சனி, 17 ஆகஸ்ட், 2013

தலைவா திரைப்படம் : உன் குத்தமா? என் குத்தமா? யாரை நானும் குத்தஞ்சொல்ல?

விஜய் நடித்து கடந்த வெள்ளியன்று வெளிவரவேண்டிய தலைவா திரைப்படம் வெளியாவது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர் தரப்போ, இயக்குனர் விஜய், நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவோ, திரைப்படத்தை வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள் தரப்போ அல்லது தமிழக அரசின் தரப்பிலோ வெளிப்படையாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக இன்னதென்று இல்லாமல் அனைத்து விவகாரங்களிலும் உள்நுழைந்து உண்மைகளை அவரவர் பாணியிலே வெளிக்கொணரும் புலனாய்வு இதழ்களும் இவ்விவகாரத்தில் மிகவும் அடக்கி வாசிக்கின்றன.


ஆனால் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்தும் சமூக வலைத்தளங்களில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களை வைத்தும் நாம் சிலவற்றை அனுமானிக்க முடிகிறது.

தலைவா திரைப்படம் படம் வெளியிடப்படாமல் நிற்பது குறித்து வெளியான வெடிகுண்டு மிரட்டலில் சிறிதும் உணமையிருப்பதாகக் கருதவில்லை. திரைப்படத்திற்கு எப்படியும் வரிவிலக்கு பெற்றுவிடுவோம் என்று வாக்குறுதி தந்து தயாரிப்பாளர் பெருந்தொகையை திரையரங்க உரிமையாளர்களின் லாபக்கணக்கில் காட்டி கூடுதல் விலைக்கு விற்றுவிட்டார். தமிழக தணிக்கைக்குழு படத்திற்கு ”யு” சான்றிதழ் வழங்கவில்லை.”யு” சான்றிதழ் பெறாத படங்கள் வரிவிலக்குக்கு பரிசீலிக்கப்படுவதில்லை. படக்குழு வேறு மாநிலத்தில் சென்று ”யு” சான்றிதழ் “வாங்கி” வந்து விட்டது. அதன்பின்னரும் தமிழக அரசின் வரிவிலக்குப் பரிசீலனை செய்யும் குழுவில் அனைவரும் இப்படம் வரிவிலக்கிற்கு ஏற்றதல்ல எனப்பரிந்துரை செய்த ஆவணங்களை தமிழக அரசே வெளியிட்டிருந்தது. இப்போது திரையரங்கங்கள் வரி செலுத்தினால் அவர்களுக்கு நட்டம் (அ) இலாபத்தில் குறைவு. அவர்கள் வரி செலுத்தி படத்தை வெளியிடத்தயாராக இல்லை. தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டால் அவருக்கு இழப்பு. தயாரிப்பாளர் படத்தை விற்றுப் பணத்தைக் கல்லாவில் போட்டுவிட்டார். மார்வாடிகளின் கல்லாவில் சென்றபணம் திரும்புமா? இதிலேதான் படம் இடையில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழக அரசு சலுகை செய்து வரிவிலக்கு அளித்துவிட்டால் தயாரிப்பாளர் தரப்புக்கும் இழப்பில்லை. திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பில்லை. வரி விலக்கு சலுகையளித்தால் யாருக்கு இழப்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தமிழக அரசுக்குத்தான். 

ஆக, தலைவா திரைப்படம் வெளியாகாமல் சிக்கி நிற்பது தமிழக அரசின் வரிச்சலுகையை எதிர்பார்த்துதான். சலுகையை எதிர்பாக்கும் இவர்கள் எப்படி அரசை முறைத்துக்கொள்ள முடியும். அரசைக் கண்டித்தோ எதிர்த்தோ போராட்டம் நடத்த முடியும்? ஒருவேளை அப்படிப் போராட்டம் நடத்தினால் அரசு சலுகை வழங்கி விடுமா?

சரி நடிகர் விஜய் தரப்பில் என்ன தவறு நிகழ்ந்தது? ஒருவேளை அவரும் தயாரிப்பில் தலையிட்டு வரிவிலக்கு உத்தரவாதமளித்து திரையரங்க உரிமையாளர்கள் தலையில் கட்டியிருப்பாரேயானால் அவருக்கும் படம் வெளிவருவதில் ஏற்பட்ட சிக்கலில் பங்கு உண்டு. ஆனால் விஜய் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை. நடித்துக் கொடுத்ததுடன் கடமை முடிந்ததுபோலத்தான் செயல்படுகிறார். வெளியீட்டு நாளன்று ரசிகர்மன்ற காட்சிகள், பதாகைகள் என்பன போன்ற செயல்பாடுகள் வழக்கமானதுதான்.  பிறகு வெளியிடப்பட்ட வீடியோ அறிக்கை கூட ஏதோ நிர்ப்பந்தத்தால் பேசியதுபோலத்தான் தோன்றியது. உண்மையிலேயே விஜய் தரப்பிற்கு ஏதேனும் நெருக்கடியிருக்குமெனில் நிச்சயம் ரசிகர்களைத் திரட்டி போராடக்கூடிய அளவிற்கு அமைப்பு பலம் அவர்களிடமிருக்கிறது. அவர் அதில் முனைப்பு காட்டாததிலிருந்து விஜய் தரப்பில் எதுவும் பிழையிருக்க வாய்ப்பில்லை எனப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் வருகிற இழப்பை அடுத்த படத்தில் சரிக்கட்ட விநியோகஸ்தர்கள்/ திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தக்கூடும். அதுவொன்றும் அவருக்குப் பெரிய விசயமில்லை. துப்பாக்கி திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அடுத்த படத்தில் விஜய் முஸ்லிமாக நடிப்பார் என்கிற அற்புதமான டீலிங்கைப் போட்டு படத்தை வெளியிட்டவர்தானே? இதெல்லாம் அவருக்குத் தூசு.

தயாரிப்பாளர் செய்தியாளர் சந்திப்பிலும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. தமிழக அரசு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசியதும் அரசிடமிருந்து சலுகை எதிர்பார்ப்பதுபோலத்தான் இருந்தது.

படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்திருப்பதாகவும் தெரியவில்லை. அப்படித் தடை விதிக்கப்பட்டிருக்குமேயானால் ஏன் தடை? எதற்காகத் தடை? என்பதையெல்லாம் அரசே வெளியிட்டிருக்கும். அப்படியே காரணம் சொல்லவில்லையென்றால் தயாரிப்பாளர் தரப்போ, படக்குழுவோ, வெளியாட்களில் ஒருவரோ கூட காரணத்தை  வெளியிட நிர்ப்பந்திக்கலாம். அதையும் மீறினால் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அரசை நிர்பந்தம் செய்ய வழியிருக்கிறது.

வெடிகுண்டு புரளியெல்லாம் உண்மையாக இருந்தால் கூட வைத்து பத்து நாட்களாக ஏசி திரையரங்குகளிலும், பெய்த மழை காரணமாகவும் வெடிகுண்டெல்லாம் நமத்துப் போயிருக்கும். மிரட்டல் விடுத்தவனே படத்தைப் போட்டுத் தொலைங்கடா என்று வெறுத்துப்போயிருப்பான்.  இப்போதும் வெடிகுண்டு மிரட்டலுக்காக என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்லுமேயானால் நம் ஒவ்வொருவர் காதிலும் ஒன்றரை முழம் பூவைச் சுத்துகிறார்கள் என்று பொருள்.

திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும், தமிழக மக்களும் கட்டுகின்ற வரியை அரசுக்குச் செலுத்தாமல்  ஒரு சில மனிதர்கள் மிகுதியாகச் சம்பாதிக்கும் பொருட்டு கல்லாக்கட்ட அனுமதிக்க வேண்டுமா என்கிற சிந்தனையோடு...

2 கருத்துகள்:

  1. சிறந்த திறனாய்பு கட்டுரை //திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும், தமிழக மக்களும் கட்டுகின்ற வரியை அரசுக்குச் செலுத்தாமல் ஒரு சில மனிதர்கள் மிகுதியாகச் சம்பாதிக்கும் பொருட்டு கல்லாக்கட்ட அனுமதிக்க வேண்டுமா என்கிற சிந்தனையோடு....//

    பதிலளிநீக்கு
  2. வடிவேலு அடைந்த பிரச்சினை இதை விட மேலானது. அப்போது எவரும் குரல் தரவில்லை.
    இவருக்கு மட்டும் எதற்கு. இரண்டிலும் நேரடியாக அரசின் தொல்லை இல்லை. ஆக, பிரச்னை இன்னதென்று சொல்லாமல் இன்று வரை இருப்பது எங்கோ பேரம் படியவில்லை என்பதாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு