திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சேது சமுத்திரத் திட்டத்தில் கருணாநிதியின் அந்தர் பல்டிகள்




சேது சமுத்திர நாயகன் வைகோ அவர்களால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கபட்டு மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் வந்தபோதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த திட்டம் சேது சமுத்திரத் திட்டம். 

அத்திட்டத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் இடற்பாடுகளை நீக்கி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்றப்படவேண்டுமென்பதே ஆரம்பத்திலிருந்தே மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் வைகோ அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துத் துறையைக் கையில் வைத்திருந்த தி.மு.க. அத்திட்டத்தை மக்கள் நலத்திட்டமாகக் கருதாமல் பணம் கொழிக்கிற, பொன்முட்டையிடுகிற வாத்தாகக் கருதி திட்டத்தைக் குறித்த காலத்தில் முறையான வழிகளில் மீனவர்களுக்கு இடையூறின்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பின்றி நிறைவேற்றிட முன்வரவில்லை. இழுத்துக் கடத்தியதோடு மட்டுமல்லாமல் சரியான திட்டமிடலுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கிற செயலிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தராமலும் அத்திட்டத்தின் ஒப்பந்தங்களில் ஊழல் செய்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தது.

இத்திட்டத்தில் கருணாநிதி கும்பல் செய்த கையாடல் ஒருபுறமிருக்க அவ்ர்களின் வாயாடல் இத்திட்டத்திற்கு பெரும் பின்னடவைத் தந்தது. ஆம் வரம்புமீறிப் பேசி எந்த இந்துத்துவ பாரதீய ஜனதாக்கட்சியைச் சார்ந்த பிரதமரான வாஜ்பாயைச் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வைகோ அறிவிக்கச் செய்தாரோ அதே இந்துத்துவ சக்திகளனைத்தையும் சேதுத் திட்டத்திற்கு எதிராகத் திருப்பினார் கருணாநிதி.

இராமர் பாலம் என்கிற காரணத்தைக் காட்டி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்தை முடக்கிப்போடுவதில் மும்மரமாக நின்றவர் கருணாநிதியின் மதவெறுப்புக் கருத்துக்களால் தூண்டிவிடப்பட்ட சுப்பிரமணியசாமி. 

இதே சுப்பிரமணிய சாமியிடம் 2ஜி அலைவரிசை ஊழல் வழக்கில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட கருணாநிதி கும்பல் இதுவரை வழக்குத் தொடர்ந்து சேதுத் திட்டத்தை முடக்கிப்போட்ட சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருப்பார்களா? தி.மு.க. என்கிற கட்சி எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற அளவுக்கு சுப்பிரமணியசாமி என்ன பெரிய ஆளா எனக் கேட்கலாம். சரி கருணாநிதிக்கு சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிடக்கூட துணிச்சலில்லாமல் போனது ஏன்? அறிக்கை வெளியிட துணிச்சலில்லையா? பரவாயில்லை எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போட்டு வைத்துள்ளார்களோ அதே நீதிமன்றத்தில் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நாங்கள் எனவே எங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி சுப்பிரமணியசாமியின் வாதங்களைத் தவிடுபொடியாக்கி வழக்கை வென்றிருக்க வேண்டாமா? 

கருணாநிதி என்கிற மோசடிப் பேர்வழி தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்று சொன்னால் நீதிமன்றம் சிரியாய்ச் சிரிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். தி.மு.க. என்கிற கட்சியின் சார்பிலே மனுச்செய்திருக்கலாமே? செய்யவில்லை. வழக்குத் தொடரப்பட்டபோதும் நீதிமன்றம் தடையாணை வழங்கியபோதும் கருணாநிதிதான் முதல்வராக இருந்தார். தமிழக அரசின் சார்பிலே ஒரு மனுதாரராகச் சேர்ந்து வாதிட்டிருக்கலாமே? செய்தாரா என்று கேட்டால் இல்லை.

கருணாநிதியின் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதிகாட்டாமல் ஆய்வுசெய்ய நீதிபதி பச்சோரி தலைமையில் ஆய்வுக் கமிட்டி ஒன்றை அமைத்து அந்த ஆய்வுக் கமிட்டியும் திட்டத்திற்கு எதிரான ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வைத்தது.

இப்போது கூடங்குளத்திற்கு எதிராக மத்திய அரசு ஒரு கமிட்டியமைத்து திட்டத்திற்கெதிராக அறிக்கை சமர்ப்பிக்க அனுமதித்திருக்குமா? மத்திய அரசு நினைப்பதை காகிதத்தில் அச்சடித்து வழங்குவதுதானே கமிட்டிகளின் வேலை. ஆக தான் அங்கம்வகித்த காங்கிரஸ் அரசு திட்டத்தில் குளறுபடி  செய்ததைக் கூட்டணியிலே இருந்தபோதும் தடுக்கத் தவறியவர்தான் இந்தக் கருணாநிதி.

இதிலே மிகவும் வேதனைக்குரிய விடயமென்னவென்றால் மக்கள் நலத்திட்டமென்ற போர்வையில் கொள்ளையடிப்பதில் காங்கிரசும், தி.மு.க.வும் குடுமிபிடிச்சண்டை போட்டுக்கொண்டதுதான். தி.மு.க. தன்கையில் வளம் கொழிக்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து இயன்ற மட்டும் கொள்ளையடித்ததை வேடிக்கை பார்த்து அல்லது பங்குபோட்டுக்கொண்ட காங்கிரஸ் சேதுத் திட்டத்தைக் குறிவைத்து கப்பல் போக்குவரத்துத் துறையை தி.மு.க.விடமிருந்து பறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வாசனிடம் ஒப்படைத்தது. தி.மு.க.வும் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக கமுக்கமாக இருந்து கொண்டது. ஒரு புரட்சியில்லை. போராட்டமில்லை. நல்லவன் யோக்கியனென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? சேதுத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுகிறவகையில் கப்பல் போக்குவரத்துத் துறையை மீண்டும் தரவேண்டுமென்று கேட்டிருக்க வேண்டுமல்லவா? கேட்கவில்லை. கேட்டால் 2ஜி ஊழல் வழக்கில் ஆப்படிப்பான் காங்கிரஸ்காரன். 

இந்நிலையில் நீதிமன்றமே தமிழக அரசிடம் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கவேண்டுமெனக் கேட்டு சம்மனனுப்பியிருக்கிறது. தமிழக அரசும் அத்திட்டத்தின் சாதக பாதகங்களை, மீனவர்களின் பிரச்சினைகளை, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைச் சொல்லி நீதிமன்றத்தில் திட்டத்தைக் கைவிடவேண்டுமென பதில் மனுத்தாக்கல் செய்துவிட்டது. தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்கக் கூடாதென்று கூறியதே நீதி மன்றமோ மத்திய அரசோ கேட்டதா? தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் இயக்கக் கூடாதென்று நீதிமன்றத்திலே முறையிட்டதே.. நீதிமன்றமோ, மத்திய அரசோ செவி மடுத்ததா? வலுக்கட்டாயமாகத் தமிழக மக்கள் தலையில் திணிக்கிறனவே... அப்போதெல்லாம் கருணாநிதி கேளாக்காதினராகவும், கண்ணிருந்தும் குருடராகவும் மூச்சுவிடாமல் கிடந்தாரே கருணாநிதி.

ஈழப்பிரச்சினையைக் கையிலெடுத்தால் பூமராங்காக மாறித் தன்னையே தாக்குகிறது. ஊழல், மணற்கொள்ளை, மின்வெட்டு என எந்தப் பிரச்சினையிலும் தன்னை யோக்கியன் என நிரூபித்துக் கொள்ள வழியின்றி தமிழக அரசியலில் தனிமைப்பட்டுப்போயிருந்த,  அரசியல் செய்ய வழியில்லாமல் கிடந்த நாடாளுமன்றத் தேர்தல் வருவதைக் கணக்கில் கொண்டு கருணாநிதி சேது சமுத்திரத் திட்டத்தைக் கையிலெடுக்கிறார். போராட்டம் அறிவிக்கிறார்.

சரி. நீதான் போக்கத்தவன். பொழப்புக்கெட்டவன். போகிறபோக்கில் வைகோவை ஏன் வம்புக்கிழுக்கிறாய்.

தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப்பிரச்சினையிலும் முன்னணியில் நின்று போராடுபவர் வைகோ. சேது சமுத்திரத்திட்டத்திலும் அவர் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார். மீனவர்கள் மற்றும் சுற்றுச்ச்சுழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்குப் பதில் யார் தருவது? சேது சமுத்திரத்திட்டத்தால் யாருடைய தலைக்குமேலாவது கத்தி தொங்குகிறதா? தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவருக்கு முன்னுரிமை எதற்குத் தரவேண்டுமென்பது தெரியாதா?

சேதுசமுத்திரத்திட்டம் தேவையானதுதான். நிறைவேற்றப்படவேண்டியதுதான். அதற்காகத் தமிழக மீனவர்களின் சோற்றில் மண்ணைப்போட்டுவிட்டல்ல. அவர்களின் வாழ்வுரிமை பாதிக்காத வகையிலேதான் நிறைவேற்றப்படவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும். மீனவர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படாத வகையிலே நிறைவேற்றப்பட அனைவரும் துணைநிற்பார்கள். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகி டெல்லி சென்றால் பித்தலாட்டக்காரன் கருணாநிதியிடம் யாரும் போய் நிற்கப்போவதில்லை. சேது சமுத்திரத் திட்டம் வைகோ முயற்சியால் செவ்வனே நிறைவேற்றப்படும். அதுவரை கருணாநிதி மற்றும் டெசோ கும்பலின் தேர்தல் நாடகப் போராட்டங்களைக் கண்ணுற்று மகிழ்ந்திருங்கள்.

புதன், 31 ஜூலை, 2013

திராவிடம் தேவையா? தமிழ் தேசியத்திற்குத் தாவையா...

அவ்வப்போது தலைகாட்டும் வெற்றுக் கூச்சல்களில் ஒன்றுதான் தலைப்பிலே குறிப்பிட்ட வாசகம்.

தமிழகத்தில் மக்கள் தி.மு.க. அ.தி.மு.க. என்கிற இரண்டு கட்சிகளின் ஆட்சியைப் பல தசாப்தங்களாகப் பார்த்து வெறுப்பின் உச்சகட்டத்தில் இருக்கின்றனர். மக்கள் மனதில் மாற்று அரசியலுக்கான தேடலும் ஏக்கமும் முன்னெப்போதுமில்லாத வகையில்   அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொளுத்தி விடப்பட்ட வெடியின் திரிபோல மறுமுனையிலிருக்கும் மாற்று அரசியல் புரட்சி நோக்கி அது அத்துணை மனங்களையும் ஒன்றுசேர்த்து இழுத்துச் செல்கிறது. அவ்வாறு கொளுத்தி விடப்பட்ட திரிக்கும் மாற்று அரசியல் புரட்சிக்குமான இடைவெளியை அதிகரிப்பதிலும், அதிகரிக்கப்பட்ட அவ்விடைவெளியில் கிடைக்கும் பதவிகளை பங்குபோடுவதிலும் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க. தலைமையும் ஒத்திசைந்து செயல்பட்டு வருகின்றன.

இடையில் புகுந்து அரசியல் இலாபம் தேடும் ஒரு கும்பல் செய்யும் முழக்கம்தான் தலைப்பிலே சொன்னது. அதிலே எந்தளவுக்கு உண்மையுள்ளது? பார்ப்போம்.

ஆப்பிளை ஆப்பிளுடன் ஒப்பிடவேண்டுமென்று சொல்வார்கள். அதுபோல அடிப்படையில் திராவிட கருத்தியலை தமிழ்த்தேசியத்துடன் ஒப்பிடுவதே தவறானது.

திராவிடம் என்பது மொழிசார்ந்தோ நிலம் சார்ந்தோ உருவானதல்ல. திராவிடம் என்பது ஆரிய ஒடுக்குமுறைக்கு எதிரான, சாதி ஒடுக்குமுறை பெண்ணடிமைக்கு எதிரான கருத்தியல் சித்தாந்தம். குறிப்பாக பிறப்பை வைத்து மனிதனை இழிவு படுத்தும் சனாதன பார்ப்பன கொள்கைகளிடமிருந்து மக்களைக் காக்க உருவான கருத்தியல். யாரெல்லாம் பார்ப்பனரில்லையோ, யாரெல்லாம் ஆரியரில்லையோ அவரெல்லாம் திராவிடர். திராவிடம் என்பது பிறப்பினடிப்படையில் அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொதுவானது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவில் பிறப்பினடிப்படையில் ஒடுக்கப்படும் கறுப்பின பழங்குடியினர் கூட திராவிடர்கள்தான். அங்கேயும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கங்கள் வேறுபெயர்களில் இயங்கி வருகின்றன.

திராவிடம் என்கிற கருத்தியலுக்கு சமமான ஒரு கருத்தியலென்றால்  பொதுவுடமைச் சித்தாந்தங்களை வேண்டுமானால் ஒப்பிடலாமே தவிர தமிழ்த் தேசியத்தை ஒப்பிடுவது தவறானது. உள்நோக்கம் கொண்டது. திராவிடக் கருத்தியல்/சித்தாந்தம் தமிழ் தேசியத்திற்கு எதிரானதல்ல. பொதுவுடமைச் சித்தாந்தம் வர்க்க வேறுபாடுகளைக் களையும் பொருட்டு, முதலாளித்துவத்திற்கெதிராகத் துவங்கப்பட்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. பொதுவுடைமைச் சித்தாந்தம் தமிழ்த்தேசியத்திற்கெதிரானதா? அவ்வாறு சொன்னால் அது எந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாகப் படுமோ அதே அளவு பைத்தியக்காரத்தனம்தான் திராவிட கருத்தியல் தமிழ்த்தேசியத்திற்கெதிரானது என்று சொல்வதும். திராவிட இயக்கம் தமிழகத்திற்கு வெளியே இல்லையே தமிழகத்திலே மட்டும்தானே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இயக்கங்கள் தமிழகத்திற்கு வெளியே வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டுதான் வருகிறது. இன்னும் வரவில்லையென்றால் இனிமேல் நிச்சயம் வரும். பெயர் வேறாக இருக்கலாம். மொழி வேறாக இருக்கலாம். பிறப்பினடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களுக்கான விடுதலை இயக்கங்களனைத்துமே திராவிட இயக்கங்கள்தான். ஆகவே திராவிட இயக்கமோ, பொதுவுடமை இயக்கமோ ஒருபோதும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கு எதிரானவையல்ல. 

மாறாக தமிழ்த்தேசியத்திற்கெதிரானது எது என்றால் அது இந்திய தேசியம். தமிழ்த் தேசியத்தை இந்திய தேசியத்துடன்தான் ஒப்பிட வேண்டுமே தவிர திராவிட இயக்கங்களுடன் ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்? 

இத்தகைய ஒரு முட்டாள்த்தனத்தைத்தான் சில நபர்கள் திட்டமிட்டுப் பொய்ப்பரப்புரைகள் மூலமாக பேசியும் எழுதியும் சில இளைஞர்களை தவறாக வழிகாட்டி வருகின்றனர். அவர்களுக்கு தவறான உள்நோக்கமிருக்கிறது.  இந்திய தேசியத்தை எதிர்த்துப் பேசி ஆள்பிடிக்க அவர்களால் முடியாது. தமிழகத்தில் வேர்விட்டு விழுதுகள் விட்டு வளர்ந்திருக்கும் திராவிட இயக்கத்தில் சில கிளைக் கட்சிகளின் மீது (தி.மு.க., அ.தி.மு.க.) அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிப் போய்விட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தகைய கட்சிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை மூலதனமாக வைத்து அரசியல் இலாபமடையும் நோக்கில் ஒட்டுமொத்த திராவிட இயக்கங்களையும் அவதூறு பேசி ஆள்பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்ற கட்சிகளை நேர்மையான முறையில் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தையோ அல்லது பொதுவுடமை இயக்கத்தையோ தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதாகச் சித்தரித்துப் பொய்ப்பரப்புரை செய்வது அரைவேக்காடுகள் செய்யும் வேலை.

தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்ணடிமை, பார்ப்பன சனாதன, மனுதர்ம ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும். திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகிச்சென்ற கட்சிகள் மக்களிடமிருந்தும் விலக்கி வைக்கப்படும். திராவிட இயக்கம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனப் பொய்ப்பரப்புரை செய்யும் கும்பலின் முயற்சிகள் அம்பலப்ப்ட்டுப்போகும். அந்த அரைவேக்காடுகளின் செயல் ஒருபோதும் வெற்றிபெறாது.

சனி, 29 ஜூன், 2013

தி.மு.க.வினர் கிளப்பிவிடும் மோடி பீதி; பகடைக்காய்களாக மாறத்துடிக்கும் இசுலாமியர்;



கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.



பா.ஜ.க.வின் இந்துத்துவக் கொள்கைகளுக்கு மோடி மட்டுமே பொறுப்பானவரல்ல. மோடியில்லாமல் வேறொரு கேடி வந்தாலும் பா.ஜ.க. இந்துத்துவக் கட்சிதான்.

ஆனால் என்னவோ மோடி தேர்தல்பணிக்குழுத் தலைவரான பிறகுதான் பா.ஜ.க. இந்துத்துவக் கொள்கையையே கண்டுபிடித்ததுபோல தி.மு.க.வும் அது சார்ந்த ஊடகங்களும், அந்தக்கட்சியின் சார்பாக இணைய தளங்களில் செயல்பட்டுவரும் சிலரும் புரளி கிளப்பி வருகின்றனர். அதை நம்பும் சில இசுலாமிய நண்பர்களும் பகடைக்காய்களாக மாறி தி.மு.க.விற்காக பரிந்து பேசவும் எழுதவும் துவங்கியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு, காவிரி, ஸ்டெர்லைட், கூடங்குளம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயுத்திட்டம், கிரானைட் கொள்ளை, 2ஜி இமாலய ஊழல், மணற்கொள்ளை, வேலை நியமனத்தில் ஊழல் கொள்ளை எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்திலே ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யத் துணைபோனது என தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் செய்த துரோகத்தால் தனிமைப்பட்டுப் போயிருக்கிறது தி.மு.க. தற்போது நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அடித்த அந்தர்பல்டிகள் மூலம் நாட்டு மக்களிடம் அசிங்கப்பட்டு நிற்கிறது தி.மு.க.

இவ்வாறு அசிங்கப்பட்டு நிற்கிற தி.மு.க.விற்கு முட்டுக்கொடுக்க வாய்ச்சவடாலில் பேர்போன தி.மு.க. உடன்பிறப்புகளே திக்கித்திணறும் போது அவர்களுக்கு கைகொடுப்பது போல வந்ததுதான் மோடி குறித்த அறிவிப்பு. எடுப்பார் கைப்பிள்ளைகளைப் போல மாறிப்போன இசுலாமிய பதிவர்களும், முகநூல் பயனர்களும் மாறிப்போனதுதான் கொடுமை. இன்றைய நிலையில் தி.மு.க. மீது அத்தனை விமர்சனக்கணைகளையும் தாங்கிக் கொண்டு அசிங்கப்படுவது மோடி பீதியைக் காட்டி கருணாநிதி கும்பலால் பகடைக்காயாக்கப் பட்ட ஒரு சில இசுலாமிய நண்பர்கள்தான்.

குஜராத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மதமோதல்களை ஊக்குவித்து பல்லாயி்ரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதும், இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதும் மறுக்க முடியாத உண்மை. இசுலாமியர்கள் ஒருபோதும் மோடியையோ, பா,ஜ,க.வையோ ஆதரிக்கமாட்டார்கள் என்பதோடு மதச்சார்பற்ற இந்தியர்களும், தமிழர்களும் இசுலாமியர்களோடு சேர்ந்து பா.ஜ.க.வைப் புறக்கணிப்பர் என்பதும் உண்மை.

ஆனால் அதற்காக பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரசு, தி.மு.க. கூட்டணியை ஆதரிப்போர் மனசாட்சியற்றவர்கள். காலிஸ்தான் கேட்டுப் போராடிய குழுவைச் சேர்ந்த் ஒரு சீக்கிய இளைஞரால் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து டெல்லியிலும் வட இந்தியாவின் மற்ற பாகங்களிலும் வசித்த ஒவ்வொரு சீக்கியனும் தேடிப் பிடித்து துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டான். குஜராத்தில் நடைபெற்றதை விட பன்மடங்கு வன்முறை சீக்கியர்கள் மீது ஏவிவிடப்பட்டது. காங்கிரசால் திட்டமிடப்பட்ட கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டத்தோடு அவர்களின் உடமைகளனைத்தும் சூறையாடப்பட்டு நிர்க்கதியாக்கப் பட்டனர்.

இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலை குறித்து நம் தமிழ் மக்களுக்கு இங்கே மீண்டும் விவரிக்கப் போவதில்லை. ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்துத் துணை போனது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி.

இவ்வாறான இனப்படுகொலைகளை அரங்கேற்றிய காங்கிரசையா பா.ஜ.க.விற்கு மாற்றாகப் பரிந்துரைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையைச் சொன்னால் வேறு நாட்டுத் தமிழர்கள் இனப்படுகொலையைவிட குஜராத்தி முஸ்லீம்களின் இனப்படுகொலையைக் கவனியுங்கள் எனக் கூறும் கனவான்களே.. சீக்கியர்களின் இனப்படுகொலையென்ன இங்கிலாந்திலா நடந்தது. அந்த இனப்படுகொலைகளை நடத்தியது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தானே..

இந்திய குஜராத்தி முஸ்லிம்களின் உயிர் மட்டுமே உயிர், இந்திய பஞ்சாப் சீக்கியர்களின் உயிர் உயிரல்ல என்கிறீர்களா? தமிழீழத்திலே நம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர் உயிரல்ல என்கிறீர்களா?

சீக்கியர்களை இனப்படுகொலை செய்த காங்கிரசு சீக்கியரான மன்மோகன்சிங்கை பிரதமராக்கிவிட்டதே.. சரியாய்ப்போச்சு என்கிறீர்களா? அதே கணக்குப்போட்டுதான் அப்துல் கலாம் என்கிற இசுலாமியரை குடியரசுத் தலைவராக்கியது பா.ஜ.க. உங்கள் கணக்கு சரியாய்ப் போய்விடவில்லையா?

உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..

எல்லாவற்றிகும் மேலாக தமிழகத்தில் மோடிக்கோ, பா.ஜ.க.வுக்கோ சிறிதும் செல்வாக்கில்லை. இவ்வாறு இல்லாத பேயை தனது அரசியல் இலாபத்திற்காக இசுலாமியர்கள் முன்காட்டி பீதியை ஏற்படுத்திவிட்டு தன் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவிகள் பெற்றுத் தருவதில் மும்மரமாகி விட்டார் கருணாநிதி. பதவி சுகத்திற்காக எந்த சமரசத்திற்கும் ஆயத்தமானவர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த வரலாறு. இப்போது ஒருசில இசுலாமியர்களால் தாங்கிப்பிடிக்கப்படுகிற கருணாநிதி கடந்த காலங்களில் பதவிக்காக பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்காதவரா? தற்போது நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்களேயானால் தன் மகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அவர்கள் காலிலே விழுந்திருக்க மாட்டாரா? வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.கூட்டணியில் சேரமாட்டார் என உத்தரவாதமேதுமுள்ளதா?

தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி என்கிற காரணி இந்துத்துவ சக்திகளுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. ஆனால் சீக்கியர்களையும் ஈழத் தமிழர்களையும் இனப்படுகொலை செய்த காங்கிரசும் அதற்குத் துணைபோன தி.மு.க.வும் இன்னமும் உயிர்ப்போடிருக்கின்றன. இசுலாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும், மனிதநேயர்களும் எதிர்க்க வேண்டியது இல்லாத எதிரியான மோடியல்ல.. நம் கண்முன்னே உலவிவரும் மோடிக்கு சற்றும் சளைக்காத காங்கிரசு, தி.மு.க, என்கிற எதிரிகள்தான்.

மோடி பீதியைக் காட்டி காங்கிரசு, தி.மு.க. என்கிற புதைகுழியில் மீண்டும் தமிழர்களையும் தமிழ் மக்களையும் தள்ளிவிட நடக்கும் முயற்சியை தடுத்துக் கொள்வதும் தமிழர்களின், தமிழகத்தின் நலனைப் பாதுகாத்துக் கொள்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை.

திங்கள், 22 ஏப்ரல், 2013

விஜயகாந்தைச் சந்தித்தார் கருணாநிதி: குற்றம் நடந்தது என்ன? எபிசோடு I

தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிக்கையாளரும், சமூக சேவகருமான டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் உடல் நலக் குறைவால் மறைந்தார். அனைத்துக் கட்சித்தலைவர்களும், பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துகிற சாக்கில் நடந்த அரசியல் கூத்து நடத்திய கருணாநிதி விசயகாந்து வரும் வழியில் காத்திருந்து வணக்கம் செலுத்தி அதனைப் புகைப்படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் “விசயகாந்த் தன்னைச் சந்தித்து நலம் விசாரித்ததாக” செய்தி வெளியிட்டு புளகாங்கிதமடைந்தார்.

சந்திப்பு நடக்கும் முன்னும் பின்னும் நடந்தது என்ன என்பது நமது கற்பனையில்;

காட்சி 1:

இடம்: கருணாநிதி இல்லம். அனைவரையும் சந்திக்கும் கூடம்/வரவேற்பறை.
பங்கேற்பாளர்கள்: கருணாநிதி, துணைவி, உதவியாளர், சில கட்சிப் பிரமுகர்கள், கருணாநிதியை பராமரிப்பவர்.

(சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த செய்தி மாலையில் கருணாநிதிக்குத் தெரிவிக்கப் படுகிறது. அப்படியா எத்தனை மணிக்கு என்ன விபரம் எனக் கேட்டவரிடம், இன்று மாலையில் மருத்துவமனையில் மறைந்ததாகவும் மறுநாள் நண்பகலுக்கு மேல் பெசண்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.  சரியெனக் கேட்டுக்கொண்ட கருணாநிதி சில கணக்குகள் போட்டுக்கொண்ட பிறகு நடந்த உரையாடல் பின்வருமாறு)



கருணாநிதி (உதவியாளரிடம்): என்னய்யா.. அவரும் இழவு வீட்டுக்கு வருவாரில்ல.. ஏற்கனவே ஒருமுறை அவர் திருச்சிக்கு வரும்போது சுத்திலும் அணையகட்டி பார்த்து வணக்கம் வச்சுரலாம்னு முயற்சி பண்ணப்போ எப்படியோ மீடியாவுக்கு விசயம் கசிஞ்சு அவர் உசாராகி பார்க்க முடியாம போயிடுச்சு. இந்த முறை  அவர் வரதுக்கு முன்னாடி போயி அங்கே நிக்கணும்யா.. இதைவிட்டா பார்க்கிறதுக்கு கோயம்பேடு போகணும்யா..அங்கே போயி காத்துக்கிடந்து பார்க்கமுடியலைனா எதிர்க்கட்சிக்காரன் பூராம் கழுவி ஊத்துவான்.. இங்க ஒருவேளை பார்க்கமுடியலைனா கூட அசிங்கப்பட்டது யாருக்கும் தெரியாது.. கமுக்கமா இருந்துக்கலாம்..எப்ப வர்றாருனு கேட்டுச் சொல்லுயா...
உதவியாளர்(கருணாநிதியிடம்):கேட்டுட்டேன் தலைவரே.. அவரு காலைலதான் வர்றாராம்.

கருணாநிதி(உதவியாளரிடம்): காலைலயா? அதுவரை யாருமே போகலைனா தப்பாயிடுமேய்யா..தம்பி ஸ்டாலினை நைட்ல போயி அட்டெனன்ஸ் போடச் சொல்லு..... காலைல அவர் வர்ற நேரமா பார்த்து தற்செயலா வந்த மாதிரி வாசல்ல நின்னுக்கிறேன்.. எப்படியும் ஒரு வணக்கம் கூடவா வைக்காம போயிடுவாரு... எப்படியாவது கூட்டணில இழுத்து போட்டுறனும்யா... தமிழ்நாட்டுலயே நம்ம கூட்டணி வைக்காத ஒரே கட்சி தே.மு.தி.க. மட்டும்தான்.. பழைய ஆளுங்க எல்லாருக்கும் நம்ம வண்டவாளம் தெரிஞ்சு போச்சு.. அவர விட்டா நமக்கு வேற வழியே இல்லே.. யாரும் இல்லைனா கால்ல கூட விழுந்திறலாம்.. இந்த மீடியாக்காரப் பசங்க போட்டோ புடிச்சுப் போட்டு அசிங்கப் படுத்திடுவானுங்களேனு பார்க்கிறேன்.

