செவ்வாய், 8 ஜனவரி, 2013

துரை தயாநிதி - பின் - அழகிரி - பின் - கருணாநிதி ஏன் தி.மு.க. தலைவராகக் கூடாது?

அரபு நாடுகளில் இன்னார் மகன் இன்னார் என்பதைக் குறிக்க  இருவர் பெயர்களுக்கிடையில்  ”பின்” என்னும் சொல்லைப் பயன்படுத்திக் குறிப்பிடுவார்கள்.



கருணாநிதியின் மகன் அழகிரியின் ஒரே ஆண் வாரிசான துரை தயாநிதி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார் அவரது தந்தையான - பட்டத்து இளவரசர் பதவியைத் தம்பி ஸ்டாலினிடம் பறிகொடுத்த - அழகிரி.

கருணாநிதியிடமிருந்து கற்ற வித்தையைக் கருணாநிதியிடமே செயல்படுத்திப் பார்க்கிறார் அழகிரி.

அழகிரியின் மகன் துரை தயாநிதி, அவரது நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் அவருக்கு மக்கள் நலனிலோ, திராவிட இயக்கக் கொள்கைகளிலோ கிஞ்சிற்றும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லையே.. இவர் எதோ மைனர் போல இருக்கிறார். தந்தை நீட்டிய இடங்களிலெல்லாம் பினாமியாக கையெழுத்துப் போடுகிறார். கையெழுத்துப் போட்டதன் விளைவாகவே மாபெரும் இயற்கைவளச் சுரண்டல் விவகாரங்களில் ஒன்றான கிரானைட் கொள்ளை வழக்கில் சிக்கி நான்கைந்து மாதங்களாகத்  தலைமறைவாக சுற்றித் திரிந்து விட்டு நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் பிணை விண்ணப்பித்து, பிணை கிடைத்ததும் ஊருக்குள் தலை காட்டுகிறார். 

மறுபுறம் ஊழல் செய்து சேர்த்த பணத்தை வைத்து கிளவுட் நைன் நிறுவனம் மூலம் கோடிகளைக் கொட்டி சினிமாப்படமெடுக்கிறார். கறுப்பை வெள்ளையாக மாற்றுகிறார். (அவர் சேர்த்த பணம் ஊழல் மூலம் வந்ததல்ல எனக்கருதுவோர் அவர் பணம் சேர்த்த வழிகள் தெரிந்தால் கூறவும்).

இன்னும் மாறன்களுக்கு போட்டியாக கேபிள் தொலைக்காட்சி விவகாரங்கள், திரைப்பட நடிகைகளுடன் தொடர்பிருப்பதாக வரும் தகவல்களையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் இவர் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாகத்தானே தெரிகிறார். 

தி.மு.க.வின் தலைமைப் பீடத்தை அலங்கரிக்க இவருக்கு என்ன தகுதியிருக்கிறது என தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் கொதித்துபோயிருப்பார்களேயானால்......

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், இப்போது தி.மு.க.வின் பட்டத்து இளவரசராகவும், கருணாநிதியின் காலத்திற்குப் பிறகு தி.மு.க.வின் தலைவராக முன்மொழியப்பட இருப்பவருமான ஸ்டாலின் பன்மடங்கு தீராத விளையாட்டுப் பிள்ளையாகத்தானே சென்னையில் வலம் வந்தார். பள்ளிப்படிப்பைத் தாண்டியதில்லை.

அவர் சினிமாவில் நடிகராக முயற்சி செய்தது, சிலபல பலான விவகாரங்களில் அவர் பெயர் அடிபட்டது என இன்றைய துரை தயாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல ஸ்டாலின். திராவிட இயக்கக் கொள்கைகளிலோ, தமிழ் மக்கள் நலனிலோ சிறிதும் தொடர்பில்லாமலிருந்த ஸ்டாலின் கருணாநிதியால் வலிந்து திணிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப் பட்டார். மிசா காலத்தில் சிறையிலடைக்கப்பட்டதையே வாழ்நாள் சாதனையாகச் சொல்லி வருகிறவர்கள், மிசாவில் இலட்சக்கணக்கான திமுகவினர் சிறையிலிருந்தார்களே அவர்களெல்லாம் தி.மு.க. தலைவர் பதவியைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

தி.மு.க.வில் இதனைத் தட்டிக்கேட்ட அத்தனை பேரையும் திட்டமிட்டு வெளியேற்றி கழகத்தைக் குடும்ப நிறுவனமாக மாற்றினார் கருணாநிதி. ஸ்டாலினின் முடிசூட்டலை ஆதரிப்பவர் மட்டுமே தி.மு.க.வில் இருக்க முடியும், மற்றவர்களுக்கு இடமில்லையெனும் சூழல் உருவாக்கப்பட்டது. கட்சிக்குள்ளேயே இருந்து குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்த ஒரே ஆள் வீரபாண்டி ஆறுமுகம்தான். அவர் உயிரோடு இருந்த காலம்வரை சேலம் பகுதியில் கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை. 

