வியாழன், 12 டிசம்பர், 2013

இ.பி.கோ. 377 ஓரினச்சேர்க்கைக்கு மட்டுமா தடை விதித்தது? மனித உரிமைகளுக்கல்லவா விடை கொடுத்தது!

நேற்று 11-12-13 அன்று இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆம். இந்தத் தீர்ப்பு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிந்து வைக்கப்படும்.

படம் உதவி:  Manjul Toons

இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல என்பது பல்வேறு தருணங்களில் மெய்ப்பிக்கப்பட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை அதே உண்மையை நம் கண் முன்னே கெக்கலி கொட்டிக் காண்பிக்கப் பட்ட நாள்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள். இனிமேலும் இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்று யாரேனும் சொல்ல முடியுமா?

பிரச்சினை இதுதான். இந்திய உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது.

எந்த அடிப்படையில்?

1. எயிட்ஸ் பரவும் வாய்ப்பு.

ஆண் - பெண் விபச்சார உடலுறவால் 4.94% 
ஆண் - ஆண் உடலுறவால் 7.23%
ஊசி மருந்து பயன்படுத்துபவர்களிடையே 10.30%
என அவர்களது தீர்ப்பிலே ஒரு புள்ளிவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிபரங்கள் சரியாக இருந்தால் கூட அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் உள்ளடிக் கருத்துடையது. 

ஆண் பெண் உடலுறவில் விபச்சாரத்தின் மூலமாக மட்டுமே அதாவது ஒரு ஆண் பல பெண்களுடனோ அல்லது ஒரு பெண் பல ஆண்களுடனோ உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அதுவும் “பாதுகாப்பற்ற” உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே எயிட்ஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் எயிட்ஸ் வருவதற்கோ, பரவுவதற்கோ வாய்ப்பில்லை.

ஆண் - ஆண் உறவும் அத்தகையதே என்பதை எளிதாக மறந்து விட்டு ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்-ஆண் உறவிலும் எயிட்ஸ் பரவும் என்பதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்ன? ஆண்-ஆண் உறவிலும் ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவில் எயிட்ஸ் பரவ வாய்ப்பில்லை. ஒரு ஆண் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும்கூட பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுமாயின் அங்கே எயிட்ஸ் என்கிறபேச்சுக்கே இடமில்லை. ஆண்-ஆண் உறவு என்பதே விபச்சாரம் என்பது போலச் சித்தரிப்பது முட்டாள்த்தனமானது. ஆண்-ஆண் உறவிலும் பெருமளவு ஒருவனுக்கு ஒருவன் என்பதும் ஆண்-பெண் உறவை விட அதிக அளவு “பொசசிவ்” ஆன உறவுகள் என்பதும்தான் உண்மை. ஆண் ஆண் உறவில் துரோகமிழைக்கப்படுமாயின் கொலை வரை நீண்ட சம்பவங்கள் பலவற்றை நாம் கேட்டிருக்கிறோம். ஆக எயிட்ஸ் என்கிற வாதம் எளிதில் அடிபட்டுப் போய்விடுகிறது.

ஆண் -பெண் ஒருவருக்கொருவர் சம்மதத்தோடு உறவு கொள்வதில் தவறில்லை. உறவின்போது பாதுகாப்பைக் கடைப்பிடியுங்கள் உறையைப் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துவது போலவே ஆண் -ஆண் நண்பர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும்.

2. இயற்கைக்கு மாறான உடலுறவு

ஆண்-ஆண் உறவு இயற்கைக்கு மாறானதுதான். அதே நேரத்தில் இயற்கைக்கு மாறான எதை மனிதன் செய்யவில்லை அதில் எதை இந்தியச் சட்டம் அனுமதிக்கவில்லை என்கிற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்.

அடிப்படையில் உடையணிவதே இயற்கைக்கு மாறானதுதான். அம்மணமாகத் திரிவதுதான் இயற்கை.

பிற விடயங்களை விட்டுவிடுவோம் பாலுறவு குறித்த வகைகளிலேயே ஆண், பெண் சுய இன்பம் மற்றும் பெண்-பெண் உறவு போன்றவைகூட இயற்கைக்கு மாறானவை தானே? சுய இன்பத்தையோ, பெண்-பெண் கூடுவதையோ தடை செய்யவோ ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கவோ நீதி மன்றங்கள் முன்வருமா? :-) 

பெண்-பெண் கூடுவதிலோ, சுய இன்பத்திலோ உறுப்புகளுக்கிடையே “பெனிட்ரேசன்” இல்லை எயிட்ஸ் வர அல்லது பரவ வாய்ப்பில்லை எனக் கருதுவோர் மீண்டும் மேலே உள்ள பத்தியைப் படிக்கவும். பாதுகாப்பான உறவிலோ, ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவிலோ எயிட்ஸ் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

ஒரு ஆணுக்கு ஆணோ.. பெண்ணோ.. யார் நண்பராக இருப்பதென்பதையும் அவர்களுக்கிடையேயான நட்பு எந்த அளவுக்கு இருக்கவேண்டுமென்பதிலோ நீதிமன்றம் எவ்வாறு தலையிடமுடியும்?

ஆக.. எந்த முகாந்திரமுமில்லாமல் ஏன் இந்தத் தீர்ப்பு? இங்கேதான் மத அடிப்படைவாதிகள் வருகிறார்கள். வழக்கமாக நீதிமன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் எல்லா மதவாதிகளும் இவ்விடயத்தில் ஒன்றாகக் கைகோர்த்துள்ளனர். எல்லா மதப் புத்தகங்களிலும் ஆண்-ஆண் உறவு தவறானது என அறிவிக்கப்படுள்ளதாம். மனித உரிமைகளைவிட மத உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடு எவ்வாறு மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியும்.

நீதி மன்றங்களிலே வாதிகள் இருவர் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பின் அரசு வாக்குகளைக் குறிவைத்து மதச்சார்பற்ற நிலை எடுத்து நூறாண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கும் அரசும், நீதிமன்றமும் மதவாதிகள் ஒன்று சேர்ந்து வரவும் மனித உரிமைகளின் மென்னியை முறிக்கிற வேலையில் இறங்கிவிடுகின்றன. இனி எவராவது இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொல்ல இயலுமா? மத அடிப்படைவாதிகளை மகிழ்விக்க உச்சநீதிமன்றம் இப்படியொரு பிற்போக்கான தீர்ப்பை வழங்கியதன் உலக அரங்கிலே மிகப்பெரும் தலைகுனிவைச் சந்தித்துள்ளது இந்தியா.

எத்தனையோ மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகள் மூலையில் கிடக்க இனி பாராளுமன்றத்திலே அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே மனித உரிமை காக்கப்படும் துர்பாக்கிய நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது இந்திய உச்சநீதி மன்றம்.

இந்திய சமூகத்தில் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதென்பதே இன்னும் ஏட்டளவிலேதான் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலே காதலென்றாலே குடும்ப கவுரவம், சாதி, மதம் லொட்டு லொசுக்கு எனச் சொல்லி கிட்டத்தட்ட அத்தனை காதலும் நசுக்கப்படுகிறன. அனைத்துக் காதலும் கள்ளத்தனமாகச் செய்ய வேண்டிய இழிவான நிலையிலேதான் வைத்திருக்கிறது இந்திய சமூகம். இதிலே நீதி மன்றங்கள் வந்து பாலியல் வறட்சியில் தவிக்கும் ஆணுக்கு வேற்று பாலின இணையை அதாவது பெண்களைப் பிடித்துத்தரும் வேலையைச் செய்து தருமா? மூன்றாம் பாலின நண்பர்கள் இருவரோ அல்லது வேறு ஆணுடனோ சேர்ந்து வாழ்வது குற்றம் என்று சொல்ல முடியுமா?

அப்படியென்றால் நீங்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறீர்களா என்று என்னைக் கேட்டீர்களானால் எனது பதில்... அதிலே ஆதரிக்கவோ.. எதிர்க்கவோ ஒன்றுமில்லை என்பதுதான்.

திங்கள், 9 டிசம்பர், 2013

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் - ஒரே தொகுதியில் போட்டியிடத் திராணியிருக்கிறதா?



ஜெயலலிதா ஆட்சியமைத்தால் கருணாநிதியும் கருணாநிதி ஆட்சியமைத்தால் ஜெயலலிதாவும் சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. இதற்கிடையில் திடீர் உப்புமா, திடீர் நூடுல்ஸ் போல திடீரென்று எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தும் அது என்னவோ சட்டப்பேரவைக்குச் செல்லாமல் இருப்பது ஒரு பெருமை எனக் கருதிக் கொண்டு சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. 

துளியும் வெட்கமோ, கூச்சமோ இன்றி மாதாமாதம் கையெழுத்திட்டு சம்பளம் வாங்கத் தயங்குவதேயில்லை இந்த வெற்று உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்ற தொகுதி என்கிற வகையில் ஆளுங்கட்சியால் எவ்வித நலத் திட்டங்களுமின்றி புறக்கணிக்கப் பட்டு இவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் எவ்விதப் பயனுமின்றிப் போகிறது. 

கடந்த காலங்களிலெல்லாம் கட்சி தோற்றாலும் வென்றாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும். தலைவர் என்கிற முறையில் ஜனநாயகக் கடமையாற்றுகிற வாய்ப்பைத் தருகிற அரசியல் நாகரீகம் வேண்டும் என்கிற வகையில் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுகிறவர்கள் எதிரும் புதிருமாக ஒரே தொகுதியில் போட்டியிடுவது தவிர்க்கப்பட்டு வந்தது.

இப்போது நாகரீகமாவது புடலங்காயாவது. ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதுமில்லை. சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி அவைக்கு வருவதில்லை.

பிறகென்ன ”டேசு”க்கு இவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவி?

கட்சி தேர்தலில் தோற்குமானால் தலைவரும் தோற்று வீட்டிலே இருக்கவேண்டியதுதானே.. தலைவர்கள் என்கிற பெயரில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் செல்லாமல், ஒரு உறுப்பினர் பதவியையும் வீணாக்கி, மாதாமாதம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தைத் தண்டச் சம்பளமாக ஏன் வாங்க வேண்டும்.

இதுதான் நிலைமை என்றால் வரும் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற அனைவரும் தங்கள் திராணியை நிரூபிக்க வேண்டும்.

டெல்லியிலே தமிழகத்தைப் போல சட்டப்பேரவைக்கே வராமல் தண்டச் சம்பளம் வாங்குவார்களா என்பது தெரியாது, இருந்தபோதும் அதுபோல ஒரு முயற்சி நடந்துள்ளது பாராட்டுகள். பா.ஜ.க முதல்வர் வேட்பாளரும் சீலா தீட்சித், மற்றும் கேசரிவாலுடன் மோதியிருக்கலாம். 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காமன்வெல்த்: தி.மு.க.-காங். நாடகம். ”அரங்கேற்ற வேளை” இப்போது.. ”அறுவடை நாள்” எப்போது?

பொதுநலவாய மாநாடு இனப்படுகொலை நாடான இலங்கையில் நடத்தப்படக் கூடாது, பொதுநலவாய அமைப்பிலிருந்து (தற்காலிகமாகவாவது) இலங்கை நீக்கப்படவேண்டும், அப்படியே அம்மாநாடு இலங்கையிலே நடைபெற்றாலும் கூட இந்திய அரசு அம்மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து இந்திய அரசு எப்போதும் மனித நேயத்தின் பக்கமே நிற்கும் என்று உலகிற்கு உரத்த குரலில் உரைக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கையாக இருந்தது.

இனப்படுகொலையில் இலங்கைக்கு துணைபோன கூட்டுக் குற்றவாளியான இந்தியா எப்படி மேற்கண்ட கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் என்பது அனைவரின் ஐயமும் அச்சமுமாக இருந்ததும் உண்மைதான்.

இலங்கை அரசின் மீது இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என எந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபையிலோ, உலக நாடுகள் மத்தியிலோ  பேச்சு எழுந்தால் கூட துடித்துப்போய் களமிறங்கி இலங்கையைக் காப்பாற்ற அத்த்னை முயற்சிகளையுமெடுத்து வருவது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை ஆணையத்திலே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால், தீர்மானம் வருவதைத் தடுக்க முனைவதும் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் மேற்குலக நாடுகளின் நெருக்கடியால் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால் அத்தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்து இலங்கையைக் காப்பாற்றியதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகக் கண்டோம்.

இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் காரணமாகக் காட்டி ஐரோப்பிய நாடுகளிலே இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகள், கடன் அல்லது உதவித் தொகைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படுமேயானால் இலங்கை அதிபர் இராசபக்சே மற்றும் அவரது பரிவாரங்களை இந்தியா வரவழைத்து விருந்து உபச்சாரங்கள் நடத்தி நாங்கள் இலங்கையின் பின்னே இருக்கிறோம் என அந்த நாடுகளைக் கேலி செய்ததும் நடந்தது. இந்தியாவிலிருந்து தமிழகத் துரோகக் கும்பலைச் சேர்ந்த தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் குழுவினை அனுப்பி அங்கே அனைத்தும் சிறப்பாக உள்ளது என இலங்கை அரசுக்குச் சான்றிதழ்கள் வழங்கி அந்தச் சான்றிதழ்களை இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுத்த நாடுகளின் முகத்திலே இலங்கை அரசை வீசச் செய்து அந்நாடுகளை அசிங்கப் படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

வேறு எவ்வகையில் இலங்கை அரசைக் காப்பாற்றுவது எனத் திட்டமிட்டு இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 54 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பிலே இராசபக்சேவை அமரவைத்துவிட்டால் எதிர்காலங்களில் எந்த உலகநாடுகளின் அமைப்புகளிலும் இலங்கை அரசை, இராசபக்சேவைத் தண்டிக்க முடியாது எனகிற நோக்கத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு துவங்கியதன் விளைவுதான் இந்த காமன்வெல்த் அரசுகளின் தலைவர்களுக்கான மாநாடு.

தமிழகத்தின் மாணவர் எழுச்சி மற்றும் மக்கள் போராட்டங்களின் விளைவாக காங்கிரசுடன் சேர்ந்து துரோகங்கள் பல புரிந்த தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக ஒரு அப்பட்டமான நாடகத்தை நிறைவேற்றி அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரசைக் காப்பாற்றுகிற வேலையிலே ஈடுபட்டு வந்ததையும், வரப்போகின்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதையும் நாம் பார்க்கிறோம்

இப்பொது காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடத்தப்படக்கூடாது, அப்படி நடந்தாலும் இந்திய அரசு கல்ந்துகொள்ளக்கூடாது என்ற ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனிமைப் பட்டுப் போவதைத் தவிர்க்க தாங்களும் இதே கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும், இந்திய அரசுக்கு நெருக்கடி தருவதாகவும் “உள்ளே வெளியே” நாடகமாடி வந்தன.

அந்த நாடகம் இப்போது முழுமையாக நிறைவேறப் போவதாகத் தெரிகிறது. அதாவது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லையாம்.. ஆனால் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட படை பரிவாரங்களனைத்தும் கலந்து கொள்ளப்போகிறார்களாம். துரோகிகள் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என எதிர்பார்க்கப் பட்டதுதான். 

பிரதமர் கலந்து கொள்வதா வேண்டாமா என்பதை அறிவிக்க கடைசி நிமிடம் வரை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியப் பிரதமர் ஏன் கலந்து கொள்ளவில்லை என உலக நாடுகள் கேள்விகள் எழுப்பும். அதற்கான காரணங்களை அலசும். ஏற்கனவே கனடா கலந்து கொள்ளாது என அறிவித்தபோது இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்படுத்திய விவாதங்கள் போன்று நடைபெற்றுவிடக் கூடாது என்கிற நயவஞ்சக நோக்கமின்றி வேறென்ன?

இந்திய அரசின் இத்தகைய செயல்பாடு ஒரு மன நோயாளி செய்வது போலல்லவா இருக்கிறது. தமிழக மக்களின் போராட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் கலந்து கொள்வது தவிர்க்கப் பட்டிருந்தாலும் அதற்கான பலன்கள் தமிழர்களைச் சென்றடையக்கூடாது என்கிற கொடிய நோக்கத்துடனல்லவா செயல்படுகின்றன. தமிழர்களுக்கு அவ்வாறு சிறு பலன்களும் கிடைப்பதைத் தடுக்கிற நோக்கிலேதான் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நாடகமாடி வருகின்றன.

இந்திய அரசு பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை? இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையா? இலங்கையிலே நடைபெற்ற போர்க்குற்றங்களா? இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களா?

இவையெதுவுமில்லையென்றால் As I am suffering from fever, i am unable to attend போலவா என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். 

கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் என்ன ______க்காகச் செல்கிறார். ஏற்கனவே தமிழக காங்கிரசு அமைச்சர்களால் வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது போல இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கெதிராக இலங்கை அரசு மற்றும் இராசபக்சே மீது அனைத்துலக நாடுகளால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப் படவேண்டுமென பேசப்போகிறாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

தி.மு.க., வி.சி.க., காங்கிரசுக் கூட்டணியின் நாடகங்களில் புதிய அத்தியாயமான காமன்வெல்த் அத்தியாயம்  அரங்கேறும் வேளை வந்திருக்கிறது. ”அரங்கேற்ற வேளை” ஒருநாள் வந்தால் ”அறுவடை நாளும்” வந்துதானே தீரும்.

துரோகத்தைப் பரிசளித்தவர்களுக்கு திருப்பிச் செலுத்துகிற வாய்ப்பு 2014 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கருணாநிதி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அதை நியாயப் படுத்த என்ன காரணம் சொல்வார்?




OPTIONS:

A) பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியல்ல. தி.மு.க. தீண்டாமைக்கு எதிரான இயக்கம்.


B) பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோமே தவிர நாங்கள் மோடியை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெற்றுச் செல்லும் கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மோடியை ஆதரித்து வாக்களித்தாலும் விவாதங்களில் ஆதரிக்க மாட்டார்கள்.

C) கடந்த பத்தாண்டுகளாக எவ்வாறு முந்திக்கொண்டு காங்கிரசோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க போன்ற பிற கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடுத்தோமோ அதே வகையில் இப்போதும் பிற கட்சிகள் பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதைத் தடுக்கவே தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் இவ்வாறு பா,ஜ,கவோடு கூட்டணி வைக்கவில்லையெனில் வேறு கட்சிகள் கூட்டணி வைத்து அதனால் ஜனநாயகத்திற்குப் பெரும் தீங்கு விளைந்திருக்கும் என்பதை நாடறியும். ஏடறியும்.

D) குஜராத்திலே மதக்கலவரங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மோடியோ குஜராத்திலே முதல்வராக இருக்கிறார். நாம் குஜராத் சட்டசபையிலே சென்று அவரைக் கேள்விகேட்க நமக்கு அங்கே உறுப்பினர்கள் இல்லை. ஆகவே, மோடியைப் பிரதமரானால் அதன்மூலம் அவர் நாடாளுமன்றத்தில் அமருகிற நிலை உருவாகும். நாடாளுமன்றத்திலே இருக்கும் நம் கழக உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக குஜராத் மதக்கலவரங்கள் குறித்து கேள்வி கேட்கிற வாய்ப்பு ஏற்படும் என்கிற உன்னத நோக்கத்தினாலேதான் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துள்ளோம்.

E) டெசோ அமைப்பிலே காங்கிரஸ் பங்குபெறாததைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து வெளியேற முடிவெடுத்தோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் டெசோ அமைப்பிலே அவர்கள் சேர வாய்ப்பிருக்கிறது என்கிற உறுதிமொழியை அவர்கள் எதிர்காலத்திலே வழங்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நமக்கு இல்லாமலில்லை. அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்தக் கூட்டணி அமையவிருக்கிறது.

F) காங்கிரஸ் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அந்தந்த ஊழல்கள் தொடர்பாக ஆங்காங்கே விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருவதாக கழக உடன்பிறப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படிப்பட்ட தகவல்கள் நம் பொதுச்செயலாளர் மற்றும் நம் பொருளாளர் அவர்கள் கவனத்திற்கும் எடுத்துவரப்பட்டு அதே தகவல்கள் நம் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் விவாதிக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டு இருக்கிற சூழலிலே நாம் இன்னமும் காங்கிரஸ் கூட்டணியிலே தொடர வேண்டுமா? என்கிற கேள்விகள் எழாமலிருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் அதனைப் புறந்தள்ளிவிடவும் வழியின்றி ஒரு முடிவெடுத்திட வேண்டிய காலகட்டத்தில் நம் கழக கண்மணிகளாம் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பொய்யான குற்றசசாட்டுகளின் அடிப்படையிலே சிறையிலே அடைக்கப்பட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலைகளையும் கருத்திலே கொண்டு காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் அதற்கு மாற்று என்கிற வகையிலே வேறு எந்தத் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கமுடியும் என்கிற பல்வேறு விவாதங்கள் நடைபெற்று அதிலே என்னென்ன முடிவுகளெடுக்கப்பட்டன என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதென எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்வதே கழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதெனக் கருதி பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

G) மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும்.

சனி, 2 நவம்பர், 2013

தமிழக அரசே... தோழர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்.





இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அதனைத் தடுத்திட இந்திய அரசு முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் கோரிக்கை வைத்தும் இந்திய அரசு செவி சாய்க்காமல் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோல வெளியுறவு அமைச்சர் வாயிலாக அந்நிகழ்விலே கலந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டி தமிழக மக்களின் பொறுமையின் ஆழத்தைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். 

மத்திய அரசைக் கண்டிக்க வன்முறையைக் கையிலெடுப்பதை எந்நிலையிலும் ஆதரிப்பதற்கில்லை.

இவ்வாறான பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தி.வி.க. தோழர்கள் ஈடுபட்டிருப்பார்களேயானால் அவர்கள் செய்யும் செயலின் தீவிரம் என்ன? அதன் பின் விளைவுகள் என்ன என்பதை அறிந்தே செய்திருப்பார்கள். இது போன்ற செயல்களைச் செய்து சிறை செல்வதை தியாகம் என நினைத்திருப்பார்களேயானால் அவர்களின் தியாகத்தை மதித்து அவர்களைச் சிறையிலடைத்து அவர்களின் தியாகத்தை அரசு முழுமையடையச் செய்வதே சரியாகும். ஆகவே திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தான் செய்திருப்பார்களேயானால் அவர்கள் கைது செய்யப்படுவதிலோ வழக்கைச் சந்திக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்கப் போவதில்லை. 

ஏற்கனவே ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு இந்திய அரசும் காங்கிரசு, கருணாநிதி தி.மு.க. கூட்டணியின் துரோகத்தைக் கண்டித்தும், ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்புச் செய்த காரணத்தால் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 18 தமிழர்கள் வன்முறையில் ஈடுபடாமல் உச்சபட்ச தியாகமான தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் அதன் பயனாக இந்திய அரசும், ஊடகங்களும், துரோகக் கும்பலும் திருந்திவிடாதா என்ற ஏக்கத்துடனே இறந்து போயினர். அவர்கள் தியாகங்களும் வீணாகப் போயின.

மேலும் மேலும் துரோகங்களைப் பரிசளிக்கும் இந்திய அரசையும் அதன் தமிழகக் கூட்டாளிகளையும் கண்டித்தோ அவர்களின் கேளாக் காதுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டோ இனியும் எவரும் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயல்வது ஒருவகை முட்டாள்தனமென்றால், வன்முறைச் செயல்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முயல்வது வேறுவகை முட்டாள்தனம்.

மத்திய அரசு அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் தி.வி.க. தோழர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களைக் கைது செய்திருப்பது அடாத செயல்.

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மிகவும் கண்ணியமானவர், அதிர்ந்து பேசக்கூடத் தெரியாதவர். மிகவும் ஆத்திரமூட்டும் விவாதக் களங்களேயானாலும் ஆத்திரப்படாமல் அறிவுப்பூர்வமாக தன் கருத்துக்களைப் பாங்குடனே எடுத்து வைக்கிற பக்குவப்பட்டவர்.

ஒருவேளை தொண்டர்கள் செய்த(?) சில செயல்களுக்காக தலைவர் கைது செய்யப்படுவதுதான் சரியென்றால்

பல்லாயிரம் கோடி ரூ. 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

தா.கிருட்டிணன் கொலை வழக்கிலே கருணாநிதியோ, மு.க.ஸ்டாலினோ கைது செய்யப்பட்டார்களா? 

கிரானைட் கொள்ளை வழக்கிலே கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிலே ஜெயலலிதா ஏன் கைது செய்யப்படவில்லை?

தமிழீழத்திலே ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்விலே தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் பொய் வழக்கில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

தமிழக அரசு இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடாமல் தோழர் கொளத்தூர் மணி அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

தலைவா திரைப்படம் : உன் குத்தமா? என் குத்தமா? யாரை நானும் குத்தஞ்சொல்ல?

விஜய் நடித்து கடந்த வெள்ளியன்று வெளிவரவேண்டிய தலைவா திரைப்படம் வெளியாவது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர் தரப்போ, இயக்குனர் விஜய், நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவோ, திரைப்படத்தை வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள் தரப்போ அல்லது தமிழக அரசின் தரப்பிலோ வெளிப்படையாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக இன்னதென்று இல்லாமல் அனைத்து விவகாரங்களிலும் உள்நுழைந்து உண்மைகளை அவரவர் பாணியிலே வெளிக்கொணரும் புலனாய்வு இதழ்களும் இவ்விவகாரத்தில் மிகவும் அடக்கி வாசிக்கின்றன.


ஆனால் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்தும் சமூக வலைத்தளங்களில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களை வைத்தும் நாம் சிலவற்றை அனுமானிக்க முடிகிறது.

தலைவா திரைப்படம் படம் வெளியிடப்படாமல் நிற்பது குறித்து வெளியான வெடிகுண்டு மிரட்டலில் சிறிதும் உணமையிருப்பதாகக் கருதவில்லை. திரைப்படத்திற்கு எப்படியும் வரிவிலக்கு பெற்றுவிடுவோம் என்று வாக்குறுதி தந்து தயாரிப்பாளர் பெருந்தொகையை திரையரங்க உரிமையாளர்களின் லாபக்கணக்கில் காட்டி கூடுதல் விலைக்கு விற்றுவிட்டார். தமிழக தணிக்கைக்குழு படத்திற்கு ”யு” சான்றிதழ் வழங்கவில்லை.”யு” சான்றிதழ் பெறாத படங்கள் வரிவிலக்குக்கு பரிசீலிக்கப்படுவதில்லை. படக்குழு வேறு மாநிலத்தில் சென்று ”யு” சான்றிதழ் “வாங்கி” வந்து விட்டது. அதன்பின்னரும் தமிழக அரசின் வரிவிலக்குப் பரிசீலனை செய்யும் குழுவில் அனைவரும் இப்படம் வரிவிலக்கிற்கு ஏற்றதல்ல எனப்பரிந்துரை செய்த ஆவணங்களை தமிழக அரசே வெளியிட்டிருந்தது. இப்போது திரையரங்கங்கள் வரி செலுத்தினால் அவர்களுக்கு நட்டம் (அ) இலாபத்தில் குறைவு. அவர்கள் வரி செலுத்தி படத்தை வெளியிடத்தயாராக இல்லை. தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டால் அவருக்கு இழப்பு. தயாரிப்பாளர் படத்தை விற்றுப் பணத்தைக் கல்லாவில் போட்டுவிட்டார். மார்வாடிகளின் கல்லாவில் சென்றபணம் திரும்புமா? இதிலேதான் படம் இடையில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழக அரசு சலுகை செய்து வரிவிலக்கு அளித்துவிட்டால் தயாரிப்பாளர் தரப்புக்கும் இழப்பில்லை. திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பில்லை. வரி விலக்கு சலுகையளித்தால் யாருக்கு இழப்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தமிழக அரசுக்குத்தான். 

ஆக, தலைவா திரைப்படம் வெளியாகாமல் சிக்கி நிற்பது தமிழக அரசின் வரிச்சலுகையை எதிர்பார்த்துதான். சலுகையை எதிர்பாக்கும் இவர்கள் எப்படி அரசை முறைத்துக்கொள்ள முடியும். அரசைக் கண்டித்தோ எதிர்த்தோ போராட்டம் நடத்த முடியும்? ஒருவேளை அப்படிப் போராட்டம் நடத்தினால் அரசு சலுகை வழங்கி விடுமா?

சரி நடிகர் விஜய் தரப்பில் என்ன தவறு நிகழ்ந்தது? ஒருவேளை அவரும் தயாரிப்பில் தலையிட்டு வரிவிலக்கு உத்தரவாதமளித்து திரையரங்க உரிமையாளர்கள் தலையில் கட்டியிருப்பாரேயானால் அவருக்கும் படம் வெளிவருவதில் ஏற்பட்ட சிக்கலில் பங்கு உண்டு. ஆனால் விஜய் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை. நடித்துக் கொடுத்ததுடன் கடமை முடிந்ததுபோலத்தான் செயல்படுகிறார். வெளியீட்டு நாளன்று ரசிகர்மன்ற காட்சிகள், பதாகைகள் என்பன போன்ற செயல்பாடுகள் வழக்கமானதுதான்.  பிறகு வெளியிடப்பட்ட வீடியோ அறிக்கை கூட ஏதோ நிர்ப்பந்தத்தால் பேசியதுபோலத்தான் தோன்றியது. உண்மையிலேயே விஜய் தரப்பிற்கு ஏதேனும் நெருக்கடியிருக்குமெனில் நிச்சயம் ரசிகர்களைத் திரட்டி போராடக்கூடிய அளவிற்கு அமைப்பு பலம் அவர்களிடமிருக்கிறது. அவர் அதில் முனைப்பு காட்டாததிலிருந்து விஜய் தரப்பில் எதுவும் பிழையிருக்க வாய்ப்பில்லை எனப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் வருகிற இழப்பை அடுத்த படத்தில் சரிக்கட்ட விநியோகஸ்தர்கள்/ திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தக்கூடும். அதுவொன்றும் அவருக்குப் பெரிய விசயமில்லை. துப்பாக்கி திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அடுத்த படத்தில் விஜய் முஸ்லிமாக நடிப்பார் என்கிற அற்புதமான டீலிங்கைப் போட்டு படத்தை வெளியிட்டவர்தானே? இதெல்லாம் அவருக்குத் தூசு.

தயாரிப்பாளர் செய்தியாளர் சந்திப்பிலும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. தமிழக அரசு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசியதும் அரசிடமிருந்து சலுகை எதிர்பார்ப்பதுபோலத்தான் இருந்தது.

படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்திருப்பதாகவும் தெரியவில்லை. அப்படித் தடை விதிக்கப்பட்டிருக்குமேயானால் ஏன் தடை? எதற்காகத் தடை? என்பதையெல்லாம் அரசே வெளியிட்டிருக்கும். அப்படியே காரணம் சொல்லவில்லையென்றால் தயாரிப்பாளர் தரப்போ, படக்குழுவோ, வெளியாட்களில் ஒருவரோ கூட காரணத்தை  வெளியிட நிர்ப்பந்திக்கலாம். அதையும் மீறினால் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அரசை நிர்பந்தம் செய்ய வழியிருக்கிறது.

வெடிகுண்டு புரளியெல்லாம் உண்மையாக இருந்தால் கூட வைத்து பத்து நாட்களாக ஏசி திரையரங்குகளிலும், பெய்த மழை காரணமாகவும் வெடிகுண்டெல்லாம் நமத்துப் போயிருக்கும். மிரட்டல் விடுத்தவனே படத்தைப் போட்டுத் தொலைங்கடா என்று வெறுத்துப்போயிருப்பான்.  இப்போதும் வெடிகுண்டு மிரட்டலுக்காக என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்லுமேயானால் நம் ஒவ்வொருவர் காதிலும் ஒன்றரை முழம் பூவைச் சுத்துகிறார்கள் என்று பொருள்.

திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும், தமிழக மக்களும் கட்டுகின்ற வரியை அரசுக்குச் செலுத்தாமல்  ஒரு சில மனிதர்கள் மிகுதியாகச் சம்பாதிக்கும் பொருட்டு கல்லாக்கட்ட அனுமதிக்க வேண்டுமா என்கிற சிந்தனையோடு...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சேது சமுத்திரத் திட்டத்தில் கருணாநிதியின் அந்தர் பல்டிகள்




சேது சமுத்திர நாயகன் வைகோ அவர்களால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கபட்டு மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் வந்தபோதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த திட்டம் சேது சமுத்திரத் திட்டம். 

அத்திட்டத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் இடற்பாடுகளை நீக்கி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்றப்படவேண்டுமென்பதே ஆரம்பத்திலிருந்தே மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் வைகோ அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துத் துறையைக் கையில் வைத்திருந்த தி.மு.க. அத்திட்டத்தை மக்கள் நலத்திட்டமாகக் கருதாமல் பணம் கொழிக்கிற, பொன்முட்டையிடுகிற வாத்தாகக் கருதி திட்டத்தைக் குறித்த காலத்தில் முறையான வழிகளில் மீனவர்களுக்கு இடையூறின்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பின்றி நிறைவேற்றிட முன்வரவில்லை. இழுத்துக் கடத்தியதோடு மட்டுமல்லாமல் சரியான திட்டமிடலுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கிற செயலிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தராமலும் அத்திட்டத்தின் ஒப்பந்தங்களில் ஊழல் செய்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தது.

இத்திட்டத்தில் கருணாநிதி கும்பல் செய்த கையாடல் ஒருபுறமிருக்க அவ்ர்களின் வாயாடல் இத்திட்டத்திற்கு பெரும் பின்னடவைத் தந்தது. ஆம் வரம்புமீறிப் பேசி எந்த இந்துத்துவ பாரதீய ஜனதாக்கட்சியைச் சார்ந்த பிரதமரான வாஜ்பாயைச் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வைகோ அறிவிக்கச் செய்தாரோ அதே இந்துத்துவ சக்திகளனைத்தையும் சேதுத் திட்டத்திற்கு எதிராகத் திருப்பினார் கருணாநிதி.

இராமர் பாலம் என்கிற காரணத்தைக் காட்டி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்தை முடக்கிப்போடுவதில் மும்மரமாக நின்றவர் கருணாநிதியின் மதவெறுப்புக் கருத்துக்களால் தூண்டிவிடப்பட்ட சுப்பிரமணியசாமி. 

இதே சுப்பிரமணிய சாமியிடம் 2ஜி அலைவரிசை ஊழல் வழக்கில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட கருணாநிதி கும்பல் இதுவரை வழக்குத் தொடர்ந்து சேதுத் திட்டத்தை முடக்கிப்போட்ட சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருப்பார்களா? தி.மு.க. என்கிற கட்சி எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற அளவுக்கு சுப்பிரமணியசாமி என்ன பெரிய ஆளா எனக் கேட்கலாம். சரி கருணாநிதிக்கு சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிடக்கூட துணிச்சலில்லாமல் போனது ஏன்? அறிக்கை வெளியிட துணிச்சலில்லையா? பரவாயில்லை எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போட்டு வைத்துள்ளார்களோ அதே நீதிமன்றத்தில் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நாங்கள் எனவே எங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி சுப்பிரமணியசாமியின் வாதங்களைத் தவிடுபொடியாக்கி வழக்கை வென்றிருக்க வேண்டாமா? 

கருணாநிதி என்கிற மோசடிப் பேர்வழி தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்று சொன்னால் நீதிமன்றம் சிரியாய்ச் சிரிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். தி.மு.க. என்கிற கட்சியின் சார்பிலே மனுச்செய்திருக்கலாமே? செய்யவில்லை. வழக்குத் தொடரப்பட்டபோதும் நீதிமன்றம் தடையாணை வழங்கியபோதும் கருணாநிதிதான் முதல்வராக இருந்தார். தமிழக அரசின் சார்பிலே ஒரு மனுதாரராகச் சேர்ந்து வாதிட்டிருக்கலாமே? செய்தாரா என்று கேட்டால் இல்லை.

கருணாநிதியின் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதிகாட்டாமல் ஆய்வுசெய்ய நீதிபதி பச்சோரி தலைமையில் ஆய்வுக் கமிட்டி ஒன்றை அமைத்து அந்த ஆய்வுக் கமிட்டியும் திட்டத்திற்கு எதிரான ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வைத்தது.

இப்போது கூடங்குளத்திற்கு எதிராக மத்திய அரசு ஒரு கமிட்டியமைத்து திட்டத்திற்கெதிராக அறிக்கை சமர்ப்பிக்க அனுமதித்திருக்குமா? மத்திய அரசு நினைப்பதை காகிதத்தில் அச்சடித்து வழங்குவதுதானே கமிட்டிகளின் வேலை. ஆக தான் அங்கம்வகித்த காங்கிரஸ் அரசு திட்டத்தில் குளறுபடி  செய்ததைக் கூட்டணியிலே இருந்தபோதும் தடுக்கத் தவறியவர்தான் இந்தக் கருணாநிதி.

இதிலே மிகவும் வேதனைக்குரிய விடயமென்னவென்றால் மக்கள் நலத்திட்டமென்ற போர்வையில் கொள்ளையடிப்பதில் காங்கிரசும், தி.மு.க.வும் குடுமிபிடிச்சண்டை போட்டுக்கொண்டதுதான். தி.மு.க. தன்கையில் வளம் கொழிக்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து இயன்ற மட்டும் கொள்ளையடித்ததை வேடிக்கை பார்த்து அல்லது பங்குபோட்டுக்கொண்ட காங்கிரஸ் சேதுத் திட்டத்தைக் குறிவைத்து கப்பல் போக்குவரத்துத் துறையை தி.மு.க.விடமிருந்து பறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வாசனிடம் ஒப்படைத்தது. தி.மு.க.வும் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக கமுக்கமாக இருந்து கொண்டது. ஒரு புரட்சியில்லை. போராட்டமில்லை. நல்லவன் யோக்கியனென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? சேதுத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுகிறவகையில் கப்பல் போக்குவரத்துத் துறையை மீண்டும் தரவேண்டுமென்று கேட்டிருக்க வேண்டுமல்லவா? கேட்கவில்லை. கேட்டால் 2ஜி ஊழல் வழக்கில் ஆப்படிப்பான் காங்கிரஸ்காரன். 

இந்நிலையில் நீதிமன்றமே தமிழக அரசிடம் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கவேண்டுமெனக் கேட்டு சம்மனனுப்பியிருக்கிறது. தமிழக அரசும் அத்திட்டத்தின் சாதக பாதகங்களை, மீனவர்களின் பிரச்சினைகளை, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைச் சொல்லி நீதிமன்றத்தில் திட்டத்தைக் கைவிடவேண்டுமென பதில் மனுத்தாக்கல் செய்துவிட்டது. தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்கக் கூடாதென்று கூறியதே நீதி மன்றமோ மத்திய அரசோ கேட்டதா? தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் இயக்கக் கூடாதென்று நீதிமன்றத்திலே முறையிட்டதே.. நீதிமன்றமோ, மத்திய அரசோ செவி மடுத்ததா? வலுக்கட்டாயமாகத் தமிழக மக்கள் தலையில் திணிக்கிறனவே... அப்போதெல்லாம் கருணாநிதி கேளாக்காதினராகவும், கண்ணிருந்தும் குருடராகவும் மூச்சுவிடாமல் கிடந்தாரே கருணாநிதி.

ஈழப்பிரச்சினையைக் கையிலெடுத்தால் பூமராங்காக மாறித் தன்னையே தாக்குகிறது. ஊழல், மணற்கொள்ளை, மின்வெட்டு என எந்தப் பிரச்சினையிலும் தன்னை யோக்கியன் என நிரூபித்துக் கொள்ள வழியின்றி தமிழக அரசியலில் தனிமைப்பட்டுப்போயிருந்த,  அரசியல் செய்ய வழியில்லாமல் கிடந்த நாடாளுமன்றத் தேர்தல் வருவதைக் கணக்கில் கொண்டு கருணாநிதி சேது சமுத்திரத் திட்டத்தைக் கையிலெடுக்கிறார். போராட்டம் அறிவிக்கிறார்.

சரி. நீதான் போக்கத்தவன். பொழப்புக்கெட்டவன். போகிறபோக்கில் வைகோவை ஏன் வம்புக்கிழுக்கிறாய்.

தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப்பிரச்சினையிலும் முன்னணியில் நின்று போராடுபவர் வைகோ. சேது சமுத்திரத்திட்டத்திலும் அவர் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார். மீனவர்கள் மற்றும் சுற்றுச்ச்சுழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்குப் பதில் யார் தருவது? சேது சமுத்திரத்திட்டத்தால் யாருடைய தலைக்குமேலாவது கத்தி தொங்குகிறதா? தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவருக்கு முன்னுரிமை எதற்குத் தரவேண்டுமென்பது தெரியாதா?

சேதுசமுத்திரத்திட்டம் தேவையானதுதான். நிறைவேற்றப்படவேண்டியதுதான். அதற்காகத் தமிழக மீனவர்களின் சோற்றில் மண்ணைப்போட்டுவிட்டல்ல. அவர்களின் வாழ்வுரிமை பாதிக்காத வகையிலேதான் நிறைவேற்றப்படவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும். மீனவர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படாத வகையிலே நிறைவேற்றப்பட அனைவரும் துணைநிற்பார்கள். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகி டெல்லி சென்றால் பித்தலாட்டக்காரன் கருணாநிதியிடம் யாரும் போய் நிற்கப்போவதில்லை. சேது சமுத்திரத் திட்டம் வைகோ முயற்சியால் செவ்வனே நிறைவேற்றப்படும். அதுவரை கருணாநிதி மற்றும் டெசோ கும்பலின் தேர்தல் நாடகப் போராட்டங்களைக் கண்ணுற்று மகிழ்ந்திருங்கள்.