(மறுநாள் காலை:எழவு வீட்டில் விசயகாந்தைத் தற்செயலாகச் சந்தித்தார் கருணாநிதி. வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டனர்)





(கருணாநிதி அந்தப்படத்தைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விசயகாந்த் சந்த்தித்து நலம் விசாரித்ததாக நிலைத்தகவல் வெளியிட்டதோடு அனைத்து ஊடகங்களுக்கும் அந்தப் படத்தைத் தனக்குத் தானே என்கிற முறையில் வெளியிட்டு மகிழ்கிறார்)

காட்சி 2:

இடம்: விசயகாந்த் இல்லம்.
பங்கேற்பாளர்கள்: விசயகாந்து, சுதீஷ், பிரேமலதா..

விசயகாந்து: மாப்ழ சுதீழு... எங்க போனாலும் இந்தாளு வந்து நின்னு வனக்கம் வைக்குறானே. இப்படிதான் திருச்சிக்கு நம்ம போறதை தெரிஞ்சுகிட்டு அங்கே வந்து சுத்தி வளைக்கப் பாத்தானுங்க. இவனுங்க கிட்டேருருந்து எஸ்கேப்பாவுறதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு... நம்ம போற இடத்தையெல்லாம் எவனோ அந்தாளுக்குப் போட்டுக்குடுத்துர்றாய்ங்க மாப்ழ.. நம்ம கூட்டத்துலயே எதோ ஒரு கருப்பாடு இருக்கு.. சீக்கிரம் கண்டுபிடிக்கணும் இல்லேனா.. சிக்கலாயிப் போவும்டியேய்.

சுதீஷ்: மாமா.. நாந்தான் மாமா சொன்னேன். கட்சித் தலைவர்கள் எல்லாரும் ஒரு இடத்துக்கு போறப்போ முட்டி மோதிக்காம இருக்க வெவ்வேற நேரம் ஃபிக்ஸ் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் இடைஞ்சலில்லாம போயிட்டு வந்துடுவாங்கனு பன்ரொட்டியார் சொன்னாரு.. நானும் சரி அதுக்குதான் கருணாநிதியோட ஆளுங்க யதார்த்தமா கேக்குறாய்ங்க போலனு பதார்த்தமா நீங்க வர்ற நேரத்தை சொல்லிட்டேன். என்னைப்போயி கருப்பாடு.. சிவப்பாடுனு சொல்லிட்டீங்களே மாமா... :’( அக்கா மாமாவைப்பாரு என்னைத் திட்டுறாரு..

பிரேமலதா: ஏங்க என் தம்பியைப்போயி திட்டுறீங்க...

விசயகாந்து:(பிரேமலதாவைப் பார்த்து) மாப்ழதான் சொன்னாருனு தெரிஞ்சா திட்டுவனா பிரேமா.. நான் எவனோ கட்சிக்காரப்பய போட்டுக்குடுக்கிறான்னுல திட்டுனேன் 

(சுதீஷ் பக்கமாகத் திரும்பி) அட.. மக்குப் பய மாப்புழ.. அவய்ங்க அப்டிதான் கூப்பிடுவாய்ங்க.. இப்ப பார்த்தேல்ல.. எழவு வீட்டில குறுக்க வழிய மறிச்சு நிக்குறாரேனு ஒரு வணக்கம் வச்சேன். அதைப் போட்டோ புடிச்சு சின்னப்புள்ளத்தனமா அதென்னது ஃபேசுபுக்கு அதுல போட்டு விசயகாந்து என்னைச் சந்தித்து நலம் விசாரித்தபோதுனு விளம்பரம் பண்ணிட்டுருக்காரு.. அந்தாள இப்பவே கூட்டணிக்குள்ளே விட்டா கூடாரத்துக்குள்ள ஒட்டகம் புகுந்த கதைதான் மாப்புழ.. தமில்நாட்ல நம்மதான் எதிர்க்கட்சி. நம்மகிட்டே 29 எம்மெல்லே இருக்காய்ங்க.. அவய்ங்க 23 தான். நாமதான் பெரிய கச்சி. இப்பவே போயி தலைய குடுத்தா கிட்னிய எடுத்துறுவாய்ங்க மாப்புழ.. இனிமே போண் பண்ணாய்ங்கனா தேர்தல் கிட்டே நெருங்கும்போது வரச்சொல்லு.. அப்பதான் நமக்கு 25 அவிய்ங்களுக்கு 15னு பேச முடியும்.. பேரம்பேசி முடிக்கிறப்போ ஃபிப்டி ஃபிப்டினாவுது முடிக்கலாம். சும்மா சும்மா போற வர்ற வழிலலாம் நின்னுகிட்டு வணக்கம் வைக்குறது.. அதை போட்டோ புடிச்சு ஃபேசுபுக்குலபோடுரதெல்லாம் வேண்டாம்னு ஸ்டிரிகா சொல்லிடு ,மாப்ழ..ஆங்..

தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணிக்காட்சிகள் அரங்கேறும் போது அடுத்தடுத்த காட்சிகளும் அரங்கேறும்.

சனி, 20 ஏப்ரல், 2013

இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்படம். டிவிடி ரிப்.


மூவர் தூக்கினைத் தடுத்து நிறுத்தக்கோரி நெருப்புக்குத் தன்னுயிரை இரையாய்த் தந்து ஈகம் செய்திட்ட தோழர் செங்கொடியின் தியாகத்தை பதிவு செய்த ஆவணப்படம்தான் “இப்படிக்கு தோழர்.செங்கொடி”

இவ்வரலாற்று ஆவணம் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டியது என்கிற நோக்கத்திலேயே இதற்கான ”டொரண்ட்” பதிவிறக்கச் சுட்டியைப் பகிர்ந்து கொள்கிறேன்.


பார்த்துவிட்டு பின்வரும் சந்ததிகளுக்காகப் பாதுகாக்க வேண்டிய இந்த குறுவட்டு சென்னையில் டிஸ்கவரி புத்தகக் கடையில் வெறும் ரூ.100 க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.  வாங்குகிற திறனும், வசதியும் படைத்தவர்கள் தயவுசெய்து வாங்கி நம் சமகால வரலாற்றைப் படமாக்கிய ஆவணப்படக் குழுவினருக்கு உதவ வேண்டுமென வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.


பேராசிரியர் புல்லர் அவர்களின் மரணதண்டனைக்கான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் தூக்குக் கயிறும் இறுகத் துவங்கியுள்ளது.  பஞ்சாப் அரசு பேராசிரியர் புல்லரின் தூக்குத்தண்டனையை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி நமக்கு வழிகாட்டியுள்ளது. தமிழகத்தில் மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி அதன்மூலம் தமிழக அரசுக்கு நிர்ப்பந்த்தத்தினை ஏற்படுத்தி தமிழக அரசு மூவர் தூக்கினை நிறுத்தி வைத்திட அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிடுமானால், அவர்களின் தூக்குக்கயிறினை அறுத்தெறியும் முயற்சியில் மிகவும் உதவியாக இருக்கும்.

பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற முன்னெடுப்புகளைச் செய்துவரும் வேளையில் ஏப்ரல் 30ல் சென்னையில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுள்ளது. அனைவரும் பங்கேற்க வேண்டியது மிக அவசியம்.

மரண தண்டனையை ஒழித்திடுவோம். மனிதநேயம் காத்திடுவோம்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

அமாவாசை கருணாநிதியும் அதற்கடுத்த நாள் ஜெ.வும் - 1

டுவிட்டர் ஒரு நீரோடை போன்றது. அதில் புதுப்புது செய்திகள் நொடிக்கொருதரம் நம் கண்முன்னே மின்மினிப் பூச்சி மாதிரி வந்து ஓடி மறையும். அரட்டையைத் தாண்டி நேரக்கோட்டில் வந்து போகும் மிகச்சுவாராசியமான தகவல்கள்தான் ஐந்தாண்டுகளைத் தாண்டியும் டுவிட்டரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. 140 எழுத்துகள் என்கிற கட்டுப்பாட்டுடன் நம் கருத்துகளை திடமாகவும், தெளிவாகவும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகிறது டுவிட்டர்.

அண்மையில் டுவிட்டர் நண்பர்களுள் ஒருவரான செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுடன் உரையாட நேர்ந்தது. நான் நீண்ட நாட்களாக கருணாநிதிக்கு எதிர் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்து வருவதை கவனித்து வந்திருப்பார் போல. அவர் தீவிர கருணாநிதி ஆதரவாளராக இருப்பினும்  பிற கருணாநிதி ஆதரவாளர்களைப் போலவே வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு அதனை யாரிடமும் காட்டிக்கொள்ளமாட்டார். சமீபத்தில் ”டெசோ” நாடகக் கம்பேனியில் நித்தமொரு நாடகம் என்கிற வகையில் புதிய புதிய காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பழைய சம்பவங்களை, கருணாநிதியின் தமிழினத் துரோகங்களையெல்லாம் மக்கள் மறந்து விட்டிருப்பர் என எண்ணிக்கொண்டு, இப்போது வாயைக் கொடுக்கலாம் என்று என்னிடம் பேச வந்திருப்பார் போலும்.மறதிதானே தமிழக மக்களின் சாபக்கேடும் கருணாநிதி போன்ற நபர்களின் முதலீடும்.

செய்யாறு அருண் பேச வருகையில் தனியாளாக வரப் பயந்தாரோ என்னவோ, கருணாநிதியும் அவர் குடும்பமும் வெளித்தள்ளும் குப்பைகளை வியந்தோதிவரும் @thedonashok என்கிற நபரை கோர்த்து இழுத்து வந்தார். என்ன நோக்கமிருந்ததெனத் தெரியவில்லை.ஒருவேளை என்னோடு விவாதம் செய்து கருணாநிதி கும்பலின் துரோகங்களை நியாயப்படுத்தி புள்ளிவிபரங்களை அள்ளி விடுவார் என கருதியிருக்கக்கூடும். அந்த நபரோ ஆங்காங்கே கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களின் வசனத்தை காப்பியடித்து கருணாநிதிக்கெதிரான தலைவர்கள் மீது கருத்துகள், “கமெண்டு”கள் என்கிற போர்வையில் அவதூறுகளை இணையத்தில் எழுதி கருணாநிதியின் ரசிகர்களுக்கு சிரிப்புக் காட்டி காலத்தை ஓட்டி வருபவர் போல. கருணாநிதியே ஒரு காலி பெருங்காய டப்பா. இதில் இவர் கூட்டி வந்த நபர் ஒரு முனகலைக்கூடச் செய்யாமல் காணாமல் போய் விட்டார்.

விவாதத்தின் மையம் இதுதான்.

அனைவரும் கருணாநிதியை மிக மோசமான அரசியல்வாதி எனக் கருணாநிதியைச் சுட்டுகிறார்களே? திட்டுகிறார்களே? அப்படியென்றால் ஜெயலலிதா என்ன யோக்கியமா? ஜெயலலிதாவை ஏன் திட்டுவதில்லை.

தமிழகத்தின் கீழ்த்தரமான அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா? 

தமிழகத்திற்கு அதிக அளவில் தீங்கிழைத்தவர் கருணாநிதியா? ஜெயலலிதாவா?

அரசியல் நாகரீகம் பேணாத அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா?

இது போன்று கருணாநிதியையும் ஜெ.வையும் ஒப்பிடக்கூடிய வகையிலான கேள்விகள்.

ஒப்பீடு என வந்துவிட்ட பிறகு என்னளவில் மேலே கேட்டது போன்ற கேள்விகளுக்கான பதில் கருணாநிதிக்கு முதலிடமும் ஜெ.வுக்கு இரண்டாமிடமும் வழங்குவதே சரியென்றேன். மேலும் விளக்கங்கள் வேண்டுமெனில் ஒவ்வொரு நிகழ்வாக “கேஸ் பை கேஸ்” எவ்வாறு கருணாநிதி தமிழகத்தில் மிகவும் கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றினார் என்பதை விளக்கவும் ஆயத்தமானேன்.

அவரும் புதிய சட்டசபை, நூலகம், சமச்சீர்கல்வி, தமிழ் புத்தாண்டு என ஜெ.மீது சில குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஜெ.தானே கருணாநிதியைவிட மோசம் எனச் சொன்னார். ஜெ. நல்லவரென்றோ அவரை ஆதரிப்பதோ எனது நோக்கமில்லை. கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ஜெ.எவ்வளவோ மேல்.

2011ல் தமிழினத் துரோகி கருணாநிதியை வீட்டுக்கனுப்பி ஜெ. ஆட்சிக்கு வந்தபிறகு..

”பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கினை நிறுத்தக்கோரும் தீர்மானம்.
முல்லைப்பெரியாறு அணையைக் காக்க நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டம்.
காவிரியில் தமிழக உரிமையைக் காக்க நடத்திய சட்டப்போராட்டம்.
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் தமிழீழம் குறித்து பேசுகிற, போராடுகிற உரிமையை/சுதந்திரத்தை வழங்கியது.”

என்பன போன்ற மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரிய செயல்களைச் செய்தவர். இதற்கெல்லாம் பாராட்டவில்லையெனில் தமிழன் நன்றி மறந்தவன் ஆவான்.



அண்ணா உருவாக்கிய மக்கள் இயக்கமாகிய தி.மு.க.வை கபளீகரம் செய்திட கருணாநிதி செய்த தகிடுதத்தங்களையும், பித்தலாட்டங்களையும், தமிழக அரசியலையும் தமிழ் நாட்டையும் எவ்வாறு பாழ்படுத்தினார் என்பதையும், தன் குடும்ப உறுப்பினர்கள் அப்பாவி மக்கள் உழைத்துச் சேர்த்த சொத்தினை அபகரிக்கவும், அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடவும் திட்டமிட்டு சொந்தக் கட்சிக்காரர்களுக்கு சில எலும்புத்துண்டுகளை போட்டுவிட்டு  குடும்ப உறுப்பினர்களைக் கட்சியிலும் அரசிலும் உயர் பதவிகளில் ஏற்றி வைத்தது குறித்தும் பல்வேறு துறை சார்ந்தோர் பலநூறு பதிவுகளைச் செய்திட்ட பிறகும் எனது மனதில் பட்டவைகளை, எனது பார்வையில் பதிவு செய்திட வேண்டும் அதையும் கருணாநிதி சாகும் முன் எழுதிவிட வேண்டுமென வெகுநாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். செத்தபிறகு கருணாநிதி போன்ற நபர்களுக்கும் ஊர் ஊருக்கு சிலை வைத்து புனிதர் பட்டம் வழங்கி விடுவர் என்பதை கருத்தில் கொண்டே இந்த சாகும்முன் பதிவுத் திட்டம்.



கவிதாயினி தாமரை அவர்கள் ஒரு கூட்டத்தில் ”கருணாநிதி ஒரு அமாவாசை ஜெ. அதற்கடுத்த நாள்” என்று தமிழகத்தையும், தமிழர்கள் வாழ்வையும் இருளில் தள்ளியவர் கருணாநிதி என்கிற பொருள்பட கூறிய சொற்றொடரை இந்த ஒப்பீட்டுப் பதிவுகளுக்கு தலைப்பாக வைப்பது சாலப் பொருந்துமெனக் கருதுகிறேன். தலைப்பு வழங்கிய கவிதாயினி தாமரை அவர்களுக்கு நன்றி.


ஒரு பதிவிற்கு ஒரு நிகழ்வு மட்டும் எடுத்துக்கொண்டு விரிவாக அலசவேண்டும் என எண்ணியிருக்கிறேன்.கருணாநிதி பலநூறு ஆண்டுகாலம் வாழவேண்டும், அவர் வாழும் வரை இந்த பதிவையும் நீண்ட நெடுந்தொடராக எழுத வேண்டுமென்பதே என் அவா. இந்தத் தொடர் பதிவை எழுத ஊக்கமளித்த செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுக்கு நன்றி!!!

தமிழகத்திற்கு புதிய சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டுவதில் கருணாநிதி செய்த கீழ்த்தரமான அரசியலும் அதனை மருத்துவமனையாக மாற்றிய ஜெ.வின் பழிவாங்கலும் அடுத்த பதிவில்...

(தொடரும்..)

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நடைபயண நாயகனும்.. 1200 ஸ்பார்ட்டா நிகர் வீரர்களும்..

ஸ்பார்ட்டா தேசத்தின் முந்நூறு வீரர்கள், பத்து லட்சம்பேர் கொண்ட பாரசீகத்தின் படையை எதிர்த்து நின்றனர். அவர்களின் பயணம் நீண்டதாக இருந்தது. இலக்கு வெகு தூரமாக இருந்தது. பாரசீகப் படையை எதிர்த்து அவர்கள் பயணம் துவங்குகிற வேளையில் கிரேக்க தேவதையிடம் அருள்வாக்கு கேட்டார்களாம். நீங்கள் துவங்குகிற இந்தப் பயணத்தில் வெல்ல முடியாது, உங்களால் பாரசீகப் பெரும்படையை வெல்ல இயலாது எனக் குறிப்பு வந்ததாம். கிரேக்கதேவதையே குறிப்புணர்த்திய பிறகும் அவர்கள் சபதமேற்றுப் பாரசீக சேனையை எதிர்கொள்ள முன்னேறினர். 

நாங்கள் சரணடையப் போவதில்லை. எந்தக்காரணம் கொண்டும் முன்வைத்த காலைப் பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் புறமுதுகு காட்டிப் ஓடப்போவதில்லை. மானத்தையே எங்கள் உயிராக மதிக்கிறோம். நாங்கள் உயிரையும் தருவோம். இந்த மண்ணின் மானம் காக்க மடிந்து போனாலும் போவோமே தவிர ஒருபோதும் எதிரிகளிடம் சரணடைய மாட்டோம்”

என்று முழங்கியவாறு முன்னேறிச் சென்றனர். ஸ்பார்ட்டாவின் வீரர்கள் வீரச்சமர் புரிந்ததால் போர் நீண்டுகொண்டே சென்றது. கிரேக்கத்திலிருந்தே ஒரு துரோகி பாரசீகப் படைக்கு குறுக்கு வழியைக் காட்டிக் கொடுத்தான். அவன் பாரசீகப்படைக்கு ஸ்பார்ட்டாவின் வீரர்களைப் பின்புறமாகச் சுற்றிவளைக்கும் வழியைக் காட்டிக் கொடுத்தான். துரோகியின் யோசனைப்படி பாரசீகப்படை ஸ்பார்ட்டா வீரர்களை சுற்றிவளைத்து தாக்கியது.

இலட்சக்கணக்கான அம்புகள் தாக்கின. இலட்சம் அம்புகள் தாக்கிய போதும் லட்சியத்திலிருந்து விலகாமல் போராடி மடிந்தனர் ஸ்பார்ட்டாவின் வீரர்கள்.

மேலே சொல்லப்பட்ட ஸ்பார்ட்டா வீரர்களின் கதையை நாம் கண்களால் வாசித்து, மனதினில் உள்வாங்கி, உணர்வு நரம்புகள் மூளைக்கு எடுத்துச் செல்கிறபோதே உடலில் இருக்கும் மயிர்க்கால்கள் அத்தனையும் எழுந்து நிற்கிறதே.. 

இதே போன்றதொரு வீர வரலாற்றுக் காவியத்தைத்தான் நாம் வாழ்கின்ற நாளிலே, நம் கண் முன்னே நிகழ்த்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள். இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் உதவியோடு நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு வரலாற்றை எழுதியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

வைகோவும் அத்தகைய ஒரு பயணத்தைத்தான் இப்போது துவங்கியுள்ளார். இது ஆயுதங்கள் தாங்கிய எதிரியை ஆயுதங்களால் தாக்கியழிக்கும் போரல்ல.. ஒரு உளவியல் போர். ஆம் 1200 தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி வீரர்களுடன் வைகோ துவங்கியிருக்கும் மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணம் ஒரு உளவியல் போர்தான்.

பத்து, இருபதாண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் மதுக்கடைகள் இருந்தன. ஆனால் மக்களிடம் குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததில்லை. மது அருந்துபவன் குடிகாரன் என அழைக்கப்பட்டு சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுவிடுவான். வீட்டுக்கு அடங்காதவர்கள், தறுதலைகள், சமூகவிரோதிகள், வாழ்க்கையில் தோல்வியடைந்து விரக்தியில் உழல்பவர்களுக்கு போதை ஒரு வழியாகத் தெரிந்து மதுக்கடைகளை நாடிச் செல்வது வழக்கமாக இருந்தது. மதுக்கடைகள்/கள்ளுக்கடைகள் ஊருக்கு வெளியிலே ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்தன. 

ஆனால் இப்போது நிலைமையென்ன? அரசே தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்துள்ளது. மது என்கிற கொடிய அரக்கன் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையே சுற்றி வளைத்து விட்டான். மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதாகப் பெருகிவிட்டது. மது அருந்துவதற்கான காரணங்களும் பெருகி விட்டன. முன்பெல்லாம் நண்பர்கள் சேர்ந்தால் அமர்ந்து பேச அரட்டையடிக்க தேனீர்க்கடை பெஞ்சுகளை நிரப்புவார்கள். அந்தக் கூட்டமெல்லாம் இப்போது மதுக்கடைகளில் குடிப்பகங்களை நிரப்புகிறது. குடிப்பழக்கமில்லாதவர்களுக்கு நண்பர்கள் கிடைப்பதில்லை.  மாணவர்கள், பெண்கள் என மது வாடையே பட்டிராத சமூகத்தின் பகுதிகள் கூட அரக்கனின் பிடியில் சிக்கிவிட்டனர். 

குழு குழுவாகச் சென்று மது அருந்துபவர்களால் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மது அருந்துபவர்கள் அனைவரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லைதான். ஆனால் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு மது ஒரு ஊக்கசக்தியாக மது இருக்கிறது. பெரும்பாலான குற்றச் செயல்களைச் செய்தவர்கள் மதுவின் ஆதிக்கமில்லையென்றால் அச்செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. நல்ல மனிதனையும் நாசக்காரனாக்குகிறது மது. மது குடித்தவர்களால் இயல்பு நிலையில் இருக்கமுடிவதில்லையே.. எத்தனையெத்தனை விபத்துகள். குடித்தவர்களால் நிகழ்த்தப்படும் விபத்துகளில் குடிப்பழக்கமே இல்லாத அப்பாவி மக்கள் கூடப் பலியாகிவிடுகிறனர். 