இதனைக் கவனத்தில் கொண்டுதானோ என்னவோ வீரபாண்டி ஆறுமுகம் அ.தி.மு.க அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போது பிணையில் வரவேண்டாமென கூறியது கருணாநிதி குடும்பம். வேறு யாருக்கும் தமிழக அளவில் போராட்டம் நடத்தவில்லை, உங்களுக்காக கழக்த்தின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போகிறோம். நீங்கள் பிணையில் வந்துவிட்டால்  போராட்டத்திற்கு வலுவான காரணம் கிட்டாது என கூறி அவரைச் சம்மதிக்க வைத்தனர்.

தங்கள் குடும்ப அங்கத்தினரோ அல்லது குடும்ப அங்கத்தினருக்கு பல்லக்கு தூக்கும் பொன்முடி போன்ற அல்லக்கைகளெல்லாம் ஊழல் வழக்குகளில் பிணையில் வெளியே வந்தபோது தடுக்காத கருணாநிதி குடும்பம், ஏற்கனவே உடல் தளர்ந்திருந்த வீரபாண்டி ஆறுமுகம் பிணையில் வருவதை சதி செய்து தடுத்தது.

இது போன்ற சதிகளின் காரணமாகத்தானோ என்னவோ சிறையில் இருந்து வெளிவந்த சில நாட்களில் வீரபாண்டி ஆறுமுகம் இயற்கை எய்திவிட்டார். அவர் மறைந்த சில நாட்களிலேயே சேலம் பகுதியில் கருணாநிதி குடும்பம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது.

இதுநாள்வரை அடக்கி வாசித்துக்கொண்டிருந்த கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை தி.மு.க. தலைவராக முன் மொழியப் போவதாக கிசுகிசுவை அவரே கிளப்பிவிட்டு பிறகு அதற்குப் பதிலளிக்கப் போவதாக நாடகமாடி அறிவித்துவிட்டார்.

இது போன்ற நாடகங்களைக் கவனித்த அழகிரி இனி தி.மு.க.வில் நாம் தலைவராக நினைத்தால் அது இந்தப் பிறவியில் நடக்காது. கனவாகவே அமையும் என்ன செய்யலாம் என நினைத்து விட்டத்தைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் உதித்ததுதான் இந்த உபாயம்.



எப்படியும் நாம் தலைவராக முடியாது ஏனென்றால் கருணாநிதிக்கு அடுத்த தலைமுறைத் தலைவராக ஸ்டாலின் முன்மொழியப்பட்டுவிட்டார். கழகக் காளைகள் அனைத்தும் இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் வசக்கப்பட்டுவிட்டன. ஆனால் அதற்கு அடுத்த தலைமுறைக்கு ஸ்டாலினுடைய மகன் உதயநிதி பின் ஸ்டாலினோ அல்லது அவரது பேரன் இன்பநிதி பின் உதயநிதி பின் ஸ்டாலின் பின் கருணாநிதியோ அறிவிக்கப் படவில்லை.. இதுதான் சரியான தருணம். அவர்களுக்கு முன்னதாக நம் மகனை அதாவது துரை தயாநிதி பின் அழகிரி பின் கருணாநிதியை அறிவித்துவிட்டால் கழகக் காளைகளும் பூம்பூம் மாடுகளைப் போலத் தலையாட்டித்தான் தீரவேண்டும். குடும்பப் பஞ்சாயத்துகளுக்கு உள்ளேயும் நான்தானே முதலில் சொன்னேன் எனச் சொல்லி வாதத்தில் வெற்றிக்கனியைப் பற்றிவிடலாம் என்கிற தந்திரோபாயம்தான் அது.

இப்போது சொல்லுங்கள் இருபது வருடங்களுக்கு முன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்த ஸ்டாலின் பின் கருணாநிதி தி.மு.க. தலைவராக வருவது பொருத்தமாக இருக்குமானால் இப்போது தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் துரை தயாநிதி பின் அழகிரி பின் கருணாநிதி ஏன் தி.மு.க. தலைவராக கூடாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக