோ, சுய இன்பத்திலோ உறுப்புகளுக்கிடையே “பெனிட்ரேசன்” இல்லை எயிட்ஸ் வர அல்லது பரவ வாய்ப்பில்லை எனக் கருதுவோர் மீண்டும் மேலே உள்ள பத்தியைப் படிக்கவும். பாதுகாப்பான உறவிலோ, ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவிலோ எயிட்ஸ் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

ஒரு ஆணுக்கு ஆணோ.. பெண்ணோ.. யார் நண்பராக இருப்பதென்பதையும் அவர்களுக்கிடையேயான நட்பு எந்த அளவுக்கு இருக்கவேண்டுமென்பதிலோ நீதிமன்றம் எவ்வாறு தலையிடமுடியும்?

ஆக.. எந்த முகாந்திரமுமில்லாமல் ஏன் இந்தத் தீர்ப்பு? இங்கேதான் மத அடிப்படைவாதிகள் வருகிறார்கள். வழக்கமாக நீதிமன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் எல்லா மதவாதிகளும் இவ்விடயத்தில் ஒன்றாகக் கைகோர்த்துள்ளனர். எல்லா மதப் புத்தகங்களிலும் ஆண்-ஆண் உறவு தவறானது என அறிவிக்கப்படுள்ளதாம். மனித உரிமைகளைவிட மத உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடு எவ்வாறு மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியும்.

நீதி மன்றங்களிலே வாதிகள் இருவர் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பின் அரசு வாக்குகளைக் குறிவைத்து மதச்சார்பற்ற நிலை எடுத்து நூறாண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கும் அரசும், நீதிமன்றமும் மதவாதிகள் ஒன்று சேர்ந்து வரவும் மனித உரிமைகளின் மென்னியை முறிக்கிற வேலையில் இறங்கிவிடுகின்றன. இனி எவராவது இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொல்ல இயலுமா? மத அடிப்படைவாதிகளை மகிழ்விக்க உச்சநீதிமன்றம் இப்படியொரு பிற்போக்கான தீர்ப்பை வழங்கியதன் உலக அரங்கிலே மிகப்பெரும் தலைகுனிவைச் சந்தித்துள்ளது இந்தியா.

எத்தனையோ மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகள் மூலையில் கிடக்க இனி பாராளுமன்றத்திலே அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே மனித உரிமை காக்கப்படும் துர்பாக்கிய நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது இந்திய உச்சநீதி மன்றம்.

இந்திய சமூகத்தில் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதென்பதே இன்னும் ஏட்டளவிலேதான் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலே காதலென்றாலே குடும்ப கவுரவம், சாதி, மதம் லொட்டு லொசுக்கு எனச் சொல்லி கிட்டத்தட்ட அத்தனை காதலும் நசுக்கப்படுகிறன. அனைத்துக் காதலும் கள்ளத்தனமாகச் செய்ய வேண்டிய இழிவான நிலையிலேதான் வைத்திருக்கிறது இந்திய சமூகம். இதிலே நீதி மன்றங்கள் வந்து பாலியல் வறட்சியில் தவிக்கும் ஆணுக்கு வேற்று பாலின இணையை அதாவது பெண்களைப் பிடித்துத்தரும் வேலையைச் செய்து தருமா? மூன்றாம் பாலின நண்பர்கள் இருவரோ அல்லது வேறு ஆணுடனோ சேர்ந்து வாழ்வது குற்றம் என்று சொல்ல முடியுமா?

அப்படியென்றால் நீங்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறீர்களா என்று என்னைக் கேட்டீர்களானால் எனது பதில்... அதிலே ஆதரிக்கவோ.. எதிர்க்கவோ ஒன்றுமில்லை என்பதுதான்.

திங்கள், 9 டிசம்பர், 2013

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் - ஒரே தொகுதியில் போட்டியிடத் திராணியிருக்கிறதா?



ஜெயலலிதா ஆட்சியமைத்தால் கருணாநிதியும் கருணாநிதி ஆட்சியமைத்தால் ஜெயலலிதாவும் சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. இதற்கிடையில் திடீர் உப்புமா, திடீர் நூடுல்ஸ் போல திடீரென்று எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தும் அது என்னவோ சட்டப்பேரவைக்குச் செல்லாமல் இருப்பது ஒரு பெருமை எனக் கருதிக் கொண்டு சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. 

துளியும் வெட்கமோ, கூச்சமோ இன்றி மாதாமாதம் கையெழுத்திட்டு சம்பளம் வாங்கத் தயங்குவதேயில்லை இந்த வெற்று உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்ற தொகுதி என்கிற வகையில் ஆளுங்கட்சியால் எவ்வித நலத் திட்டங்களுமின்றி புறக்கணிக்கப் பட்டு இவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் எவ்விதப் பயனுமின்றிப் போகிறது. 

கடந்த காலங்களிலெல்லாம் கட்சி தோற்றாலும் வென்றாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும். தலைவர் என்கிற முறையில் ஜனநாயகக் கடமையாற்றுகிற வாய்ப்பைத் தருகிற அரசியல் நாகரீகம் வேண்டும் என்கிற வகையில் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுகிறவர்கள் எதிரும் புதிருமாக ஒரே தொகுதியில் போட்டியிடுவது தவிர்க்கப்பட்டு வந்தது.

இப்போது நாகரீகமாவது புடலங்காயாவது. ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதுமில்லை. சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி அவைக்கு வருவதில்லை.

பிறகென்ன ”டேசு”க்கு இவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவி?

கட்சி தேர்தலில் தோற்குமானால் தலைவரும் தோற்று வீட்டிலே இருக்கவேண்டியதுதானே.. தலைவர்கள் என்கிற பெயரில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் செல்லாமல், ஒரு உறுப்பினர் பதவியையும் வீணாக்கி, மாதாமாதம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தைத் தண்டச் சம்பளமாக ஏன் வாங்க வேண்டும்.

இதுதான் நிலைமை என்றால் வரும் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற அனைவரும் தங்கள் திராணியை நிரூபிக்க வேண்டும்.

டெல்லியிலே தமிழகத்தைப் போல சட்டப்பேரவைக்கே வராமல் தண்டச் சம்பளம் வாங்குவார்களா என்பது தெரியாது, இருந்தபோதும் அதுபோல ஒரு முயற்சி நடந்துள்ளது பாராட்டுகள். பா.ஜ.க முதல்வர் வேட்பாளரும் சீலா தீட்சித், மற்றும் கேசரிவாலுடன் மோதியிருக்கலாம்.