எனவே மது அரக்கனை ஒழித்து தமிழ்ச்சமூகத்தைக் காப்பாற்றும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. 

மதுவிலக்கு சாத்தியமா? ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட இயலுமா? அரசு மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடாதா? இதெல்லாம் அனைவருக்கும் எழுகின்ற கேள்விகள்.

இது போன்ற கேள்விகள்தான் வைகோ அவர்களின் நடைபயணத்தின் நோக்கத்தைக் கேலி செய்ய வைக்கின்றன. வேறு சிலர் அரசியல் காரணங்களுக்காக இந்த மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணத்தைக் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

மதுவிலக்கு சாத்தியம்தான். அரசால் மதுக்கடைகளை மூடிவிட இயலும். கள்ளச்சாராயம் விற்கப்படுமே எனகேட்பீர்களேயானால்...

ஆமாம். உண்மைதான். கள்ளச்சாராயம் வரலாம். சமூக விரோதச் செயல்களைத்தடுப்பதுதான் அரசின் வேலையாக இருக்க முடியும். மது அருந்தும் நண்பர்களிடம் கேட்கிறேன் யாரெல்லாம் கள்ளச்சாராயத்தை அருந்துவீர்கள்? நிச்சயம் சட்டத்தை மதிக்கிற, சாதாரண மக்கள் கள்ளச்சாராயத்தை அருந்தமாட்டார்கள். மாறாக கள்ளச்சாராயத்தை அருந்துபவர்கள் சமூக விரோதிகள் என அறியப்படுவார்கள். மது அருந்துவதுதான் நாகரீகம் என்கிற நிலைபோய் கள்ளச்சாராயத்தைக் குடிப்பவர்கள் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு முன்புபோல மதுக் குடிப்பது கேவலம் என்கிற நிலைமை வரும்.

இது மக்கள் மத்தியில் மிகப்பெரும் உளவியல் மாற்றத்தைக் கொண்டு வரும். அது போன்ற ஒரு உளவியல் பிரச்சாரம்தான் வைகோவின் மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணம். ஆயிரம் பேரைத் திரட்டி சென்னையில் பனகல் மாளிகை முன்பாகவோ, ஆட்சியர் அலுவலகம் முன்பாகவோ ஒருநாள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்திருக்க முடியும். சேப்பாக்கத்திலோ, ராசரத்தினம் விளையாட்டரங்கத்தின் அருகிலோ ஒருநாள் உண்ணாவிரதமிருந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருக்க முடியும். ஆனால் கோடிக்கணக்கான மக்களை அவர்கள் வாசலுக்குச் சென்று சந்தித்து மதுவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய வைக்க இது போன்ற நடைபயணங்களாலேயே சாதிக்க முடியும்.

நம் மக்களுக்கு என்ன தேவை.. நம் மக்களை நோக்கி என்ன இடர் நெருங்கி வருகிறது என்பதை அவர்களுக்கு விளக்கிப் புரியவைத்து தூண்டிவிட வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது. அந்த நிலையில்தான் நமது ஊடகங்களும், ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளும் நம் மக்களை வைத்துள்ளன.

முல்லைப் பெரியாறில் இதுதான் நடந்தது. முல்லைப்பெரியாறில் கேரள அரசின் சதிச்செயலை முன்கூட்டியே அறிந்து மதுரையில் இருந்து கூடலூர் வரை அனைத்துக் கிராமங்கள் வழியாக நடைபயணம் செய்து சூழவிருந்த இன்னலை மக்களுக்கு எடுத்துரைத்தார். எத்தனையெத்தனை போராட்டங்கள். வீதி வீதியாக கால்கடுக்க நடந்தார். மக்கள் ஆதரவு இருப்பது போலவே தெரியாது. இறுதியில் கேரளம் அணையை உடைக்க முற்பட்டபோது தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மக்கள் ஒன்று திரண்டு அந்தச் சதியை முறியடித்தனர்.

அதே போலத்தான் மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணமும். நீண்ட நெடிய பயணம். இது போன்ற பயணங்களுக்கு அவர் தளபதிகளையும் தொண்டர்களையும் தயார் செய்யும் உத்தி அனைவரிலும் மாறுபட்டது.

மாவீரன் இராயபுரம் இரா.ஏழுமலை அவர்கள் நினைவுநாளில் வைகோ ஆற்றிய உரையின் ஒரு பகுதியைப் படிக்க..

இந்த உன்னதமான நோக்கத்திற்கான நடைபயணத்திற்காக தமிழகம் முழுவதும் சல்லடை போட்டுச் சலித்ததுபோல மது அருந்தாத, மதுவிலக்கின் அவசியத்தை தாங்களாகவே உணர்ந்த தொண்டர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தார்.

மதுவிலக்கின் அவசியத்தை உணர்ந்த பெற்றோர் சிலர் தமது பிள்ளைகளையும் நடைபயணத்தில் இணைத்துவிடக்கோரி வைகோவிடம் ஒப்படைத்தனர். அவர்களையெல்லாம் புறக்கணித்து தாமாகவே முன்வந்த இளைஞர்களை மட்டுமே தேர்ந்த்தெடுத்தார். அரசியல் கட்சி நிகழ்ச்சிகளனைத்தும் மது மற்றும் பிரியாணிப் பொட்டலங்களை நம்பியே நடந்துவரும் இன்றைய சூழலில் அந்த மதுவை எதிர்த்தே இளைஞர்களைத் திரட்ட வைகோ அவர்களால் மட்டும்தானே சாத்தியமாகியது.






பெண்களை இப்போராட்டத்தில் ஏன் இணைத்துக்கொள்ளவில்லை எனத் தெரியவில்லை. உடல்வலு, தங்குமிடம் மற்றும் இயற்கை உபாதைகள் கருதி இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும். பெண்களையும் இணைத்துக்கொண்டிருந்தால் போராட்டத்தின் வீரியம் பன்மடங்கு பெரிதாயிருந்திருக்கும். எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஸ்பார்ட்டா வீரர்களும், விடுதலைப்புலிகளும் அவர்களது போராட்டத்தில் தோற்றுத்தானே போனார்கள், எதிரிகளால் பேரழிவைச் சந்தித்தார்களே என்கிறீர்களா?

நிச்சயம் அவர்கள் தோற்கவில்லை. அவர்கள் உருவாக்கிய விடுதலையுணர்ச்சியே பின்னர் அலெக்சாண்டர் போன்ற கிரேக்க வீரர்கள் உலகையே வெல்ல காரணமாயிருந்தது. அதேபோல விடுதலைப் புலிகள் செய்த தியாகம் ஒருநாள் தமிழீழம் பெற்றுத்தந்தே தீரும்.

நடைபயண நாயகன் வைகோ மற்றும் ஸ்பார்ட்டா நிகர் வீரர்களின் இலட்சியம் நிச்சயம் வெல்லும். மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணம் மட்டுமல்ல, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழர் வாழ்வைக் கரைசேர்க்கத்தான். அந்த இலட்சியப்பயணம் ஒருநாள் நிச்சயம் வெல்லும்.